Sunday, February 24, 2008

09. இஇ - பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில்

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.

திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே


பன்னிரண்டு - பன்னிருகை வேல் வாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேலினைப் பிடித்துக் கொண்டு
பதினொன்று - பதினொருவர் படை தாங்க - முருகப் பெருமானின் படைக் கலன்கள் மொத்தம் பன்னிரண்டு. ஆனால் பன்னிரண்டு கரங்களிலும் இப்பொழுது வேலைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மற்ற பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.

பத்து - பத்துத் திக்கும் - பத்துத் திசைகளிலும். அதென்ன பத்து? எட்டுத் திக்கு என்றுதானே கேட்டுள்ளோம். மிச்ச இரண்டும் எங்கிருந்து வந்தன? சுற்றியுள்ள எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேருங்கள். எட்டு பத்தாகும்.
ஒன்பது - நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் நவவீரர்களால் புகழப் படுகின்ற. வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார்களாம்.
எட்டு, ஏழு - மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற
ஆறு - பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்
ஐந்து - அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் ஒழித்து
நான்கு, மூன்று - புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்
இரண்டு - தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்
ஒன்று - தருமொருவன் - தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான்
குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே - திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதும் பொருட்டு எனக்குத் தமிழ் தந்தானே.

வெறுமனே முருகன் தமிழைத் தந்தான் என்று சொல்லாமல். எண்களைக் கொண்டு விளையாடியிருக்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழறிவை என்னவென்று வியப்பது!

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, August 14, 2007

08. இஇ - மடப்பாவையார் நம் வசமாக

"கண்டதே காட்சி; கொண்டதே கோலம்" என்று ஒரு வழக்கு உண்டு. அந்த வழக்கிற்கு முழுமுதற் காரணம் தமிழர்களிடம் இருந்த உலகாயதத் தத்துவம். இது சற்று விவகாரமானது என்று இன்று பலர் சொல்வார்கள். காரணம் இது இறைவனை வணங்குதலை மறுத்து எழுந்த தத்துவம். கிட்டத்தட்ட நாத்திகம் என்றே சொல்லலாம்.

வாழும் வரையில் இன்புற்று வாழ வேண்டும். யாருக்கும் தொந்திரவாகவும் இராமல் வாழ்க்கையை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு இன்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதே உலகாயதத் தத்துவம். இந்தத் தத்துவம் முன்பு வெளிப்படையாகவே பிரபலமாக இருந்திருக்கிறது. இது சரியா தவறா என்று தர்க்கிப்பதை விட இதனைத் தெரிந்து கொள்ளும் முகமாக ஆதிநாதன் வளமடல் என்ற நூலைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நூலை எழுதியவர் செயங்கொண்டார். இவரேதான் கலிங்கத்துப் பரணி பாடியவர். முதற் குலோத்துங்கச் சோழனது அவைப்புலவர். இந்த நூலை ஆதிநாதன் விழுப்பரையன் என்பவர் மேல் எழுதியிருக்கிறார். இந்த ஆதிநாதன் என்பவர் சோழனது தளபதியாக இருந்திருக்கிறார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள காராணை என்ற ஊர்க்காரர் இவர். இவரது குடி விழுப்பரையர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயரின் வழியாக அமைந்ததே இன்றைய விழுப்புரம்.

ஆதிநாதன் வளமடல் என்று அழைக்கப்படும் இந்த நூல் காராணை விழுப்பரையன் மடல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிநாதன் என்ற பெயரைப் பாருங்கள். நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக இருக்கிறது. இதனால் கடவுள் வாழ்த்து நீங்கலாக அனைத்துப் பாடல்வரிகளையும் நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக வைத்து எழுதியிருக்கிறார் செயங்கொண்டார். எடுத்துக்காட்டிற்கு கீழே உள்ள மூன்று அடிகளையும் பாருங்கள்.
பாதி உடம்பொருத்திக்கு ஈந்தும் படர்சடையின்
மீதும் ஒருத்திக்கு இடம் கொடுத்து அரனார்
காதல் உழந்திலரோ?
இப்படித்தான் நூல் முழுவதும் அமைந்திருக்கிறது.



கொன்றை முடித்தார்க்கும் கோபாலர் ஆனார்க்கும்
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம் - இன்று
மடப்பாவை யார் நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு


சரி. நாம் கடவுள் வாழ்த்துக்கு வருவோம். கடவுளை மறுக்க வேண்டும். ஆனால் காதலைப் பெரிதாக்கிச் சொல்ல வேண்டும். அதைத்தான் மேலே குறிப்பிட்ட செய்யுளில் நான் காண்கிறோம்.

கொன்றை முடித்தார்க்கும் - கொன்றை மலரைச் சூடிய சிவனுக்கும்
கோபாலன் ஆனார்க்கும் - கோபாலன் என்ற பெயரில் வந்து பிறந்த திருமாலுக்கும்
அன்று படைத்தார்க்கும் - மண்ணுலகத்தை அன்று படைத்த நான்முகனுக்கும்
ஆளல்லேம் - அடியவர்கள் அல்லர் நாங்கள்
இன்று மடப்பாவை யார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு - காதல் நோயைத் தீர்க்கும் பாவையரிடம் நமக்காக தூது செல்வார் யாரோ, அவரே தெய்வம்.

மூன்று மூர்த்திகளையும் தெய்வமல்ல என்று மறுத்து காதல் தூதுவர்களையே தெய்வம் என்கிறார் செயங்கொண்டார். தமயந்திக்கு அன்னம் தூதானது. சகுந்தலைக்கு மேகம் தூதானது. தென்றல் தூதான கதைகளும் உண்டு. ஓடும் நீர் தூதானதும் உண்டே. அகநானூறு படித்தால் இயற்கை பலவிதங்களில் தூதானது விளங்கும். அந்தத் தூதும் காதலுக்குத் தோதாக வேண்டும். அதுதான் உலகாயதத் தத்துவம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, July 11, 2007

07. இஇ - புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் மகாகவி பாரதியார். அவரைப் பற்றிய அறிமுகம் எந்தத் தமிழனுக்கும் தேவையில்லை. தமிழ் தழைக்கப் பிறந்த தவப்பயன். நல்லவர். வல்லவர். நடுநிலையானவர்.

ஒருவர் நடுநிலையானவரா என்று எங்ஙனம் அறிவது? அவரது கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். எண்ணத்தில் மட்டுமில்லாது எழுத்திலும் செயலிலும் இருக்க வேண்டும். பாரதி இருந்தார். இதோ புதிய ஆத்திச்சூடியின் கடவுள் வாழ்த்தைப் படித்தீர்கள் அல்லவா. இதுதான் உண்மையான மதநல்லிணக்கம்.

புதிய ஆத்திச்சூடியை எப்பொழுது எழுதினார்? இந்திய நாடு ஒரு விடுதலைப் போராட்டத்தில் இருந்த காலகட்டம். அப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் நெஞ்சில் நிறைந்து வீரம் சிறந்து போராடும் வகைக்குக் கருத்துச் சொல்ல வேண்டும். மதம், மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடச் செய்ய வேண்டும். அப்படிப் பட்டக் கருத்துகளைச் சொல்லும் ஒரு நூலை எந்த இறைவனைப் புகழ்ந்து துவக்குவது!

பாரதி சுடர்மிகும் அறிவுடையோன். அதை அவனே அறிந்தவன். ஆகையால்தான் இத்தனை சிறப்பான கடவுள் வாழ்த்தைப் பாட முடிந்திருக்கிறது.

ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்
கருநிறங் கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவாம்


முதலில் விரிசடைக் கடவுளில் துவக்குகிறார். "சிவபெருமான் என்றும் கரியமால் என்றும் முகமது நபியவர்களுக்கு மறை தந்தவன் என்றும் ஏசுவைத் தந்தவன் என்றும் பலவிதங்களில் கொண்டாடுகின்ற பரம்பொருளின் இயல்பு என்ன தெரியுமா? அது நல்லறிவாகும். அந்த நல்லறிவின் வழி சென்றார்க்கு அல்லல்கள் தீரும்."

என்ன அருமையான கடவுள் வாழ்த்து. மதநல்லிணக்கமில்லாதவரால் இப்படிப் பாட முடியுமா! ஆகையால்தான் பாரதியை வரகவி என்று நாம் கொண்டாடுகின்றோம்.

ஆத்திச்சூடி அணிந்து இளம்பிறை சூடி மோனத்து இருக்கும் முழுவெண் மேனியன் - ஆத்தி மலரைச் சூடியவர் என்று கொண்டாடப் படுகிறவர் சிவபெருமான். தமிழகத்திற்கே உரிய சைவ சித்தாந்தம் சொல்கிறது. இளம்பிறையைச் சூடிக்கொண்டு மோனத்திருக்கும் முழுவெண் மேனியன். இறைவன் அனைத்தையும் இயக்கியும் ஒன்றும் இயங்காமலும் இருப்பார். அதுதான் மோனத்திருப்பது. முழுவேகத்தில் சுழல்கின்ற மின்விசிறியைப் பார்த்தால் சுழலாமல் இருப்பது போல இருக்கும். அப்படித்தான் இருக்கும் சிவபெருமானின் மோனத் திருக்கோலம்.

கருநிறங் கொண்டு பாற்கடல்மிசை கிடப்போன் - "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" என்பார் இளங்கோவடிகள். மாலின் நிறம் கரியது. அவன் அருளோ அனைவருக்கும் உரியது. அவன் அன்போ அனைத்திலும் பெரியது. அந்த மாலும் கடலில் கிடக்கிறார். அந்தக் கடலும் பாற்கடல். ஓயாத தூக்கம். நெடுஞ்சாண்கிடையாகப் படுத்து ஆழ்ந்த தூக்கம். இதுவும் சிவபெருமானின் மோனத்தைப் போலத்தான்.

முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் - இஸ்லாமியக் கோட்பாட்டில் குரானைச் சொல்லியவர் முகமது நபி. ஆனால் குரானைப் படைத்தவர் இறைவன். ஆம். இறைவனுடைய திருத்தூதனாக இஸ்லாமியர்கள் நபிகளைக் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் நபிகளைப் புனிதராகக் கருதினாலும் கூட, அல்லாவைத்தான் வணங்குவார்கள். இஸ்லாமிய நம்பிக்கையில் இறைவன் உருவமும் பெயரும் அற்றவன். அல்லா என்பது கூட இறைவனின் பெயர் அன்று. இறை என்பதற்கு இணையான அராபியச் சொல்.

ஏசுவின் தந்தை - மரியாளுக்குப் பிறந்தவராயினும் ஏசுபிரான் தேவ மைந்தன் என்றே புகழப்படுகிறார். திருக்குரானும் ஏசுவை ஈசா என்ற பெயரில் குறிப்பிடுகிறது.

இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இறைவழிபாடுகளைக் கொண்டுள்ளனர். இவற்றில் உயர்ந்தது தாழ்ந்தது என்று வேற்றுமை பாராட்டுவது மடமை. அப்படி வேற்றுமை பாராட்டமல் இருக்க என்ன வேண்டும்? நல்லறிவு வேண்டும். நல்லறிவு படைத்தவன் எவன் ஒருவனோ, அவனே எந்த மதத்தையும் இழிவாக எண்ணக்கூட மாட்டான். ஆகையால்தான் பலவிதங்களில் வழங்கினாலும் "பரம்பொருள் ஒன்றே" என்னும் பாரதியார் அந்தப் பரம்பொருளின் இயல்பை "ஒளியுறும் அறிவு" என்கிறார்.

ஒளியுறும் அறிவு என்றால் சுடர் மிகு அறிவு என்று பொருள். அந்த நல்லறிவு கொண்டவர் தமது வாழ்வில் அல்லல் படார். மற்றவர்களுக்கும் அல்லலாக இரார். அந்தச் சுடர் மிகும் நல்லறிவைப் பெற்று நல்வாழ்வு எய்துவோம் என்று புதிய ஆத்திச்சூடியைத் துவக்குகிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, July 04, 2007

06. இஇ - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழ்க் காப்பியங்களுள் தலை சிறந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் இணைந்து இயைந்து எழுந்த முத்தமிழ்க் காப்பியம். அக்காப்பியத்தை நமக்குத் தந்தவர் இளங்கோவடிகள்.

இளங்கோவடிகளின் சமயம் உறுதியாக அறியப்பட முடியவில்லை. இவர் பிறப்பால் சைவ மரபில் வந்தவர். அதாவது விரிசடைக் கடவுளையும் கொற்றவையையும் முருகனையும் வழிபடும் மரபில் பிறந்தவர். இவர் துறவு பூண்டவர். சைவத் துறவி என்றும் சொல்வர். சமணத் துறவி என்றும் சொல்வர். இரண்டிற்கும் ஆதாரமில்லை. சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் சமணம் பேசியதால் இவர் சமணர் என்று சொல்வதும் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இவர் முருகனையும் கொற்றவையையும் விரிசடை கடவுளையும் கண்ணனையும் புகழ்ந்து பலபாடல்களும் வைத்துள்ளார். இவர் உண்மையிலேயே சமய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இப்படிப் பட்டவர் யாரைப் போற்றி காப்பியத்தைத் துவக்கியிருப்பார்! அங்கும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம். இயற்கையைப் போற்றியே தனது காப்பியத்தைத் துவக்கியிருக்கிறார்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார் சென்னி குளிர் வெண்குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்தலான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்


முதலில் திங்களைப் போற்றுகிறார். திங்களைப் போற்றுதும். திங்களைப் போற்றுதும். ஏனாம்? கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடைபோன்று இவ்வங்கணுலகு அளித்தலான். ஒரு அரசனுடைய ஆட்சி என்பது நாட்டிற்கு மிகத் தேவை. ஒரு நல்ல அரசனது வெண்கொற்றக் குடைகீழ் மக்கள் இன்பமாக வாழ்வார்கள். அதுபோல நிலவின் அடியிலும் மக்கள் இன்புறத்தான் செய்வார்கள். நிலா யாருடைய மேனியையாவது தீய்த்துண்டா! அரசு என்பது அப்படி இருக்க வேண்டும் என்பது இவ்வரிகளின் மறைபொருள்.

அடுத்தது ஞாயிறைப் போற்றுகிறார். ஞாயிறு போற்றுதும். ஞாயிறு போற்றுதும். ஏனாம்? காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந் திரிதலான். திகிரி என்றால் சக்கரம். காவிரி நாடன் திகிரி என்றால் சோழனது ஆணைச் சக்கரம். அந்த ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களுக்கும் சென்று நலன் பயப்பது போல ஞாயிறும் உலகெலாம் திரிந்து நன்மை பயப்பதால். என்னதாய் சுட்டாலும் சூரியன் இல்லாமல் இருக்க முடியுமா!

மூன்றாவதாக மழையைப் போற்றுகிறார். மாமழை போற்றுதும். மாமழை போற்றுதும். ஏனாம்? நாமநீர் வேலி உலகிற்கு அவனளி போல் மேல் நின்று தான் சுரத்தலால். இந்தப் பாடலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

நாமநீர் வேலி உலகிற்கு - அச்சந்தருமளவிற்குப் பெருகியிருக்கும் நீர்ப்பரப்பை எல்லையாகக் கொண்ட உலகிற்கு
அவன் அளி போல் - சோழனுடைய கொடையைப் போல்
மேனின்று தான் சுரத்தலான் - மேலே நின்று தான் சுரத்தலால்.

மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும் (ஆட்சிமையும் நீதி நியாயங்களும்) அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள். அப்பொழுதுதான் நாடு துலங்கும். இல்லையேல் சீரில்லாத மழையால் உலகம் வாடுவது போல சீரில்லாத ஆட்சியில் மக்கள் வாடுவார்கள்.

இப்படி திங்களையும் ஞாயிறையும் மழையையும் போற்றித் துவக்கிய சிலப்பதிகாரம் திங்களும் ஞாயிறும் மழையும் உள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, June 26, 2007

05. இஇ - நல்வழி

நல்வழி என்பது வாழ்க்கை நலம் சிறந்த நல்ல வழிமுறைகளைச் சொல்லும் நூல். இந்த நூலை இயற்றியவர் பிற்கால ஔவைகளில் ஒருவர். இந்த ஔவையார் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் பரவியபின் வந்த ஔவை. ஆகையால் பிள்ளையாரை வணங்கி இந்த நூலைத் தொடங்கியிருக்கின்றார்.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா


முத்தமிழிலும் சிறப்புற்று இருந்தால்தான் அருந்தமிழ் நூல்களைப் படைக்க முடியும். அப்படிப்பட்ட நூல்களே காலத்தை வென்று நிலைக்கும். அப்படிப்பட்ட நூலாக நல்வழி இருக்க விரும்பிய ஔவை விநாயகப் பெருமானிடம் தமிழ் மொழியில் திறமை பெருக வேண்டும் பாடலே கடவுள் வாழ்த்து.

வணிகத்தில் வெற்றி என்பது குறைவாகக் கொடுத்து நிறைய பெற்றுக் கொள்வது. அப்பொழுதுதான் லாபம் கிடைக்கும். சும்மா கேட்டால் யாரும் எதையும் தருவார்களா! ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்க வேண்டும். அதுதான் பண்டமாற்று.

இங்கேயும் ஒரு பண்டமாற்று. நான்கைக் கொடுத்து விட்டு மூன்றைக் கேட்கிறார் ஔவை. பார்த்தால் ஔவைக்கு நட்டம் போலவும் பிள்ளையாருக்கு லாபம் போலவும் தோன்றும். ஆனால் உண்மையில் லாபம் ஔவைக்குதான்.

பால், தேன், பாகு மற்றும் பருப்பு ஆகிய நான்கையும் தருகிறேன். அதற்கு ஈடாக மூன்றே மூன்று தமிழ்களைத் தந்தால் போதும் என்று பெரிய மனது செய்கிறார் ஔவை. என்ன கிண்டல் பாருங்கள்! பக்தியோடு கலந்த கிண்டல் என்பதால் இதுவும் சிறப்பே.

பாலும் இனிமை. அதோடு கலந்த தேனும் இனிமை. உடன் சேர்ந்த பாகும் பருப்பும் இனிமை. இந்த இனிமைகளையெல்லாம் தருகின்றேன் இறைவா! இவைகள் அனைத்தையும் விட இனிமையான இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழை நீ எனக்கு அருள்வாயாக!

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, June 19, 2007

04. இஇ - திருவிளையாடல்

திருவிளையாடற் புராணத்தை அருளியவர் பரஞ்சோதி முனிவர். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். ஆகையால் நூலின் தொடக்கத்தில் விரிசடைக் கடவுளையும் பராசக்தியையும் முருகக் கடவுளையும் சமயக்குரவர்களையும் வணங்கித் துவக்குகிறார். நாம் இப்பொழுது பார்ப்பது பராசக்தி துதி.

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்


இறைவன் பண்பு நலன்களை எப்படிச் சொல்லிக் கொண்டு போனாலும் சொற்கள் பத்தாது. ஆகையால் ஒரு பண்பை மட்டும் இங்கே சொல்கிறார். அண்டங்கள் எல்லாம் அணுவாக பெரிதாயினான். அண்டம் என்பது மிகப் பெரியது. அந்த மிகப் பெரிய அண்டங்கள் எல்லாம் அணுவளவுக்கும் சிறியது என்று எண்ணும்படியாக பெரிய உருவெடுத்து நின்றார் சிவபெருமான்.

அணுக்கள் மிகச்சிறியவை. வெற்றுக் கண்கொண்டு காண முடியாதவை. அந்த அணுக்களெல்லாம் அண்டங்கள் என்று பெரிதாகத் தோன்றும் படிக்குச் சிறியதாகவும் தோன்ற வல்லார் விரிசடைக்கடவுள். அதாவது இறைவன் பெரியவைகளுக்கெல்லாம் பெரியவன் சின்னவைகளுக்கெல்லாம் சின்னவன் என்று சொல்கின்றார்.

ஏனிப்படிச் சொல்ல வேண்டும்? அந்த விடையை அடுத்த வரியில் சொல்கிறார் பரஞ்சோதிமுனிகள். அண்டங்கள் உள்ளும் புறமும் கரியாயினான். அதாவது அண்டங்களுக்குள் அடங்கியும் அண்டங்களுக்கு வெளியிலும் விரிந்தவன் இறைவன் என்கிறார். அண்டங்கள் அணுக்களால் ஆனவை. ஆகையால் இறைவன் அணுக்களுக்குள் அடங்க வேண்டுமானால் அணுவை விடச் சிறியவனாக இருக்க வேண்டும். அம்மாதிரியே அண்டங்கள் எல்லாம் அவனுக்குள் அடக்கமென்றால் அவன் அண்டங்களையெல்லாம் பெரிதாக இருக்க வேண்டும். இப்படி அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் இறைவனைக் கடவுள் என்று தமிழ் போற்றுகிறது.

இத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட ஈசனுக்குத் துணை யார் தெரியுமா? அண்டங்களை எல்லாம் ஈன்ற பராசக்தி. "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே" என்கிறார் அருணகிரி. உலகங்களையெல்லாம் படைத்தவளே பராசக்தி! இருந்தாலும் உன்னைக் கன்னியென்றே மறைநூல்கள் புகழும் ஆனந்த வடிவாகிய மயிலே!

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 07, 2007

03. இஇ - தண்டியும் கிழவியும்

தண்டியலங்காரத்தை இயற்றியவர் தண்டி என்ற பெயரில் வழங்கப்படுகிறார். இவர் தண்டியாசிரியர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் காளிதாசரின் காலத்தை ஒத்தவர் என்று கூறுகின்றவர்களும் உண்டு. ஆனால் அதற்கு ஆதாரம் இருப்பது போலத் தெரியவில்லை.

தண்டியலங்காரம் என்பது இலக்கண நூல். இது செய்யுட்களின் இலக்கணத்தைப் பற்றி விளக்குகிறது. ஒரு காப்பியம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய இலக்கணம் என்ன? அந்தக் காப்பியத்தில் பயன்படுத்த வேண்டிய செய்யுட்களின் வகைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் விளக்கும் நூல் தண்டியலங்காரம்.

இப்படிப்பட்ட நூலை யாரை வணங்கித் துவக்கியிருப்பார் தண்டியாசிரியர்?

சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல் செய்யுட் கணியே


சொல்லின் கிழத்தியைப் புகழ்ந்து தனது இலக்கண நூலைத் துவக்குகிறார். சொல்லின் கிழத்தி என்றால்? கிழவன் என்றால் தலைவன் என்று பொருள். கிழத்தி என்றால் தலைவி. இல்லக் கிழத்தி என்று இல்லத்தலைவியைச் சொல்கின்றோம் அல்லவா. திருமுருகாற்றுப்படையில் முருகனைக் "குறிஞ்சி மலைக் கிழவோனே" என்று நக்கீரரும் பாடியிருக்கிறார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். சொல்லின் கிழத்தி யார்? சொற்களுக்கெல்லாம் தலைவிதான் சொல்லின் கிழத்தி. கலைமகளைத் தொழுது தனது இலக்கண நூலைத் துவக்குகிறார்.

சொற்களின் நயத்தைப் பாருங்கள். சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடியாம். சொற்களின் தலைவியாகிய கலைமகளின் மெல்லிய திருவடிகள் என்று பொருள். அந்தத் திருவடியில் சிந்தை வைத்து இயம்புகிறார் தண்டி. எதை இயம்புகிறார்? செய்யுட் கணியை!

செய்யுட் கணியா? அப்படியென்றால்! கணி என்றால் கணக்கு. ஒரு செய்யுளைச் செய்யும் கணக்கை இயம்புகின்றாராம். அதாவது இலக்கணம். ஒரு நூலைப் படைக்க வேண்டிய செய்யுட்களைச் செய்யும் இலக்கணங்களை சொல்லின் கிழத்தியின் மெல்லியல் இணையடியில் சிந்தை வைத்துத் துவக்குகிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, May 29, 2007

02. இஇ - புகழேந்தி யாருடைய புகழை ஏந்தி

நளவெண்பாவை இயற்றியவர் புகழேந்திப் புலவர். இவர் பாண்டி நாட்டுப் புலவர். கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் சமகாலத்தவர். பாண்டியன் மகளைச் சோழன் மணந்ததால் அவளோடு அறிவுருத்தும் ஆசானாய்ச் சோழநாடு புகுந்தவர். நளவெண்பா என்னும் பெயரிலிருந்தே இந்நூல் முழுக்க முழுக்க வெண்பாக்களால் ஆனது என்று விளங்கும். மேலும் நளவெண்பா உவமை அழகும் மிகுந்த நூல். அந்த நூலை எழுதுகையில் சைவராகிய புகழேந்தி யாருடைய புகழினை ஏந்தித் தொடங்குகிறார்?

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என்னென்றான் எங்கட்கு இறை

மகாபாரதத்தின் கிளைக்கதையாக வரும் நளதமயந்திக் கதையை நூலில் வடிக்கும் பொழுது திருமாலைத் தொழுது துவக்குகிறார் புகழேந்தி. திருமாலைத் தொழுகின்றவர்கள் அவரே ஆதியென்று தொழுவார்கள். ஆகையினாலே நூலின் ஆதியிலேயே ஆதித் தனிக்கோலம் ஆனான் என்று திருமாலைப் புகழ்கிறார். தனிக் கோலம் என்பது தனியாக அமர்ந்திருப்பது அல்ல. தனக்கு இணையாக எவரும் இல்லாதிருப்பது. "தனியானை சகோதரனே" என்று கந்தரநுபூதியில் அருணகிரி சொல்வதும் இதே தனிமைதான்.

அடியவற்காச் சோதித் திருத்தூணில் தோன்றினான் என்று ஒரு கதையைச் சொல்கிறார் புகழேந்தி. இறைவன் அனைத்தையும் கடந்து அனைத்திற்கும் உள்ளே இருப்பவன் என்பதை அறியாதவன் இரண்யன். அவனுக்குப் பாடம் சொன்னன் ஒருவன். அதுவும் அவன் பெற்ற மகன். இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற தனது மகனின் கூற்றை ஏற்க முடியாமல் திணறினான். தூணிலும் இருப்பானவன் துரும்பிலும் இருப்பான் என்று மகன் கூறவும் ஆணவம் கொண்டு தூணைத் தகர்த்தான் இரண்யன். அந்தத் தூணிலிருந்து மனித ஏறாக வந்தார் இறைவன். அந்த நிகழ்ச்சியைத்தான் தூணில் தோன்றினான் என்று நினைவு கூறுகிறார்.

அனைத்து வேதத்திற்கும் முன்னின்ற அவனை ஒரு வேழம் அழைத்தது. இறையறிவு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் செடிகொடிகளுக்கும் மற்றும் எல்லா உயிர்களுக்கும் உண்டு. அப்படி இறையறிவுள்ள ஆனை ஒன்று தாமரை மலரைக் கொய்ய ஆற்றில் இறங்கியது. அங்கிருந்த முதலையானது பசி கொண்டு ஆனையின் காலைக் கவ்வியது. அப்பொழுது ஆதிமூலமே என்று ஆனை நம்பி அழைத்ததால் என்னென்று கேட்டு ஓடி வந்து காத்தார் திருமால்.

ஆதித்தனிக்கோலம் ஆனானவனும், அடியவன் சிறுவனுக்காகத் தூணில் மனித ஏறாகத் தோன்றியவனும், வேதத்திற்கெல்லாம் முன்னிற்பவனும், ஆதிமூலமே என்று அழைத்த மாத்திரத்தில் என்னவென்று கேட்டவனுமாகிய திருமாலே எங்களுக்கு இறைவன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, May 24, 2007

01. இலக்கியத்தில் இறை - குறுந்தொகை

பைந்தமிழ் இலக்கியங்கள் படிக்கத் திகட்டாதவை. அந்தத் தீஞ்சுவைத் தமிழ் மாலைகளில் தேன் துளியாக இறைவணக்கப் பாடல்கள் நிறைந்து சிறந்துள்ளன. இறைவனைத் தமிழால் அழகு மிகும் சொற்களால் அன்பால் புனைந்த அந்த இறைவணக்கப் பாக்களைப் பூக்களைத் தேடும் வண்டாய்த் தேடித் தேடி செந்தமிழ்த்தேன் துளிகளைச் சேகரித்துப் படைப்பதில் உவப்படைகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு இறைவன் அருளால் அப்பாக்களுக்குத் தப்பாத வகையில் பொருளுரைக்கிறேன். இலக்கியத்தில் இறை நம் தமிழ்ப் பசிக்கு இரை.

குறுந்தொகை

குறுந்தொகை என்னும் நூல் அகப்பாடல்களின் தொகுப்பு. பல புலவர்கள் படைத்த தனிப்பாடல்களின் தொகுப்பு. இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியன் காப்ப
ஏமவைகல் எய்தின்றால் உலகே

தமிழ்க் கடவுள் முருகனைப் பாடிய இறைவணக்கப் பாடல் இது. மூத்தகுடியாம் தமிழ்க் குடியில் மூத்த தெய்வம் முருகனைப் பாடாதார் யார்? தன் பங்கிற்குப் பெருந்தேவனார் இந்தப் பாடலில் முருகன் அருளால் உலகின் காக்கப்படுவதைச் சொல்கின்றார்.

தொடக்கத்திலேயே திருவடியைப் பற்றிச் சொல்கின்றார். "பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்" என்பது வள்ளுவன் வாக்கு. இறைவனடியைச் சேர வேண்டும். ஆகையால் முருகப் பெருமானின் திருவடியைப் புகழ்ந்து செய்யுளைத் துவக்குகிறார் பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று கந்தனடிகளைச் சொல்கின்றார். தாமரை மலர்களை ஒத்த அழகனுடைய திருவடிகள் என்று பொருள். திருப்புகழில் அருணகிரிநாதரும் "தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும் தன்கழல் சிலம்புடன் கொஞ்சவே" என்று முருகன் திருவடிகளைப் புகழ்கிறார்.

பவழத்தன்ன மேனி. பவழம் செக்கச் சிவந்தது. முருகப் பெருமானி திருமேனியும் சிவந்தது. இங்கே சிவப்பு என்பது செம்மை என்னும் பண்பைக் குறிக்கும். முருகனுடைய மேனி மட்டுமா செம்மை. உடுக்கையும் செம்மைதான். முருகனுக்கு ஏதடா உடுக்கை! அது சிவனுக்கு உரியதாயிற்றே என்று எண்ணாதீர்கள். உடுக்கை என்பது உடுத்தும் துணியைக் குறிக்கும். "உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்ற குறளையும் நினைவிற் கொள்க.

குன்றின் நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் என்று முருகனுடைய திருக்கை வேலின் சிறப்பைச் சொல்கிறார். மாயை என்பது இருள். ஞானம் என்பது ஒளி. இருள் அனைத்தையும் மறைக்கும். ஆனால் ஒளி வந்ததுமே இருள் விலகும். மாயையின் வடிவாக எழுந்து அனைத்தையும் மறைத்தது கிரவுஞ்ச மலை. வேல் ஞானத்தின் வடிவம். வேலெறிந்து கிரவுஞ்ச மலையைத் தூளாக்கினார் முருகன். ஞானம் அல்லது அறிவு சுடர் விட்டு ஒளிர வேண்டும். ஆகையால்தான் "அஞ்சுடர் நெடுவேல்" என்று பெருமதிப்போடு கூறுகின்றார். "கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே" என்று இதே கருத்தை கந்தரநுபூதியும் பகர்கிறது.

ஏமவைகல் என்றால் பாதுகாப்பான நிலை என்று பொருள். இது பழந்தமிழ்ச் சொல். பாதுகாப்பான நிலையை உலகம் எய்தியதாம். எதனால்? சேவலங் கொடியன் காப்ப. தாமரைத் திருவருடிகளையுடைய அழகனும், செம்மைப் பண்புடைய செவ்வேளும், மாயையைச் சாடும் சுடர்வேலைப் படித்தவனும், சேவற்கொடியைக் கொண்டவனுமாகிய முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பது பெருந்தேவனார் கருத்து.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 29, 2007

52. கடைக்குட்டி

கடவுள் வாழ்த்தோடு சேர்த்து இதுவரை ஐம்பத்தோரு பாடல்களைப் பார்த்தாகி விட்டது. இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது. இதுவரை பார்த்த அத்தனை பாடல்களையும் ஒன்றாகச் செய்து ஒரு பாட்டு செய்திருக்கிறார் அருணகிரி. ஏனென்றால் இந்தப் பாடல் கடைமணியல்லவா.

வீட்டில் மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சி நிறைய இருக்கும். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் கடைசிக் குழந்தைகள் அறிவுணர்ச்சி நிறம்பியதாக இருக்கும். அதனால்தான் கடைக்குட்டி செல்லக்குட்டி என்று கொஞ்சுகின்றார்கள். மூத்தபிள்ளை மீது தாய்க்குப் பாசம் நிறைய இருக்கும். ஏன் தெரியுமா? தான் வயிறு விளங்க வைத்த குழந்தையல்லவா. ஆனால் கடைசிக் குழந்தை மீது தந்தைக்குப் பாசம் இருக்கும். தான் இன்னமும் ஆண்மையோடு இருப்பதை உணர்த்திய குழந்தையல்லவா!

அருணகிரி தாயும் தந்தையுமாக இருந்து கந்தரநுபூதியை நமக்கு வழங்கியிருக்கிறார். அதனால்தான் முதல் பாடலும் கடைசிப் பாடலும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. தாயின் பண்பு அன்பு. அதனால்தான் அன்போடு "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக" என்று முதற் பாடலைத் துவக்குகிறார். ஐம்பத்தோரு பாடல்கள் பாடியும் இன்னுமொரு பாடல் படைக்க முடிந்ததே என்ற அன்பில் கடைசிப் பாடலை தமிழ் சொற்களாலும் கருத்துகளாலும் செதுக்கியிருக்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பாடலைக் கடைசியாகவே பார்ப்போம். அதற்கு முன் இதுவரை பார்த்தவைகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

ஒரு நூல் இயற்றப் படுமானால் அது எந்தச் சூழ்நிலையில் இயற்றப் பட்டது என்பதையும் அறிந்து அந்த நூலைப் படிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் புரட்சிகரமாகக் கருதப் பட்டவை இன்றைக்கு வழக்கமான ஒன்றாக இருக்கலாம். அந்தப் புரட்சிக் கருத்தை வைத்து எழுதப் பட்ட பழைய கதையை அப்படியே படித்தால் சுவை தெரியாது. அலுப்பூட்டும். கதையின் காலகட்டத்தின் பின்புலத்தைத் தெரிந்து படித்தால் சுவை கூடும். சிறந்த எடுத்துக்காட்டு இந்திய விடுதலைப் போராட்டக் கதைகள் மற்றும் வரலாற்று உண்மைகள்.

கந்தரநுபூதி எழுதப் பட்ட காலகட்டத்தின் பின்புலத்தைப் பார்க்கலாம். பழந்தமிழகத்தில் மதங்களிடையே ஒற்றுமை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இளங்கோவடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சைவ வழி மரபில் வந்த அவர் துறவியாக மாறினார். அவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம். மற்ற நான்கு பெருங்காப்பியங்களும் மத அடிப்படையில் எழுந்த பொழுது, இளங்கோ தனது காப்பியத்தில் மதச்சார்பின்மையை முழுமையாகப் பின்பற்றியிருக்கின்றார்.

வஞ்சிக் காண்டம் துவங்குவதே முழுக்க முழுக்க முருகன் புகழைப் பாடித்தான். இளங்கோ கவுந்தியடிகள் வழியாக ஆங்காங்கே சமணம் வேறு சொல்லியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மணிமேகலையை எழுதிய சாத்தனாரோ முழுக்க முழுக்க புத்தம் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு வந்த சமயக்குரவர்களுக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின்னால் மதச்சார்பின்மை பேசியது அருணகிரிதான்.

அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் மலிந்திருந்த காலம். குறிப்பாகச் சைவ-வைணவச் சண்டைகள் பெருகியிருந்த காலம். திருக்கோயில்களில் வடமொழி மலிந்திருந்த காலம். தமிழ் என்பது பக்தி வழக்கிற்கு வராது என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த காலம். அப்படிப் பட்ட நேரத்தில் அருணகிரி வரிசை வரிசையாகப் பாடுகிறார். கோயில் கோயிலாகப் பாடுகிறார். மூன்று குறிக்கோள்கள் அவருக்கு. தமிழ்க் கடவுளைப் பாட வேண்டும். தமிழை கோயிலுக்குள் மீண்டும் குடியேற்ற வேண்டும். சமயப் பூசல்களைக் குறைக்க வேண்டும்.

மூன்று குறிக்கோள்களையும் முறையாக நிறைவேற்றினார் அவர். தமிழ்க் கடவுளைப் புகழ்ந்து எத்தனையெத்தனை பாடல்கள். திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தலரங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவேளக்காரன் வகுப்பு என்று நிறையப் பாடியிருக்கிறார்.

அடுத்தது தமிழில் பக்திச் சுவை காட்டுவது. முதலில் பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்து திருப்புகழைப் பாடினார். பிறகு சிறிதுசிறிதாக வடமொழியை விடுத்து தீந்தமிழில் பாடினார். "சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகரார்வம் ஈ" என்று பாடியிருக்கிறார் திருப்புகழில். கந்தரந்தாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இது அந்தாதிகளில் மிகவும் சிறப்புடையது. யமக அந்தாதி என்ற வகையைச் சார்ந்தது. அந்தாதி என்றால் முதற் செய்யுளின் முடிவும் அடுத்த செய்யுளின் தொடக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும். இதுவும் இருந்து, ஒரு செய்யுளின் எல்லா அடிகளும் ஒரே தொடக்கத்தில் இருக்க வேண்டும். மிகவும் கடினமானது. அப்படி நூறு பாட்டுகள் பாடியிருக்கிறார்.

சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றாகப் பாவித்து முருகனைப் பாடியிருக்கின்றார். சிவன் மகனே என்று பாடியதோடு நில்லாமல் திருமால் மருகன் என்றும் திரும்பத் திரும்பப் பாடி இரண்டு சமயத்திற்கும் இடைவெளி குறைத்திருக்கிறார். திருச்செந்தூரில் முருகன் கோயிலுக்குள்ளே ஒரு பெருமாள் சந்நதி உண்டு. அது ஆதியில் இல்லாதது. பிற்காலத்தில் உண்டானது.

முருகனைப் பற்றிப் பாடினாலும் அனைத்துத் தெய்வங்களும் ஒன்றுதான் என்ற கருத்தை வலியுறுத்த மெய்ப்பொருளை முன்னிறுத்தியே பாடினார். கந்தரநுபூதியே முழுக்க முழுக்க மெய்ப்பொருள் தத்துவத்தைதான் விளக்குகிறது. எந்த உருவத்தில் வழிபட்டாலும் உருவமில்லாத ஒரு சக்திதான் நம்மைக் காக்கிறது என்பதையும் விளக்காமாகச் சொல்லியிருக்கிறார்.
"உருவன்று அருவன்று உளதன்று இலதன்று" - கந்தரநுபூதி
"குறியைக் குறியாது குறித்து அறியும்" - கந்தரநுபூதி
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" - கந்தரநுபூதி
"அசரீரியன்று சரீரியன்றே" - கந்தரலங்காரம்
"மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" - திருப்புகழ்

இறைவன் திருவருளைப் பெற்று மெய்ப்பொருளை உணர்வது பேரின்பம். அதை அனுபவித்தவர் அருணகிரி. ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் முடியவில்லை. அதையும் ஒத்துக்கொண்டு விடுகின்றார்.
"முருகன் சரணம் சூடும்படித் தந்தது சொல்லுமதோ?"
"இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"
"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"

பேரின்பத்தை சொல்ல முடியாவிட்டாலும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார் அருணகிரி. ஆண்டவனாகப் பார்த்து அருளினால்தான் நாம் உய்ய முடியுமென்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
"யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்"
"நேசா முருகா நினது அன்பருளால்......பேசா அநுபூதி பிறந்ததுவே"
"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்ததுதான்'
"முருகன்....நம் குருவென்று அருள் கொண்டு அறிவார்"

தெய்வத்தைச் சரணடைவதை விட பெறும் பேறில்லை என்பதைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்விக்கவே தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றையெல்லாம் மனமாறப் படித்தாலே வினைகள் நீங்கும். துணைகள் தாங்கும்.

புலனடக்கம் வேண்டுமென்பதை வள்ளுவர் முதற்கொண்டு பெரியவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். அருணகிரியும் அதையே கூறுகிறார். ஐவாய் வழி செல்லும் அவா வினையாகும் என்பதை எடுத்துக் கூறி, ஐம்புலன்களால் நாம் செய்யும் எந்தச் செயலும் யாருக்கும் எந்தத் துன்பத்தையும் தராத வகை வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார்.

பற்றற்ற நிலையைப் பாடிப் புகழ்ந்தவர் இல்லறத்தையும் நல்லறமென்று கூறத் தவறவில்லை. இல்லறமோ பற்றற்ற நிலையோ எந்த வழியில் சென்றாலும் முறையாக வாழ வேண்டும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை. பரத்தையர் ஒழுக்கத்தைக் விடக் கூறிய அருணகிரி பரத்தையரைக் குறை கூறவில்லை. அவர்கள் மீதாக மயக்கம் போக வேண்டும் என்றுதான் பாடுகிறார். காரணம் பரத்தையர் ஒழுக்கத்திற்குக் காரணம் ஆசையே. அந்த ஆசை போனால் அநுபூதி கிடைக்கும். "ஆசா நிகளம் துகளாயின் பின் பேசா அநுபூதி பிறந்ததுவே".

தெய்வம் பலப் பலச் சொல்லி பகைத் தீயை வளர்க்கும் மூடர்களுக்கு நடுவில் அனைத்துத் தெய்வங்களையும் அள்ளிப் போட்டுக் கவி சமைத்து அந்த அருஞ்சுவைப் பொருளை நமக்குக் கொடுத்த அருணகிரியின் அன்பையும் தன்மையையும் எப்படிப் பாராட்டுவது. முருகா என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறினாலும், ஒரு பெயரும் ஒரு உருவமும் இல்லாத இறைப் பண்பை விளங்கச் சொன்ன அருணகிரி கந்தரநுபூதியையும் அந்தக் கருத்தை முன்னிறுத்தியே முடிக்கின்றார்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 22, 2007

51. அரவாடினாலும் அறவாடினாலும்

அநுபூதி என்றால் என்னவென்று சொல்லியாகி விட்டது. அநுபூதியின் அருமை பெருமைகளைச் சொல்லியாகி விட்டது. அநுபூதியின் தன்மைகளையும் திண்மைகளையும் முடிந்த வரை சொல்லியாகி விட்டது. அநுபூதியை அடையும் வழிமுறைகளையும் சொல்லியாகி விட்டது. கந்தரநுபூதி பற்றிய நூலை முடிக்க வேண்டும். முடிக்கும் பொழுது முருகனைப் பாடித்தான் முடிக்க வேண்டும்.

ஆனால் அதற்கும் முன்னால் ஒரு வேலை இருக்கிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பது பாடல்களைப் பாடி விட்டார் அருணகிரி. இந்தக் கந்தரநுபூதியைப் படித்தால் என்ன பயன் கிடைக்க வேண்டுமென்று சொல்ல வேண்டுமல்லவா. ஒரு பொருளை விற்கும் பொழுது என்ன பயன்கள் என்று சொல்லித்தானே விற்பார்கள். அதுதானே விற்பனை முறை.

ஆனால் அருணகிரி முருகனருளை விற்க விரும்பவில்லை. மக்கள் கற்க விரும்புகிறார். ஆகையால் நமக்காக வேண்டிக் கொண்டு ஒரு பாடல் பாடுகிறார். அதுதான் இந்தப் பாடல். இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தது. தலைவர்கள் விடுதலை கேட்டார்கள். அவர்கள் கேட்டது அவர்களுக்கு மட்டுமா? ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்தானே! அந்த பொதுவுள்ளம் வாய்ந்தவர் அருணகிரி. நமக்காகத் தன் மீதும் குற்றத்தை ஏற்றிக் கொண்டு பாடுகிறார்.

மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப-அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே


மதி கெட்டால் அறவாடும். அறவு என்றால் ஆற்றல். ஆற்றல் வாடுதலே அறவாடல். அரவு என்றால் பாம்பு. அரவு ஆடும். நம்முன்னே அரவாடினாலும் அறவாடினாலும் முடிவு துன்பந்தான். எந்தத் துன்பம் வந்தாலும் நமது ஆற்றலை இழக்கக் கூடாது. ஆற்றல் போனால் தூற்றல் வரும். ஆம். ஆற்றல் இழந்தவனை உலகம் தூற்றும்.

ஆற்றலோடு இருந்தவரையில் இராவணனை எல்லா உலகமும் தொழுதது. பதவியில் இருப்பவர் காலில் விழும் வழக்கம் அன்றைக்கே இருந்திருக்கிறது. அவன் ஆற்றல் இழந்து போர்க்களத்தில் வெறுங்கையோடு நின்ற பொழுது "இன்று போய் நாளை வா" என்று ராமன் சொன்னது கருணையென்றாலும் ஒரு வகையில் தூற்றலே. அதனால்தான் அப்படிச் சொன்னதற்கு ராமனுக்குப் பெருமை சூழ்ந்தாலும் இராவணனுக்கு அவமானம் சூழ்ந்தது. தலையைக் குனிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகல வேண்டியதாயிற்று. அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

அதனால்தான் அருணகிரி வேண்டுகிறார். மதிகெட்டு ஆற்றல் இழந்து மயங்கி அறக்கதி கெட்டு ஒழிவதோ! முருகா நீதான் காப்பாற்ற வேண்டும்.

அறம் என்பது மிகப் பெரிய சொல். "அறம் செய விரும்பு" என்கிறாள் ஔவை. "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அ·தும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்கிறார் வள்ளுவர். அடுத்தர் சொல்லிக் காட்டும் நிலைக்கு ஆளாகக் கூடாது. நல்லது செய்கிறோம். அது அடுத்தவர் குற்றம் சாட்டும் நிலையில் இருக்கக் கூடாது. அறம் கெட்டால் எல்லாம் கெட்டு விடும். அதனால் தவறு செய்யக் கூடாது.

இதை இளங்கோவடிகள் கண்ணகி வாயால் சொல்கின்றார். தவறு செய்து விட்டோமெனத் தெரிந்ததும் பாண்டியன் உயிர் விட்டான். உடனே மாண்டாள் கோப்பெருந்தேவி. அப்பொழுது கண்ணகி சொல்கிறாள். "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றாம்!" மற்றொரு இடத்தில் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்" என்கிறார் இளங்கோவடிகள். அறத்திலிருந்து தவறினால் அறமே கொன்று விடும்.

பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு குற்றமும் மனதாற்கூடச் செய்யாதவன். ஒரு சின்ன தவறு செய்தான். விளைவு? மதுரையே அழிந்தது. அதை இன்றைக்கும் நாம் சொல்லுகிறோம். ஒரு சின்ன தவறு எத்தனை நூற்றாண்டுகளாக நிற்கிறது பாருங்கள். அவன் எத்தனையெத்தனையோ நல்லவைகளைச் செய்திருக்கிறான். அவற்றை யாரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவன் குற்றம் நின்கின்றது.

இந்த நிலைக்கெல்லாம் ஆளாக்காமல் காக்க வேண்டியது முருகனே! கங்கையின் மைந்தனே! ஞானத்தினால் உண்டாகும் சுகத்தின் அதிபனே! திதியின் வழியினரான அரக்கர்களின் செருக்கை அழிந்த சேவகனே!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 15, 2007

50.தனிமையிலே இனிமை காண முடியுமா?

கேள்வி கேட்பதும் அதற்கு விடை சொல்வதும் எளிதன்று. முறையான கேள்விகளைக் கேட்பதும் கடினம் . அவற்றிற்குத் தெளிவாக விடை பகர்வதும் கடினம். இரண்டிற்குமே அறிவு தேவை. தமிழ்க் கடவுள் முருகன் கேட்கிறார். அதற்குத் தமிழ் மூதாட்டி ஔவை விடை சொல்கிறார்.

கேள்வி: இனியது எது?
விடை: இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!



நம்மிடம் இனியது கேட்டால், என்ன சொல்வோம்? இனிது இனிது மாம்பழம் இனிது. அதனினும் இனிது தேனிலூறிய மாங்கனி. அதனினும் இனிது அதோடு பாலைச் சேர்த்தல். அதனினும் இனிது அப்படிக் கலந்ததைத் திகட்டாமல் மூவேளையும் உண்பதுதானே!

ஆனால் ஔவை அறிவு நிறைந்த கிழவி. உண்மையிலேயே இனியவைகளை அடுக்கிறார். எடுத்த எடுப்பிலேயே ஏகாந்தம் இனிது என்கிறார். தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியும் என்பதே ஆன்றோர் முடிவு.

தனிமை என்றால் யாருமில்லாத இடம் என்று மட்டும் பொருளல்ல. உடல் தனியாக இருப்பது தனிமையல்ல. மனம் தனியாக இருக்க வேண்டும். ஏகாந்தம் என்றால் ஏக அந்தம். ஒன்றுமேயில்லாதது. இன்பம், துன்பம், இருள், ஒளி, அமைதி, இரைச்சல்....எதுவுமே இல்லாதது. மனத்தை அந்த அளவிற்கு உயர்த்தினால் இன்பம் கிடைக்கும்.

அது எப்படி? எளிமையாகச் சொல்கிறேன். கவனியுங்கள். புகை வண்டியில் பகல் வேளைகளில் பயணம் போனவர்களுக்குத் தெரியும். எல்லாரும் விழித்துக் கொண்டிருப்பார்கள். சும்மாயிருக்க முடியாது. அதனால் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒரே இரைச்சலாக இருக்கும். நடுநடுவே பழம் விற்கின்றவர்கள். பாட்டுப்பாடி யாசிப்பவர்கள். பலகாரங்கள், காப்பி , தேநீர் விற்பவர்கள். புத்தகங்களும் செய்தித்தாள்களும் விற்பவர்கள். எதற்கோ சண்டையிடுகின்றவர்கள். எத்தனை இரைச்சல். அத்தோடு இரயில் வண்டி வேறு. தடதடவென ஓடிக் கொண்டும் கூவெனக் கூவிக் கொண்டும். உள்ளே இருப்பவர்களுக்கு காது வலிக்கும்.

ஆனால் அத்தனை ஓசைகளிலும் ஒருவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவருடைய எண்ணம் முழுவதும் புத்தகத்திலேயே இருக்கும். எல்லாம் சுற்றி இருக்கிறது. ஆனால் அவர் தனிமையில் இருக்கிறார். இது தனிமைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

ஆக உலக இயக்கத்தில் இருக்கும் எல்லாத் துன்பங்களையும் தாண்டி மனதை அமைதியாக தனியாக வைத்துக் கொண்டிருக்க முடியுமானால் அது எவ்வளவு பெரிய இன்பம். அதைத்தான் ஔவை ஏகாந்தம் இனிது என்கிறார். முருகன் அருள் முழுதும் பெற்ற கிழவி.

திருவாசகத்தில் கூட ஈசனைப் பற்றிச் சொல்லும் பொழுது "ஏகன் அனேகன்" என்றே சொல்கிறார் மாணிக்கவாசகர். ஏகன் - தனியாக இருப்பவன். அனேகன் - அனைத்திலும் இருப்பவன். என்ன விளக்கம் பாருங்கள்.

தன்னந் தனி நின்றது தான் அறிய
இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் கிளையும் கிருபை சூழ் சுடரே


அருணகிரிக்கு ஒரு பிரச்சனை. ஏகாந்த இன்பத்தை அனுபவிக்கும் வழிமுறையை அவருக்கு முருகன் சொல்லிக் கொடுத்திருக்கிறான். இவரும் அனுபவித்திருக்கிறார். தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் சொல்லித் தர வேண்டுமென்பது அவரது விருப்பம். ஆனால் அதைச் சொல்லில் அடக்க முடியவில்லை. புலம்புகிறார். "தன்னந்தனி நின்றது தானறிய இன்னுமொருவர்க்கு இசைவிப்பதுவோ!" சொல்ல முடியுமா?

முருகனை "மின்னும் கதிர்வேல் விகிர்தா" என்று அழைக்கிறார். விகிர்தம் என்றால் வேறுபடுதல். விகிர்தா என்றால் வெவ்வேறு விதமாக இருப்பவன். ஒன்றும் பலவுமாய் இருப்பவனல்லவா அவன். அந்த கதிர்வேல் விகிர்தனின் பண்பு என்ன தெரியுமா? அதை நான்காவது அடியில் சொல்கிறார். "நினைவார் கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே!"

நினைக்கின்றவர்களின் துன்பத்தைத் துடைப்பவன் கந்தன். கின்னம் என்றால் துன்பம். கிண்ணம் என்றால் பாத்திரம். நமது வாழ்க்கை கின்னம் நிறைந்த கிண்ணமாகி விடக்கூடாது. முருகனை அன்போடு நினைத்தால் போதும். குழம்பு வைக்கின்றவர்களுக்குத் தெரியும். புளியை ஊற வைத்துக் கரைக்க வேண்டும். ஆனால் உப்பைச் சேர்த்தால் போதும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 08, 2007

49. அறிவு எத்தனை வகை

கந்தரநுபூதி எந்த அளவிற்கு உயர்ந்தது என்று சென்ற பாட்டில் (ஆறாறையும் நீத்து) பார்த்தோம். இந்தப் பாடலில் கந்தரநுபுதியின் தன்மையைச் சொல்கிறார் அருணகிரி. தன்மை முழுமையும் சொல்ல முடியாது. அதன் தொடக்கத்தைச் சொல்கிறார்.

கப்பலில் பயணம் போகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் இருக்கிறது. கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றால் கடலைப் பார்க்கலாம். நான்கு பக்கங்களிலும் கடலைப் பார்க்கலாம். கடலைப் பார்த்தேன் என்று பெருமையாகச் சொல்லலாம். ஆனால் உண்மையில் முழுக்கடலையும் பார்க்க முடியுமா?

இரண்டு கண்கள் அதற்குப் பத்தாது. அது போலத்தான் கந்தரநுபூதியும். கந்தரநுபூதியின் முழுப் பெருமையையும் நம்மால் கேட்டுப் புரிந்து கொள்ள முடியாது. உணர்ந்து புரிந்து கொள்ளலாம்.

கடலின் ஒரு பகுதியை நம் கண்களுக்குக் காட்டுவது போல அநுபூதியின் அறிமுகத்தைக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே


"செறிவொன்று அற வந்து இருளே சிதைய" - செறிவு என்றால் நம்மைச் சுற்றியிருந்து நம்மைச் செறிவூட்டுகின்றவை. சுருங்கச் சொன்னால் "என்னுடையது" என்று நாம் எதையெல்லாம் நினைக்கின்றோமோ அவையெல்லாம்.

இந்தச் செறிவை அற்றுப் போகச் செய்வது அநுபூதி. இதென்ன கூத்து? எதற்காக இவையெல்லாம் போக வேண்டும்? வள்ளுவரைக் கேட்கலாம்.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
"
எவற்றையெல்லாம் விட்டு விடுகின்றோமோ அவைகளால் துன்பம் உண்டாகாது. புகைப் பிடித்தலை விட்டால் நுரையீரல் தப்பிக்கும்.

எந்தப் பொருளையும் பழக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விலகினால் அதனால் நமக்குத் துன்பம் நேராது. கிருத்துவர்கள் சொல்வார்கள். ஒரு தாளை எடுத்து நம்முடையது என்று நினைப்பவைகளைப் பட்டியலிட்டால், அந்தப் பட்டியலின் நீளமே நமக்கும் கடவுளுக்கும் உள்ள தூரம்.

இதைத்தான் அநுபூதியும் சொல்கிறது. சற்றே வேறுவிதமாக. கடவளோடு ஒன்றாகி விட்டால் நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒன்றுமில்லை. புரிகின்றதா "செறிவொன்று அறவந்து"?

இப்படிச் செறிவு அற்றுப் போவதால் உண்டாகும் நன்மை என்ன? "இருளே சிதைய" என்கிறார். ஆணவமாகிய இருள் சிதைந்து போகும். ஆணவம் ஆளை அழித்து விடும். ஆனால் ஆணவத்தை முருகனருள் அழித்து விடும். (இது வரைக்கும் மூன்றாவது வரிக்கு மட்டும்தான் விளக்கம் பார்த்திருக்கின்றோம். இன்னும் மூன்று வரிகள் உள்ளன.)

ஆணவம் அழிந்த நிலை என்ன? "வெறி வென்றவர்" என்ற நிலையை எய்துவது. பற்று என்பது எதன் மேலும் இருக்கும். அது அன்பின் முதல் நிலை. பாசம் என்றும் சொல்லலாம். அது தவறாகாது. அந்தப் பாசமே அளவிற்கு மீறினால் வெறியாகி விடும். வெறி நன்றன்று.

மத வெறி, மொழி வெறி, இன வெறி, சாதி வெறி என்று எந்த வெறியும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்றுதான் இருக்கலாம். அதிலும் வெறி இருக்கக் கூடாது. அதனால்தான் வள்ளுவரும் "பற்றுக பற்றற்றான் பற்றை" என்று சொல்கிறார். பெரிய அறிஞர்கள் ஒன்றைச் சொன்னால் அதில் ஒவ்வொரு சொல்லையும் மிகக் கவனமாகப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆழ்ந்து பொருள் கொண்டால் தெளிவாகப் புரியும்.

அப்படி வெறியை வென்றவரோடு வேலவர் இருப்பார். இறைவன் மேலும் பற்றுதான் இருக்க வேண்டும். வெறி இருக்கக் கூடாது.

அறிவு எத்தனை வகைப்படும்? பட்டறிவு, பகுத்தறிவு, கேள்வி ஞானம் மற்றும் படிப்பறிவு.

எதையும் படித்துத் தெரிந்து கொள்வது படிப்பறிவு. கற்றறிந்தவர்களுக்கு மட்டுமே இது கிட்டும். நல்ல அறிஞர்கள் சொல்லியதைக் கேட்டு உணர்ந்து கொள்வது கேள்வியறிவு. இது நல்ல அறிஞர் மொழி கேட்டால் மட்டுமே கிடைக்கும். எதையும் பட்டுத் தெரிந்து கொள்வது பட்டறிவு. இது அநுபவத்தில் வருவது. அனைத்தையும் அநுபவித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆண்கள் பிரசவ வேதனையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. பகுத்தறிவு என்பது இருக்கின்ற அறிவை வைத்து மற்றொன்றைப் பகுத்துத் தெரிந்து கொள்வது. இதுவும் ஒரு எல்லைக்குள் உட்பட்டதே.

ஆகக் கூடி எந்த அறிவுமே முழுமையானது அல்ல. இந்த அறிவுகளெல்லாம் சீவ அறிவுகள். சீவனாக உலகில் வாழத் தேவையான அறிவுகள். சீவ அறிவை விட சிவ அறிவு சிறந்தது. சீவனாகப் பிறந்தவர்களுக்குத் தலையில் சுழியுண்டு. பிறப்பேயில்லாத சிவனுக்குக் கிடையாது. தலையிலுள்ள சுழி போனால் சீவன் சிவனாகி விடும்.

சீவன் சிவனாக வேண்டுமானால் சீவ அறிவு போக வேண்டும். சிவஞானம் பெருக வேண்டும். அதைத்தான் "அறிவொன்று அற நின்று" என்கிறார் முதலடியில். அறிவொன்று அற நின்று சிவனை அறிகின்றவர்கள் அறிவில் என்றைக்கும் பிரியாமல் இருப்பான் முருகன். முதலிரண்டு அடிகளையும் மீண்டும் படியுங்கள்.
"அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில்
பிரிவொன்று அற நின்ற பிரான் அலையோ
"

பிரான் என்பது பிரியான் என்பதன் சுருக்கம். முருகப் பெருமான் நம்மையேல்லாம் பிரியாமல் காப்பவன்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 25, 2006

48. ஆறாறா முப்பத்தாறு

சைவ சித்தாந்தத்தின் மூலப் பொருளை உரைக்கும் பாடல் இது. மிகவும் தத்துவச் செறிவு மிக்கது. முடிந்த அளவிற்கு எளிமையாக விளக்கிச் சொல்கிறேன்.

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சூரா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே


ஆறாறையும் நீத்து - ஆறு X ஆறு = முப்பத்தாறு. முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி அதற்கும் மேலான நிலையை அடைவது என்பது சிவாகமத்தில் மிகவும் உயர்ந்த நிலை. அந்த நிலையை அந்த உயர்ந்த நிலையை அருணகிரிக்கு முருகப் பெருமான் அளித்தார். சரி. அதென்ன முப்பத்தாறு தத்துவங்கள்? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இந்த முப்பத்தாறையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஆன்ம தத்துவங்கள், வித்யா தத்துவங்கள் மற்றும் சிவதத்துவங்கள்.

ஆன்ம தத்துவங்கள்: (24)

பஞ்சபூதங்கள் - நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு - 5
சூட்சும பூதங்கள் - ஒளி, சுவை, ஓசை, நாற்றம், உணர்ச்சி - 5 (இவை ஐம்பொறிகளாலும் உணரப்படும் பண்புகள் )
ஐம்பொறிகள் - கண், வாய், செவி, மூக்கு, மெய் - 5
செயலுறுப்புகள் - கை, கால், நாக்கு, குதம், குறி - 5 (இவை உடலியக்கத்திற்கு ஆனவை )
உட்கரணங்கள் - மனம், குணம், அறிவு, அகங்காரம் - 4 (மனம் வேறு. குணம் வேறு. அறிவு வேறு. அறிவு நல்லதையும் அறியும். தீயதையும் அறியும். ஆனால் மனம் எதை வேண்டுமானால் விரும்பலாம். குணம் என்பது செயலில் வெளிப்படுவது. மனதில் வருத்தமிருந்தாலும் சிலர் நல்லதைச் செய்கிறார்கள் அல்லவா. அகத்தில் இருக்கும் காரம் அகங்காரம். அது போக வேண்டும்.)

ஆக ஆன்ம தத்துவங்கள் மொத்தம் இருபத்தி நான்கு. பஞ்சபூதங்கள் ஸ்தூல பூதங்கள் எனப்படும். அதவது ஒரு உருவமுள்ளவை. சூட்சும பூதங்கள் உருவமற்றவை. ஆனால் உணர முடியும். எடுத்துக்காட்டாக நெருப்பு என்ற ஸ்தூல பூதத்திற்குள் ஒளிந்திருப்பது ஒளி என்ற சூட்சும பூதம். இந்த சூட்சும பூதங்கள் ஐம்பொறிகளால் உணரப் படுகின்றன. அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்த தத்துவங்கள். ஐம்பொறிகளுக்கு உணரும் வேலை. செயலுறுப்புகளுக்குச் செய்யும் வேலை. கை செய்கிறது. கால் நடக்கிறது. நாக்கு பேசுகிறது. குதம் மலத்தை வெளியேற்றுகிறது. குறி இன்பம் துய்க்கிறது.

வித்யா தத்துவங்கள்: (7)
காலம், நியதி, காலை, விதை, அராகம், புருடன், மூலப்பிரகிருதி

சிவ தத்துவங்கள்: (5)
மொத்தம் ஐந்து சிவ தத்துவங்கள். இவை சிவபக்தித் தத்துவங்கள். சிவனோடு அன்பு கொள்ளும் முறைகள் இந்த ஐந்தும்.
சுத்த வித்தை : அறிவு குறைவாக இருந்து செயல் நிறைய இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது. கண்ணப்ப நாயனாரது பக்தி சுத்த வித்தை.
ஈசுவரம் : அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்தால் அடக்கம் வருவது உண்மைதானே.
சாதாக்கியம் : சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது.
விந்து : இது சக்தியின் வடிவம்.
நாதம் : இது சிவாநுபூதி. சிவனோடு ஒன்றுபட்டிருத்தல்.

இப்பொழுது புரிந்திருக்கும் முப்பத்தாறு தத்துவங்களும் அவற்றின் பண்புகளும். ஆனால் முருகப் பெருமானின் தனிக்கருணை இந்த முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது. "ஆறாறையும் நீத்து" - முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவற்றிற்கும் மேலான நிலையே கந்தரநுபூதி. அதாவது சிவாநுபூதிக்கும் ஒரு படி மேலே.

இதனால் சிவாநுபூதி குறைந்தது என்று பொருள் அல்ல. சிவாநுபூதி என்பது அளவை. அதனால் அளந்த உயர்ந்த பொருள் கந்தரநுபூதி.

சீறி வந்த சூரனை வெற்றி கொண்டு அதனால் கூறாகக் கிடந்த இந்திரலோகத்தில் அருள்மழை பொழிந்து குளிர வைத்தவனே! முப்பத்தாறு தத்துவங்களையும் தாண்டி அவைகளுக்கும் மேலான கந்தரநுபூதியைப் பேறாக பெறவேண்டியதும் உன் கருணையே!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 18, 2006

47. ஒன்றுமில்லாமல் இருந்து எல்லாம் வந்தது

பொதுவாக அனைவருக்கும் தெரியாத ஒரு பெயர்க்காரணத்தை இப்பொழுது சொல்லப் போகிறேன். கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். ஓங்காரம் என்பது அகர உகர மகாரங்களின் சேர்க்கை.
அ + உ + ம = ஓம்
இந்த மூன்று எழுத்துகளில் அகரம் எந்த மொழியிலும் முதலெழுத்தாக வரும். ஆகையால் முத்தொழில்களிலும் முதற்தொழிலாகிய படைப்பைக் குறிக்கிறது. உகரமானது காத்தல் தொழிலைக் குறிக்கிறது. பெரும்பாலும் தமிழிலக்கிய நூல்கள் உகரத்தில்தான் தொடங்கும்.
"உலகம் உவப்ப வலன் ஏர்பு" - திருமுருகாற்றுப்படை
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு" - பெரிய புராணம்
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" - கம்பராமாயணம்
"உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான்" - வளையாபதி
மெய்யெழுத்துகளில் இறுதியில் வருவது மகரம். ஆகையால் அது முடிக்கும் அழித்தல் தொழிலைக் குறிக்கிறது.

ஆகக் கூடி ஓங்காரமென்பது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்கள் கூடியது. சுருங்கச் சொல்லி விளக்கினால், ஓங்காரமென்பது உலக இயக்கம். Big Bang Theory என்று சொல்கின்றார்களே. ஒன்றுமில்லாமலிருந்து எல்லாம் வந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் ஓங்காரம்.

ஓங்காரம் என்பது இரைச்சலும் அமைதியும் கலந்தது. சங்கை காதில் வைத்தால் ஓங்காரம் கேட்கிறதல்லவா. சங்குக்குள்ளே அமைதி. வெளியே இரைச்சல் இரண்டும் கலந்தது ஓங்காரம். திருச்செந்தூர் கோயில் மதிற்சுவற்றில் ஒரு பொந்து உண்டு. அதில் காதை வைத்தால் ஓங்காரம் கேட்கும். கோயிலுக்குளிருக்கும் தெய்வீக அமைதியும் வெளியே இருக்கும் அலைகடலில் ஓசையும் கூடி ஓங்காரம் அங்கு பிறக்கிறது.

இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும். நல்ல அருள் கிடைக்கும். எப்படி என்று கேட்கின்றவர்களுக்கு ஒரு அறிவியல் விளக்கம். எதிரெதிர் வெப்பநிலை கூடினால் மின்சாரம் உண்டாகிறது. ஒரு தாமிரக் கம்பியின் ஒரு முனையை பனிக்கட்டியிலும் மறுமுனையை கொதிநீரிலும் வைத்தால் அந்தக் கம்பியில் மின்னோட்டம் இருக்கும் என்பது அறிவியல் உண்மை. அந்த மின்சாரத்தால் நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம். அது போலத்தான் இரைச்சலும் அமைதியும் கூடிய ஓங்காரமும் சக்தி உடையது.

இந்த ஓங்கார வடிவானவள் பராசக்தி. ஆகையால்தான் அவளுக்கு உமா என்று பெயர் உண்டு.
உ + ம + அ = உமா
அன்னைக்கு அல்லவா பெயர் வைக்கப்படுகிறது. தாயுள்ளம் கருணையுள்ளம். எதையும் காக்கும் கருணை. அதனால் காத்தலுக்கு உரிய உகரம் முதலில் நிற்கிறது. எப்படிக் காப்பது? துன்பத்தை அழித்துதானே! அதற்காக முடித்தலுக்குரிய மகரம் அடுத்து நிற்கிறது. அடுத்தது? அகரம். அது படைப்பு. நல்ல வாழ்க்கையை நமக்குப் படைக்கின்றவள் அல்லவா.

இத்தனை பெருமை உமை என்ற அந்தப் பெயருக்கு. அந்த உமையின் மகனே என்று முருகனைப் புகழ்கிறார். உமையை விட முருகு என்ற பெயர் இன்னமும் சிறந்தது. எப்படி தெரியுமா? முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்.

ஆகையால் அந்த முருகன் நமக்குத் தாயும் தந்தையும் போன்றவன். அதுதான் இந்தப் பாடலின் முதலடி. "எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ". முதலில் தாய். பிறகு தந்தை. தாய் சொல்லித்தானே தந்தையே தெரியும்.
"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
" - புறநாநூறு
இங்கே புறந்தருதல் என்பது பெற்றுப் போடுதல் அல்ல. ஒரு நல்ல குழந்தையை உலகிற்கு கொடுப்பது. அது அன்னையால்தான் முடியும். அதனால்தான் முருகனை "உமையாள் மைந்தா" என்று இந்தப் பாடலில் அருணகிரியார் கூறுகிறார்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுல மானவை தீர்த்தெனை ஆள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே


நிராகுலம் என்ற பதத்தை விளக்கும் பொழுது முன்பே சொன்னதுதான். இப்பொழுதும் சொல்கிறேன். ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் சிந்தையை வருத்துகின்ற துன்பங்கள். நமக்கெல்லாம் இரண்டு வகையான துன்பங்கள் வரும். உள்ளத்தை வருத்தும் அகத்துன்பம். உடலை வருத்தும் புறத்துன்பம். இவை இரண்டு தவிர்த்து வேறு ஏதாவது துன்பம் இருக்கிறதா? எத்தனையெத்தனை துன்பங்கள் இருந்தாலும் அவையனைத்தும் இந்த இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கி விடும்.

இப்படி நமது சிந்தையை வருத்துகின்ற துன்பங்களையெல்லாம் துடைத்து தாயும் தந்தையுமாக காக்க வேண்டுமென்று நமக்காக அருணகிரியார் இந்தப் பாடலில் வேண்டுகிறார்.

"கந்தா! கதிர்வேலவனே! உமையம்மை பாலா! குமரா! மறைகளுக்கு எல்லாம் தலைவனே! சிந்தையை வருத்துகின்ற துன்பங்கள் அனைத்தையும் துடைத்து காப்பாற்றும் நீயே தாயும் தந்தையுமானவன்!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 11, 2006

46. கற்கை நன்றே கற்கை நன்றே

நாம் ஒன்றைக் கற்க வேண்டுமென்றால் நல்ல ஆசிரியரைத் தேட வேண்டும். பொல்லாத ஆசிரியரிடம் கற்றாலும் கற்ற கல்வி பயன் தராது.

மாவீரன் கர்ணன். பரசுராமரிடம் போய் கல்வி கற்றான். பிறப்பறியாதவன் அவன். எந்தக் குலத்தைச் சொல்வான்? பரசுராமரும் அவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். எல்லாக் கலைகளையும் கற்பித்தார். கர்ணனும் நல்ல மாணவன். அனைத்தையும் நெறியோடு கற்றான். விதி யாரை விட்டது?

ஒரு நாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வண்டு கர்ணனின் தொடைக் கடித்துத் துளைத்தது. ஆசானின் தூக்கம் கலைந்து விடுமே என்று வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். ஆனால் தொடையிலிருந்து பெருகிய குருதி பரசுராமரை எழுப்பி விட்டது.

இவ்வளவு வலியைத் தாங்க வல்லவன் குலத்தால் சத்திரியனாக இருப்பான் என்று சொல்லி சபித்து விட்டார். எப்படி? கற்ற கல்வி உற்ற நேரத்தில் அற்றுப் போகச் சபித்தார். அதனால் போர்க்களத்தில் சரியான நேரத்தில் வித்தையை மறந்தான் கர்ணன். அதனால் வீழ்ந்தான்.

கற்பதும் நல்லவர்களிடமே கற்க வேண்டும். அப்பொழுதுதான் முழுப் பயன் கிடைக்கும். எதையும் நல்வழியில் செய்ய வேண்டும். ஏகலைவனைப் பாருங்கள். துரோணரை மனதளவில் குருவாக வைத்து வில் வித்தை பயின்றான். விளைவு? கைக்கட்டை விரலை இழந்தான். நல்ல ஆசான் கிடைக்கவும் தவம் செய்திருக்க வேண்டும்.

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் வாக்கு. பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும்.

எல்லா ஆசிரியர்களும் மாணவர்களை அரவணைத்துச் சொல்லிக் கொடுப்பார்களா? சிலர் முரடர். சிலர் முசுடர். சிலர் அசடர். இருந்தும் என்ன? நமக்கு வேலை ஆகிறதே.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
- புறனானூறு
அதாவது, கொடு என்று கேட்பது இழிந்ததாம். அப்படிக் கொடு என்று கேட்ட பின்னும் ஒருவர் கொடேன் என்று சொன்னால் அது இன்னமும் இழிந்ததாம். அப்படி நாம் கேட்டு ஒருவர் இல்லையென்று சொன்னால் நமக்கு எவ்வளவு அவமானம். அருணகிரி மானத்திற்கு அஞ்சியர். மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா என்கிறது குறள். நாமும் மானத்திற்கு பயப்பட வேண்டும்.

கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே


கரவாகிய கல்வியுளார் - நான்கு பேருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இல்லாத கற்றவர்கள். அவர்களிடம் சென்று இரவா வகை வேண்டும். மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டா என்கிறார் ஔவை. அப்படி மதிக்காதவரிடம் கையேந்தி நிற்க வைக்காமல் தானாக வந்து அருளினான் முருகன். இப்பொழுது முதலிரண்டு வரிகளைப் படியுங்கள். நன்றாகப் புரியும்.
கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ

அடுத்த இரண்டு வரிகளைப் பார்க்கலாம்.
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே

கந்தரநுபூதியில் கடவுள் வாழ்த்தைச் சேர்த்து மொத்தம் ஐம்பத்திரண்டு பாடல்கள். இந்தப் பாடல்களில் ஆங்காங்கே வள்ளிநாச்சியாரைப் பற்றி வரும்.

பணியா என வள்ளி பதம் பணியும்....
வேடர் குலப்பிடி தோய்........
தூசா மணியும் துகிலும் புணைவாள் நேசா...

ஆனால் தெய்வயானை அம்மையாரைப் பற்றி இந்த ஒரு பாடலில்தான் வருகிறது. அதுகூட மறைபொருளாக. குஞ்சரவா என்று முருகனை அழைப்பதனால் தெய்வயானையைப் பற்றிச் சொல்கிறார்.

குஞ்சரம் என்றால் ஆனை. மாபாரதக் கதையில் தருமன் "அஸ்வத்தாமா ஹதகா குஞ்சரகா" என்று பொய்யுரைத்தான். "கொல்லப்பட்டான் அஸ்வத்தாமன்" என்று சொல்லி சிறிய இடைவெளிக்குப் பிறகு "என்ற ஆனை" என்றார். முழுவதும் கேட்டால் "கொல்லப்பட்டான் அஸ்வத்தாமன் என்ற ஆனை" என்று வரும். அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவன். தன்னுடைய மகன் இறந்து விட்டான் என்று எண்ணி மருகி துரோரணர் போர்க்களத்திலேயே தவத்தில் அமர்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து திரௌபதியின் அண்ணன் திட்டத்தும்மன் துரோணரின் கழுத்தை அறுத்து விட்டான்.

குஞ்சரவா என்றால் தெய்வயானையை மணந்தவன் என்று பொருள். குரவா-என்றால் அறிவு மிகுந்தவன் என்று பொருள். குறவா என்றால் மலைக்குறவர். குலிசாயுதம் என்றால் எவரையும் வெல்லும் ஆயுதம். எது அது? ஞானம்தான் எதையும் வெல்லும் ஆயுதம். சிவயோகத்தை கொடுக்க வல்லவர் சிவன். ஆனால் சிவயோக தயாபரனே என்று முருகனைச் சொல்கிறார். எப்படி? தகப்பனார் சொத்து மகனுக்கு வருவது போலத்தான் இதுவும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 04, 2006

45. தலை மேல் வைத்துக் கொண்டாடி

ஒருவர் மிகவும் துன்பத்திலிருந்தார். பெரும் பசி. வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது. வீட்டிலும் அனைவருக்கும் துன்பம். என்ன செய்வதென்றே புரியவில்லை. யாரிடம் கேட்பதென்றும் புரியவில்லை.

தெய்வாதீனமாக ஒருவர் உதவினார். முதலில் எல்லாரும் சாப்பாடு போட்டு....துணிமணி கொடுத்து.....பிறகு ஒரு வேலையும் கொடுத்தார். தடுமாறிக் கொண்டிருந்த குடும்பம் ஒரு நிலைக்கு வந்தது. உதவி பெற்றவர் நல்லவர். செய்நன்றி மறவாத உத்தமர். என்ன செய்வார்? உதவி செய்தவரைப் புகழ்ந்து பேசுவார். அவரால்தான் வாழ்வு வந்தது என்பதைத் தயங்காமல் சொல்லுவார்.

இப்படி அவர் பேசுவதையும் சொல்வதையுங் கண்டு மற்றவர்கள் கேலி பேசினார்கள். "பாரிவனை. முதலாளியைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறான்!" என்று முதுகுக்குப் பின் கிண்டலடித்தார்கள். அவன் கண்டுகொள்ளவேயில்லை. நேர்மையாக உழைத்து வந்தான்.

நன்றி மறக்கக் கூடாது. உதவி செய்தவரைக் கொண்டாட வேண்டும். அதுவும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாட வேண்டும். அதைத்தான் அருணகிரியும் செய்தார்.

எதைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினார்? சாடும் தனிவேல் முருகன் சரணம். அப்படியென்றால்? நமக்கு எந்தத் திக்கிலிருந்து துன்பம் வருமென்று தெரியாது. ஆனாலும் நாம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் துன்பம் வந்து விடுகிறது. அந்தத் துன்பங்களைச் சாடுகின்ற தனிவேல் முருகனுடைய சரணங்களை, அதாவது திருவடிகளை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்.

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனலும் கமழும் கழலே


"தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ!" முருகனுடைய திருவடிகளை நாம் நினைப்பதற்கான கருணையும் முருகன் தந்ததே. நாம் மிகவும் மதிக்கும் ஒருவரின் கையெழுத்து வேண்டும். அதை நாமாக அடைய முடியுமா? அவருடைய அனுமதியின்றி சம்மதமின்றி கையெழுத்தைப் பெற முடியுமா? அது போலத்தான் இறைவனை வழிபடுவதற்கும் அவனது கருணை வேண்டும்.

அப்படித்தான் தலைமேல் திருவடிகளை வைத்துக் கொண்டாட கருணை செய்த முருகனுடைய அன்பைச் சொற்களில் அடக்க முடியாமல் திண்டாடுகிறார் அருணகிரி. "சூடும்படி தந்தது சொல்லுமதோ!" எப்படிச் சொல்வது? ஆனாலும் சொல்ல வேண்டும் என்பதால் இப்படிச் சொல்கிறார்.

ஒரு பட்டிக்காட்டுத் தாயார். காட்டிலும் மேட்டிலும் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றினார். பிள்ளைகள் பெரிதாயின. படுத்திருக்கும் தாயாரின் கால்களைப் படித்து விடுகிறான் மூத்த மகன். காய்ந்து கிடக்கும் தாயாரின் கால்களைப் பார்த்து கண்ணீர் வருகிறது. "ஐயோ! அம்மா! காட்டிலும் மேட்டிலும் நடந்தாயே! முள்ளும் கல்லும் உன் கால்களை எப்படிப் படுத்தியிருக்கின்றன. எங்களுக்காகச் செய்தாய். அப்படி எங்களுக்காக உழைத்த இந்தக் கால்களை பிடிப்பதற்க்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும். இந்தக் கருணையை நான் என்ன சொல்வேன்."

இங்கே அருணகிரி மகன். முருகன் தாயார். "வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனலும் கமழும் கழலே!" வீடு என்றால் வீடுபேறு. வீடுபேறு தரவல்லவது முருகன் திருவடி. சுரர் மாமுடி - தேவர்களுடைய மணிமுடிகள். சூரனைக் காப்பாற்றி அவனிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றியதற்கு நன்றியாக தேவர்களின் மணிமுடியை முருகன் பாதத்தில் இட்டார்கள். அல்லது மணிமுடி இறைவன் திருவடிகளில் படுமாறு விழுந்து வணங்கினார்கள். வள்ளி நாச்சியாருக்கு அருள் செய்து அதன் வழியாக நமக்கு அருள் செய்ய காட்டிலும் மேட்டிலும் அருவிககரையும் நடந்தார் முருகன். "அருவித் துறையோடு இதனோடு திரிந்தவனே" என்று ஒரு பாடல் முன்னம் பார்த்தோம்.

இப்படி காட்டிலும் மேட்டிலும் நடந்து வள்ளி நாச்சியாருக்கு அருள்செய்ததும், நன்றியாக எப்பொழுதும் தேவர்கள் விழுந்து தொழுவதும், வீடுபேற்றைத் தரவல்லதுமான உனது திருவடிகள் எல்லாத் துயர்களையும் தீர்க்க வல்லவை. அந்தத் திருவடிகளை என் தலை மேல் வைத்துக் கொண்டாட கருணை செய்தாயே! அந்தக் கருணையை எப்படிச் சொல்வது?

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, November 28, 2006

44. எதைத் தட்டினால் எது கிடைக்கும்

பொருட்காட்சிகளுக்குப் போகின்றவர்கள் பஞ்சு மிட்டாய் பார்த்திருப்பீர்கள். வாங்கியும் உண்டிருப்பீர்கள். அந்தப் பஞ்சு மிட்டாய் செய்வதைப் பார்ப்பதும் ஒரு அழகு. சுற்றிக் கொண்டிருக்கும் இயந்திரத்தில் சிறிதளவு நிறமூட்டப்பட்ட சர்க்கரையைப் போடுவார்கள். அந்த இயந்திரம் போட்ட சிறிதளவு சர்க்கரையைப் பகுத்து மெல்லிய பஞ்சுகளாக மெத்தென விரிக்கும். அதைக் குச்சியில் சுற்றி பெரிதாகத் தருவார்கள். அதை அப்படியே வாங்கி அமுக்கினால் மிகவும் சிறியதாகப் போய்விடும். ஆக சிறிய அளவு சர்க்கரைதான் பெரிய பஞ்சு மிட்டாயானது. அதே பெரிய பஞ்சுமிட்டாயை அமுக்கினால் சிறிய அளவுள்ள அடர்ந்த சர்க்கரைக் கட்டியாகிறது.

அது போலத்தான் கந்தரநுபூதியும். முதலில் அநுபூதிக்குத் தயாராக நாற்பது பாடல்கள் வரை சொல்கிறார் அருணகிரி. நாற்பது பாடல்களிலும் நமக்கு ஓரளவு அநுபூதியைப் பற்றித் தெரிந்து விடுகிறது. உடனே இந்தப் பாடலில் அநுபூதியைச் சொல்லி விடுகிறார். பிறகு பத்து பாடல்களில் அநுபூதியின் பெருமைச் சொல்லி விடுகிறார். விரிவாகச் சொல்லி விளங்க வைக்கிறார் செந்தமிழ் முனி.

தூசாமணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பருளால்
ஆசாநிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே


கந்தரநுபூதியில் மிகவும் சிறந்த பாடல் எதுவென்று கேட்டால், இந்தப் பாடலைச் சொல்லலாம். கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பத்து இரண்டு பாடல்கள். அந்த ஐம்பத்திரண்டு பாடல்களிலும் சொன்னதை இந்த ஒரு பாடலில் அடக்கி விட்டார் அருணகிரி நாதர்.

முதலில் அநுபூதி என்றால் என்ன? இறைவனோடு ஒன்று படுதல் என்று பொருள். சிவனோடு ஒன்றாகுதல் சிவாநுபூதி. சக்தியோடு ஒன்றாகுதல் சாக்தாநுபூதி. இகபர சுகம் வேண்டுவோர் சிவாநுபூதியும் சாக்தானுபூதியும் பெற வேண்டும். கலியுகத்தில் இரண்டையும் பெறுவதற்கு மிகவும் பட வேண்டாமென்று இகம் பரம் என்ற இரண்டு சுகங்களும் கந்தரநுபூதி வழியாக வடிவேலர் வழங்குகிறார். ஆங்கிலத்தில் Two-In-One என்று சொல்கிறார்களே. தொலைபேசவும் வேண்டும். புகைப்படம் பிடிக்கவும் வேண்டும். அதற்கு முன்பெல்லாம் இரண்டு கருவிகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கின்றன. ஆனாலும் இப்பொழுது ஒரு கருவியிலேயே இரண்டையும் செய்ய முடிகிறதல்லவா. அது போலத்தான்.

சரி. கந்தரநுபூதி என்றால் என்னவென்று விளங்கிற்று. அது எப்படிக் கிடைக்கும்? மஞ்சளைப் பொடியாக்கினால் மஞ்சட் பொடி கிடைக்கும். அரிசியைப் பொடியாக்கினால் அரிசி மாவு கிடைக்கும். அது போல ஆசையென்னும் சங்கிலியைப் பொடியாக்கினால் கந்தரநுபூதி கிடைக்கும்.

"ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே!" நிகளமென்றால் சங்கிலி. "ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்பது புத்த பெருமான் வாக்கும் கூட. ஆசை என்னும் சங்கிலி நம்மைப் பல துன்பங்களோடு இணைத்திருக்கிறது. அந்தச் சங்கிலிகள் அறுந்து விழுந்தால் இறைவனோடு ஒன்று பட முடியும்.

பெரும் யானையானாலும் சங்கிலியால் கட்டி விட்டால் நடக்க முடியுமா? நல்லவனாக இருந்தால் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் அநுபூதி கிட்டாது. நல்லவனாக இருந்த புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் மண்ணுலகம் வர வேண்டும். அநுபூதி எய்தி விட்டால் இறைனோடு ஒன்றாக இருப்பதே தன்மை. அங்கே பேச்சு மூச்சு கிடையாது. நித்யானந்தம். அதாவது குன்றாத இன்பம். அதைத்தான் "பேசா அநுபூதி பிறந்தது" என்கிறார் அருணகிரி.

அநுபூதி எப்படிக் கிடைக்குமென்று தெரிந்தது. எதனால் கிடைக்கும்? அதையும் அருணகிரி சொல்லி விடுகிறார். மறைத்து வைக்க ஒன்றுமில்லை. "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே அந்த அன்பரது எண்ணம்.

தூசாமணி என்றால் தூசு இல்லாத மணி. மணியில் தூசு இருந்தால் ஒளி தெரியாது. தூசில்லாத மணியே ஒளிரும். அழுக்கான ஆடை அணிவது நன்றன்று. நீரிருக்குமானால் கந்தையானாலும் கசக்கிக் கட்ட வேண்டும். அப்படிக் குறையில்லாத மணிகளையும் தூய ஆடைகளையும் அணிந்த மலைக் குறத்தி வள்ளியின் நேசனான முருகனின் அன்பாலும் அருளாலும் மட்டுமே அநுபூதி கிட்டும். தமிழ்க் குறத்திகள் தூய ஆடை அணிகலன்களை அணிந்தவர்கள். குறிஞ்சி நிலத்தவர். இன்றைக்கு ஊருக்குள் காணும் குறத்தியர் தமிழ் பேசுகின்றவர்கள் கிடையாது. அது குறையன்று. அவர்கள் உண்மையான மலைக் குறவர்களன்று என்பதைச் சொல்வதற்காக அப்படிச் சொல்லப்பட்டுள்ளது.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, November 20, 2006

43. குறியைக் குறியாது

ஆத்திக-நாத்திக வாதங்கள் பல காலங்களாக இருந்து வருகிறது. எது தவறானது? எது சரியானது? இன்னமும் யாரும் பொது முடிவிற்கு வரமுடியவில்லை. நாத்திகர்கள் நாத்திகம் பேசுகின்றார்கள். ஆத்திகர்கள் ஆத்திகம் பேசுகிறார்கள். ஆனால் நமது தமிழ் மண்ணில் ஒரு பழுத்த ஆத்திகர் நாத்திகம் பேசியிருக்கிறார். அதுவும் நாத்திகர்கள் கூட பேச முடியாத அளவிற்கு.

அருணகிரியைத்தான் நான் சொல்கிறேன். மூச்சுக்கு முன்னூறு முறை முருகா முருகா என்று உருகிய அருணகிரிதான் முருகனைக் கும்பிட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் எது மெய்?
"ஓல மறைகள் அறைகின்ற ஒன்றது
மேலை வெளியில் படருஞ் சுடர்
" என்கிறார்.

ஓல மறைகள்.....அதாவது இறைவனை ஓலமிட்டுத் தொழுகின்ற மறைகள். மறைகள் என்றால் வேதம். வேதம் என்றால் ரிக்கு, யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்களா? அதை நான்மறைகள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பாரே!

உலகில் மறைநூல் என்று எவையனைத்தும் கொண்டாடப்படுகின்றனவோ அவையனைத்தையும் பொதுவாகச் சொல்கிறார் அருணகிரி. திருக்குறள், கீதை, பைபிள், குரான், கிரந்த சாகிப் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் மறைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இறைவனைப் பற்றிச் சொல்கின்றன. அப்படி அனைத்து வேதங்களும் ஓலமிட்டுத் தொழுகின்ற இறையவன் யார்? "மேலை வெளியில் ஒளிரும் சுடர்". இதை எந்த மதத்தார் மறுப்பார்.

முருகன் என்றால் திருவரங்கத்தார் ஒப்பார். சரி. துயில்மால் என்றால் வாடிகனில் எடுபடுமா? ஏசு என்றால் அரபு நாடுகளில் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் "மேலை வெளியில் ஒளிரும் சுடர்" என்று சொல்லுங்கள். யார் மறுப்பர்.

இதுதான் உண்மையான நாத்திகம். இதைத் தமிழ் என்றோ பேசி விட்டது. இப்படிச் சில நடப்புகளும் பண்புகளும் மதங்களுக்கு அப்பாற்பட்டு வழக்கிலுள்ளன. மதங்களில் தெய்வங்களைக் குறிக்கும் முறைகளும் மாறுபடுகின்றன. சிலை வைப்பர் சிலர். ஏடு வைப்பர் சிலர். சிலையில்லை ஏடில்லை திசையென்பர் சிலர். எல்லாம் சரிதான். ஆனால் அனைவரும் பொதுவாக ஏற்றுக் கொண்ட ஒன்று குறியீடு.

வேல் என்பது தமிழ்க் குறியீடு. வடக்கில் சூலாயுதமும் ஓங்காரமும். கிருத்துவர்களுக்குச் சிலுவைக் குறி. முகமதியர்களுக்கு பிறைச்சந்திரன். ஆக குறியீடு என்பது மதங்களுக்குப் பொதுவான பண்பாகக் காணப்படுகிறது.

தியானம் செய்கின்றவர்களைப் பார்த்தால் மனதில் அந்தக் குறியை நினைத்து மற்ற எண்ணங்களை ஒடுக்குவார்கள். அதாவது எல்லாவற்றையும் நினைப்பதை விட ஒன்றை மட்டும் நினைப்பது. இது இரண்டாம் நிலை. அப்படியானால் முதல் நிலை என்ன? எந்தக் குறியையும் நினைக்காமல் மனத்தை ஒடுக்குவது.

பத்து செங்கல் அடுக்கி வைத்திருக்கிறது. வலு இல்லாதவன் கையில் சுத்தியலை வைத்து உடைப்பான். வலு உள்ளவன் வெறுங்கையாலேயே உடைப்பான். ஆனால் எப்படி உடைத்தாலும் கல் உடையத்தான் செய்யும்.

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே


குறியை நினைத்துக் கொண்டு மனத்தை ஒடுக்குகின்றவர்கள் அந்தக் குறியை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா. அது முழுமையான ஒடுக்கமாகாது. ஒன்றையும் நினைக்காமல் மனம் ஒடுங்குவதே சிறந்தது.

இப்பொழுது முதல் வரியைப் படியுங்கள். "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியை!" புரிகிறதா? எந்தக் குறியினையும் மனதில் குறியாது ஆனால் இறையருளைக் குறித்து அறியும் நெறியைத்தான் அருணகிரிநாதர் கேட்கிறார்.

அந்த நெறி எப்படிக் கிட்டும்? "குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்!". முருகா! உனதருளால் அல்லவா அது கிட்டும்.

அப்படி ஒரு நெறி தெரிந்தபின் அருணகிரியின் அநுபவம் என்ன? "செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே!"

இருப்பவை அனைத்தும் அற்று போகும் நிலை. அது அனைத்தையும் கடந்த நிலை. சச்சிதானந்த நிலை. சத்து+சித்து+ஆனந்தம் = சச்சிதானந்தம். உலகம் மறந்து போயிற்று. பேச்சில்லை. எண்ணமில்லை. அறிவிற்கும் அறியாமைக்கும் கூட அங்கு இடமில்லை. எல்லாம் மறந்த ஆனந்த நிலை.

பக்தியுடன்,
கோ.இராகவன

Monday, November 13, 2006

42. வீட்டை விட்டுத் துரத்தினால்

தந்தையார் வழியிலே பெருஞ் செல்வம் மகனுக்கு வந்தது. மகன் அதை வீணாடம்பரஞ் செய்தான். கொஞ்சமும் அறம் செய்யவில்லை. "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது தமிழ் மூதாட்டி வாக்கு. கைக்காசு குறைந்தது. கடன் வாங்கினான். அதுவும் தீர்ந்தது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. வாசலில் அமீனா வந்து நின்றான். இதுவரை இருந்த இடம் காலாவதியாகி விட்டது என்ற நீதிமன்ற உத்தரவு வேறு. என்ன செய்வது? இருந்த வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும் இழுத்துப் போடும் அதிகாரம் வாசலில் நிற்பவனுக்கு இருக்கிறது.

கண்ணீர் விட்டு புலம்பினால் விட்டு விடுவானா? இத்தனை நாள் இருந்த வீடல்லவா. நம் விருப்பபடியெல்லாம் செய்யக் காரணமாயிருந்த வீட்டை விட்டுத் துரத்தினால் என்ன செய்வது? தெருவிலா நிற்பது? வேறு வீடு வேண்டுமே? அப்பொழுது நமக்கு வேண்டியவர் வந்து, அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றால் எவ்வளவு நிம்மதி கிட்டும்!

இதுதான் வாழ்க்கைத் தத்துவம். தாய் தந்தையர் கொடுத்த வீடு இந்த உடம்பு. நமது விருப்பப்படியெல்லாம் வளைந்து கொடுத்து இன்பம் நுகர்ந்த உடல். விதி முடிந்து விட்டது. காலதூதன் வாயிலில் நிற்கிறான். பெருங்கலகம் செய்து இதுவரையிருந்த உடம்பை விட்டுத் துரத்தப் போகிறான். அப்போது எங்கே போவது? இன்னொரு வீடு (உடம்பு) கிடைக்குமா?

அருணகிரி அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "முருகா! எனக்குத் தெரியும். இந்த நமன் வந்து கலகம் செய்வான். என்னை உடலைவிட்டுத் துரத்த வருவான். வேறு போக்கிடம் ஏது? அப்பொழுது நீ வா. வந்து என்னைக் கா. இந்த உடம்பாகிய வீட்டை விட்டுப் பிரித்து வீடுபேறு என்ற வீட்டை அருள்வாயாக!"

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகஞ் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞானோப தேசிகனே


நமன் கவர்ந்தால் வீடுபேறு கிட்டாது. இறைவனே வர வேண்டும். அப்பொழுதுதான் வீடுபேறு கிட்டும். பெரிய வீட்டிற்குப் போக முடியும். என்னுடைய கிருத்துவ நண்பியுடன் பேசிக் கொண்டிருந்தேன். கிருத்துவ மதத்திலும் இதே கருத்து சொல்லப்படுகிறதாம். அதை salvation என்கின்றார்கள். நமது தமிழும் அதைத்தான் சொல்கிறது. தமிழில் இல்லாதது என்ன?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். "கா கா நமனார் வரும் நாள்" என்கிறார் அருணகிரி. இரண்டு முறை கா கா என்கிறார். அவசரமாகக் கேட்டும் பொழுது "குடு குடு" என்போம். "பர பர" என்று இரட்டைக் கிளவியும் உண்டே. அந்த நேரத்தில் தாமதம் செய்யக் கூடாது. அவ்வளவு அவசரம். அதனால்தான் சீக்கிரம் வர வேண்டும் என்று இரண்டு முறை அழைக்கிறார்.

வாகாக மயில் மீது ஏறி வலம் வருகின்ற முருகா! யோகா! சிவஞானமே சிறந்தது. அதையும் சிவனுக்கே உபதேசித்த பெருந்தேவரே! உயிர் பிரியும் வேளையில் காலனிடத்தில் என்னை விட்டு விடாமல் நீயாக விரைந்து வந்து மெய் வீட்டை (உடம்பு எனும் வீடு) விட்டு என்னைப் பிரித்து மெய் வீட்டைத் (உண்மையான வீட்டை) தருவாயாக.

பக்தியுடன்,
கோ.இராகவன்