Friday, December 02, 2005

எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்....

நாம் நிறைய தவறு செய்திருக்கிறோம். குற்றம் செய்திருக்கிறோம். ஆண்டவன் நமக்கும் வாழ்வளிப்பானா என்று என்றைக்காவது ஐயம் ஏற்பட்டால் இந்தப் பாடலைப் படியுங்கள் உண்மை விளங்கும்.

சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச்
சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே

நாம் புகழாததால், நாம் வணங்காததால், நாம் நினைக்காததால் ஆண்டவன் நம்மை ஒரு போதும் தண்டிக்கப் போவதில்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை வணங்காதவரைத் தண்டிக்க அவர் இரண்டாந்தர எஜமானன் இல்லை. அவர் அனைவருக்கும் பொது. நல்லவருக்கு ஆன அதே இறைவனே தீயவனுக்கும். இருவரையும் வாழ்விக்க வேண்டிய கடமை ஆண்டவனுக்கு உண்டு.

போருக்குப் போகிறான் சூரன். அவனது முகம் கடுகடுவென இருக்கிறது. செக்கச் சிவந்து இரத்த நிறத்தில் இருக்கிறது. கண் பார்வையில் அனல் பறக்கிறது. முருகனை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற வெறியோடு போகிறான். போர்க்களத்தில் முருகனும் நிற்கின்றார். முருகனைப் பார்த்த சூரனுக்கு வியப்பு. பின்னே. புன்னகை தவழ குளிர் முகத்தோடு வந்து நின்றால்? கச்சியப்பர் சொல்கின்றார்.
"முழுமதியன்ன ஆறுமுகங்களும் முந்நான்காகும்
விழிகளின் அருளும் வேறுள படையி சீரும்
அணிமணி தண்டையார்க்கும் செழுமலரடியும் கண்டாண்
".

ஆக சூரனுக்குதான் முருகன் மேல் ஆத்திரம். ஆனால் முருகனுக்கோ சூரன் மேல் அன்பு. குளிக்காமல் போவதால் ஆறு நம்மீது கோவிக்குமா? நாம் குளிக்கப் போனால் நம்மைத் தூய்மைப் படுத்துவது ஆறு. அப்படித்தான் முருகக் கடவுளும். நாம் வணங்கினால் நம்மை வாழ்விப்பார். நாம் வணங்காமல் போனால் நம்மை கோவிக்கவே மாட்டார். இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்று உணர்த்தும் தத்துவம். இது தமிழுக்கு மட்டுமே உரியது.

சிந்திக்கிலேன் - முருகா உன்னைப் பற்றி உள்ளத்தில் கொஞ்சமும் சிந்திக்கவில்லை

நின்று சேவிக்கிலேன் - உன்னுடைய திருக்கோயிலுக்கு வந்து ஒரு முறையேனும் வணங்கவில்லை

தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் - அணிமணி தண்டை அணிந்த உனது செந்தாமரைப் பாதங்களை நான் கண்டு வழிபடவில்லை

ஒன்றும் வாழ்த்துகிலேன் - ஒருமுறையாவது உனது பெயரைச் சொல்லியும் புகழைப் பாடியும் வாழ்த்தவில்லை

மயில் வாகனனைச் சந்திக்கிலேன் - மயில் மீது அமர்ந்த ஐயனே உன்னைத் தேடி வந்து சரணடையவில்லை

பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் - பொய்யை நிந்தித்து உண்மையே பேசி வாழவில்லை. (பொய்யா விளக்கே விளக்கு என்கிறார் வள்ளுவர். அத்தோடு பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த.)

புந்திக் கிலேசமும் - அறிவில் ஏற்படும் துன்பமும்

காயக் கிலேசமும் - உடலில் ஏற்படும் துன்பமும்
போக்குதற்கே - தீர்வதற்கே!

முருகா, உன்னைப் புகழ்ந்து ஒன்றும் சொல்லாது போனாலும், உன்னை வணங்காது போனாலும், உனது புகழைப் பாடாது போனாலும் உடலாம் மனதால் அடையும் துன்பங்களைக் களைந்து எங்களைக் காக்கின்ற உன் கருணைக்கு அளவுண்டோ!

அன்புடன்,
கோ.இராகவன்

16 comments:

  1. இராகவன்,

    எங்கே உங்கள் அடுத்தப்பதிவைக் காணவில்லை என்று என் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு இட்ட பதிலில் கேட்டு வாய் மூடவில்லை. இந்தப் பதிவைப் போட்டுவிட்டீர்கள். :-)

    அருமையான பாடல். எளிமையானதும் கூட. சிறப்பான விளக்கம்.

    ReplyDelete
  2. :-) இப்பொழுதுதான் இட்டேன் குமரன். கந்தரலங்காரப் பொறுக்கு மணிகளை கார்த்திகை மாதத்துள் முடிக்க வேண்டுமே. அதற்குதான். :-)

    ReplyDelete
  3. நீங்க பதிவுகள போடற வேகத்துல என்னால பின்னூட்டம் கூட போட முடியலீங்க. என்னா வேகம்,என்னா வேகம். உங்க வேகம் எங்க வேகம் இல்லீங்க..

    அத்தனையும் தித்திக்கும் முத்துக்கள். கண்ணு பட்டுற போகுது ராகவன்.

    ReplyDelete
  4. நீங்க வேற ஜோசப் சார். இன்னும் சுறுசுறுப்பு வேணும்ன்னு நான் இராகவன்கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா அவர் வேகத்தைப் பாராட்டறீங்களே. ஒருவேளை வஞ்சப்புகழ்ச்சியோ? :-)

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. வந்துட்டீங்களா ராகவன் நட்சத்திர வாரம் முடிச்சிட்டு. வழக்கம் போல அழகாக எழுதியிருக்கீங்க. படிக்கும் போதே அங்கே பக்தியும், என்னை போன்ற ஆட்கள் புரிந்து கோள்ள எளிமையும் இருக்குறது. இந்த பாடல்கள் எங்காவது இசை தட்டாக கிடைக்கிறதா?. தெரிந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  7. // நீங்க பதிவுகள போடற வேகத்துல என்னால பின்னூட்டம் கூட போட முடியலீங்க. என்னா வேகம்,என்னா வேகம். உங்க வேகம் எங்க வேகம் இல்லீங்க..

    அத்தனையும் தித்திக்கும் முத்துக்கள். கண்ணு பட்டுற போகுது ராகவன். //

    உங்க அன்புக்கு நன்றி ஜோசப் சார். சந்தோஷமா இருக்கு. ஆனா குமரன் சொல்றாப்புல நான் ஸ்லோ தான். ஏன்னா எனக்கு மனசுல திருத்தியா படிஞ்சி வந்தாதான் நான் எதையும் எழுதுவேன். என்னோட கனவு புராஜெக்ட் ஒன்னு ரொம்ப நாளா ஓடிக்கிட்டு இருக்கு. ரொம்ப மெதுவா. எத்தனை வருசம் ஆகுமோ! ஆனா அதப் பத்தி இப்ப எதுவுமே சொல்ல மாட்டேன்.

    சரி. இது மாதிரி எனக்கு எப்ப நீங்க பைபிளை அறிமுகப் படுத்தப் போறீங்க? டாவின்சி கோடு நாவல் படிச்சப்புறம் எனக்கு ஏசுநாதர் மேலயும் ஒரு ஈடுபாடு வந்திருக்கு.

    ReplyDelete
  8. // வந்துட்டீங்களா ராகவன் நட்சத்திர வாரம் முடிச்சிட்டு. வழக்கம் போல அழகாக எழுதியிருக்கீங்க. படிக்கும் போதே அங்கே பக்தியும், என்னை போன்ற ஆட்கள் புரிந்து கோள்ள எளிமையும் இருக்குறது. இந்த பாடல்கள் எங்காவது இசை தட்டாக கிடைக்கிறதா?. தெரிந்தால் சொல்லுங்கள். //

    நன்றி சிவா. கந்தரலங்காரம் சீர்காழி கோவிந்தராஜன் பாடி இசைத்தட்டாகக் கிடைக்கிறது. என்னிடம் கேசட் இருக்கிறது. இசைத்தட்டு கிடைத்தால் நானும் வாங்க வேண்டும். சென்னை செல்லும் பொழுது தேட வேண்டும். விறுவிறுப்பான பாடல் போல இல்லாமல் ஒரு விதமாக மந்திர உச்சாடணம் போல மெதுவாகச் செல்லும்.

    ReplyDelete
  9. //விறுவிறுப்பான பாடல் போல இல்லாமல் ஒரு விதமாக மந்திர உச்சாடணம் போல மெதுவாகச் செல்லும்//

    சீர்காழி பாடிய அபிராமி அந்தாதி போல.

    ReplyDelete
  10. இராகவன் அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' தலைப்பு எனக்குப் புரியலையே. பாடலை எளிதாய் விளக்கிவிட்டு, தலைப்பைப் புரியாத மாதிரி கொடுத்துள்ளீர்களே...

    வேறு யாருக்காவது புரிந்ததா?

    ReplyDelete
  11. //அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' //

    கண்ணாடியில் நம்முன் நிற்கும் எதிரியைப் பற்றியோ?

    ReplyDelete
  12. இருக்கலாம் இராமநாதன். தலைப்பு வைக்கிறதுல இராகவன் புலி ஆச்சே. இப்படி ஏதாவது வச்சிருப்பார்.

    ReplyDelete
  13. Dear Raghavan
    Kumaran helped to read u r blog in tamil font.thanks for kumaran and also for u r good description. Appar padal ondrum ithu pol ullathu. Panikilen malar pathangal choodukilen chottukindralathumilen Pina neje enkirar.irayvanay ninaykatha nenjame pinam.poduvaga udal than namakku pinam anal avarukku nenjame pinamaga kattukirar.Sondaryalahari eppadi Sakthi porunthumo athu pola kanthanukku Kantahr alnkaram.ungalathu vilkkam puthiya konathil ullathu.ini adikadi kadipen. anban TRC

    ReplyDelete
  14. // இராகவன் அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' தலைப்பு எனக்குப் புரியலையே. பாடலை எளிதாய் விளக்கிவிட்டு, தலைப்பைப் புரியாத மாதிரி கொடுத்துள்ளீர்களே...

    வேறு யாருக்காவது புரிந்ததா?

    //அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' //

    கண்ணாடியில் நம்முன் நிற்கும் எதிரியைப் பற்றியோ? //

    குமரன், இராமநாதன்.....எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில் முழுமதியன்ன ஆறு முகங்களும் முந்நான்காகும் விழிகளின் அருளும் கண்டான் சூரன். அவன் தவம் செப்ப முடியுமா?

    இப்பொழுது புரிந்ததா?

    ReplyDelete
  15. // ungalathu vilkkam puthiya konathil ullathu.ini adikadi kadipen. anban TRC //

    அன்புள்ள TRC, நீங்கள் படித்து மகிழ்ந்து கருத்தும் இட்டதில் மெத்த மகிழ்ச்சி. இது போலவே ஒப்பு நோக்கும் விதமாக அப்பர் பாடலை இட்டது போல ஒவ்வொரு முறையும் இட வேண்டும். அதுதான் எனது விருப்பமும் கூட.

    ReplyDelete
  16. அதென்னமோ மகா அரக்கர்களா இருக்கவங்களுக்கு அவன் தரிசனம் சீக்கிரம் கிடைச்சிருது :( அது ஏன்?

    ஆனா இந்தப் பாடலையும் விளக்கத்தையும் படிச்சப்புறம் கொஞ்சம் ஆறுதலா இருக்கது உண்மைதான்...

    ReplyDelete