Tuesday, July 25, 2006

26. நிற்பதும் நிலைப்பதும்

இந்த உலகத்தில் குற்றங்கள் எதனால் நடக்கின்றன? குற்றம் செய்கின்றவர்கள் எதனால் அதைச் செய்கின்றார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். அது நிலையாமையை நினைக்காமை. நாம் நிலைப்போம். நமது வாழ்வு நிலைக்கும். நமது அதிகாரம் நிலைக்கம் என்று நினைப்பதுதான் குற்றங்களின் அடிப்படைக் காரணம். நிற்பது எது? நிலைப்பது எது? நிற்பவைகள் எல்லாம் நிலைப்பவைகள் அல்ல. வானுயர உயர்ந்த மாடமாளிகைகள் நாள்பட நிற்கும். நூற்றாண்டுகளையும் தாண்டி நிற்கும். ஆனால் எப்பொழுதும் நின்று நிலைக்குமா? ஆக எப்பொழுதும் ஒன்று நிற்குமானால் அது நிலைப்பது.

பேபல் மன்னனுக்கும் அந்தக் குழப்பம் வந்தது. தான் நிலைப்போம். தனது ஆட்சியும் அதிகாரமும் நிலைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டான். விளைவு? விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு கோபுரம் நின்றது. அந்தக் கோபுரமும் நிலைக்கும் என்று நம்பி, அதன் மீது ஏறி நின்று இறைவனை வம்புக்கிழுத்தான். பாவம் பேபல். நிற்பவைகள் எல்லாம் நிலைக்காதவை என்று அவனுக்கு உணர்த்த அவனையும் அழித்து, அவனது கோபுரத்தையும் அழித்தார் இறைவன். நிற்பவைகளையும் நிலைப்பவைகளையும் முறையாகப் புரிந்து கொண்டிருந்தால் இறைவனின் கருணையோடு பேபல் வாழ்ந்திருப்பான்.

நிற்பது குறித்தும் நிலைப்பது குறித்தும் அழகும் கருத்தும் ஒருங்கே அமைந்த பாடல் இது. இதற்கு விளக்கம் சொல்வதும் மிகவும் இனிமையானது.

மெய்யே என வெவ்வினை வாழ்வையுகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே


நிலைப்பது எது என்ற உண்மையை உணர வேண்டும். இந்த உலக வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணி உழன்று கொண்டிருந்தால் நன்றன்று. அப்படி எத்தனை நாள்தான் துன்பப்படுவது? முருகா! நீதான் காக்க வேண்டும். இதைத்தான் முதலிரண்டு வரிகளில் அழகாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். "மெய்யே என வெவ்வினை வாழ்வினை உகந்து, ஐயோ! அடியேன் அலையத் தகுமோ!"

அடுத்த இரண்டு அடிகளும் அழகுணர்ச்சி மிகுந்த வரிகள். "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்" என்கிறார் அருணகிரி. முருகனுடைய திருக்கைகளும், அந்தக் கைகள் தாங்கிய வேலும், கழலணிந்த திருவடிகளும் செம்மையானவை என்று இதற்குப் பொருள். கொடுத்துச் சிவக்கும் வள்ளலின் கைகள். வள்ளியின் கணவன் முருகனும் வள்ளல்தான். வேல் ஏன் செம்மையாக இருக்கிறது? எதிரிகளைக் கொன்றதாலா? இல்லை. வேல் அறிவின் அடையாளம். கொண்ட அறிவும் செம்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறவழியில் நடக்க முடியும். செம்மையற்ற அறிவு அழிவு வழியையே காட்டும். முருகனின் திருவடிகள் எதனால் சிவந்தன? அந்தத் திருவடிகளை தமிழடியவர்கள் தாங்கித் தாங்கிச் சிவந்தனவாம். என்ன அழகான நயம். மேலே சொன்ன அத்தனையையும் சொல்ல அருணகிரிக்கு தேவைப்பட்டவை ஐந்தே சொற்கள்.

மயிலேறிய சேவகனே! முருகன் திருக்கோலங்களிலேயே சிறந்தது மயில் மீது அமர்ந்த கோலம். வள்ளி தெய்வானையுடன் இருந்தால் இன்னமும் சிறப்பு. முருகனின் செம்மைப் பண்பை சென்ற அடியில் பார்த்தோம். மாணிக்கத்தை ஒத்த செம்மை. மயிலானது பசுமை கலந்த நிறமுடையது. அதாவது மரகத வண்ணம். மயில் மீது முருகன் அமர்ந்திருப்பது மரகதமும் மாணிக்கமும் ஒன்று சேர்ந்து இருப்பது போல எழில் மிகுந்த காட்சி. அந்தக் காட்டியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

முருகா! மயிலேறிய மாணிக்கமே! திருக்கரங்களும், கரமேந்திய வேலும், அடியவர் துயர் நீக்கும் திருவடிகளும் செம்மையாகக் விளங்குகின்றவனே! நிலையாத இந்த வாழ்வை உண்மையென்று நம்பி துன்புறாமல் காப்பாற்றுவாய்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, July 11, 2006

25. சண்டை போட்டு எதிர்ப்பவனைக் காப்பது

இந்த மண்ணில் பிறந்து விட்டாலே, உடலெடுத்து விட்டாலே, உடலிலுள்ள ஒவ்வொரு உணர்விற்கும் உணவிடுவது அவசியம். பசிக்கு உணவு. வருத்தத்தில் அழுகை. களைப்பில் ஓய்வு. மகிழ்ச்சியில் சிரிப்பு. சிலர் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருப்பார்கள். அது மிகவும் தவறானது. எந்த உணர்வையும் அடக்குவது எதிர்மறையான விளைவையே தரும். அதே நேரத்தில் அளவிற்கு மிஞ்சினால் அலுப்புத் தட்டிவிடும். பசிக்கு மீறி உண்டால், உடல் உபாதை உண்டாகி உண்டதெல்லாம் மறுபடியும் ஆகாதென்று மருத்துவரால் தடுக்கப்பட்டு விடும்.

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே


அருணகிரியும் அளவிற்கு அதிகமாகவே உண்டார். அவருக்கும் ஒரு மருத்துவர் வந்தார். இளம் வயதில் தையலார் மையலில் வீழ்ந்து பரத்தையர் வீடே சுகமென்று இருந்தார். இத்தனைக்கும் அருணகிரி திருமணமானவர் என்று சொல்வார்கள். "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்." அருணகிரியின் அச்சும் முறிந்தது. முதலில் அழகு அழிந்து, பிறகு ஆசை அழிந்தது. முருகன் அருளால் உய்வு பெற்றார். அதைத்தான் முதலிரண்டு அடிகளில் இந்தப் பாடலில் சொல்கிறார். "கூர் வேல் விழியுடைய மங்கையர் கொங்கையிலே நான் நாள்தோறும் சேர்வேன். முருகா! அப்பொழுதெல்லாம் உன்னுடைய அருள் என்னைச் சேர வேண்டுமென்று நீ எண்ணவில்லையே!" முருகனைக் கேட்கிறார். முருகனுக்குத் தெரியாததா? மருத்துவனுக்குத்தானே தெரியும் மருந்தை எப்பொழுது கொடுக்க வேண்டுமென்று!

கந்தன் வந்தான். மருந்தைத் தந்தான். அருணகிரி பிழைத்தார். அருணகிரியால் தமிழ் பிழைத்தது. அந்தத் தமிழில் முருகனை பாடிப் புகழ்ந்து மகிழ்ந்தார். அதுதான் அடுத்த இரண்டு அடிகள். இங்கே மற்றொன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். உணர்வுகளுக்கு வடிகாலான சம்போகத்தைத் தவறென்று சொல்லவில்லை. மாறாக கொங்கையில் சேர்வேன். அத்தோடு முருகனின் அருளோடும் சேர்வேன் என்று கூறுகின்றார். உடலுறவு தவறென்றால் பிறகு உலகம் இயங்குவது எங்ஙனம்? ஆகையால் சொற்களைக் கோர்க்கும் பொழுது திறமையாக கோர்த்திருக்கின்றார். அருணகிரி பாடியதெல்லாம் நமக்காக என்று அறிந்து அநுபூதியைப் படிக்க வேண்டும்.

சூரன் என்பது ஆணவத்தின் உருவகம். அந்த ஆணவம் வேரோடு அழிய வேண்டும். கருவேல மரத்தை அடியோடு வெட்டினால் போதாது. வேரையும் பொசுக்கி விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மரம் முளைத்து விடும். அகந்தையும் அப்படியே! முருகன் சூரனை அழிக்கவில்லை. ஆனால் சூரனின் அகந்தையை அழித்தார். சூரன்தான் சேவலும் மயிலுமாய் புகழோடு இன்றும் வாழ்கின்றானே.

ஆணவத்தின் காரணம் மாயை. தாரகன் மாயாமலம். மாயைதான் தன்னை பெரியவன் என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பின் விளைவே ஆணவம். ஆக மாயை ஆணவத்தைக் கொடுக்கிறது. அதனால் முதலில் மாயையை அழித்தார் முருகன். கிரவுஞ்ச மலையான நின்ற தாரகாசுரனை முதலில் அழித்தார். அதைத்தான் "சூர் வேரொடு குன்று தொளைத்த" என்று விளக்குகிறது மூன்றாவது அடி. அப்படியெல்லாம் போர் புரிந்து முருகன் சாதித்தது என்ன? அழிவா? இல்லை. போரிட்டுக் காத்தார். யாரைக் காத்தார்? யாரோடு போர் புரிந்தாரோ அவர்களைக் காத்தார். அல்லது புரந்தார். சிங்கமுகாசுரன் அம்பிகைக்கு சிம்ம வாகனம். தாரகன் ஐயனாருக்கு ஆனை வாகனம். இதைத்தான் "போர் வேல புரந்தர பூபதியே" என்று பாடலை முடிக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, July 04, 2006

24. அடியின்றி முடியவோ!

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே

அருணகிரி முருகனைப் புகழ்ந்து, அவனது திருவடிச் சிறப்புகளைப் பற்றி மகிழ்ந்து முகிழ்ந்து தெவிட்டாத தீந்தமிழில் நிறையச் சொல்கிறாரே! அப்படி என்ன கண்டார்? எதைக் கண்டார்? எப்படிக் கொண்டார் என்று சிந்தித்தால், விடை கிடைக்கிறது கந்தரலங்காரத்தில். "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்!" வண்டுகள் மொய்க்கும் பூந்தாரை (மாலை) அணிந்த வள்ளியை வேட்டுவன் உருவில் சென்று வென்றவனே! உன்னை ஒருவர் வைதாலும் அது தமிழில் என்றால் அவரை விரைந்து காப்பவனே! அதாவது முருகனுக்கு இருக்கும் தமிழ்க்காதல். தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் வள்ளலைப் புகழ்ந்து பாடினால், என்னென்ன கிடைக்கும்? வாழ்வு போகும். ஆம். இவ்வுலக வாழ்வு எனும் பற்று போய், இறைவன் திருவடி கிடைக்கும். அதனால்தான் அலுக்காமல் தமிழில் நிறைய பாடியிருக்கிறார் அருணகிரி. திருப்புகழ்களும், கந்தர் அநுபூதியும், கந்தர் அலங்காரமும், கந்தர் அந்தாதியும், வேல் விருந்தமும், மயில் விருத்தமும். சேவல் விருத்தமும் இன்னும் நிறையவும் பாடியிருக்கிறார்.

முருகனுடைய திருவடிகளை எப்பொழுதும் நினைக்க வேண்டும். இது இல்லறம் துறந்த வல்லவர்களுக்கு. நாளுக்கு ஒரு முறையேனும் நினைக்க வேண்டும். இது இல்லறம் போற்றும் நல்லவர்களுக்கு. அப்படி நினைக்காமல் இருக்க முடியுமா? இருந்தால் அது அறியாமை. அறியாமை இருந்தால் என்ன ஆகும்? எல்லாம் முடிந்து போகும். அறியாமை என்னும் இருள் சூழ்ந்த நிலத்தினிலே வெற்றி என்னும் பயிர் விளைவதில்லை. அறிவு என்னும் சூரியன் அதற்குத் தேவைப்படுகிறது. இறைவனுடைய திருவடிகளை அறியாத பொழுது வாழ்க்கையின் முடிவு இருளில் மூழ்குகிறது. அதை அந்தம் என்பார்கள். அந்த அந்தத்தைச் செய்கிறவன் அந்தகன். அதாவது எமன். கரிய எருமை மேல் ஏறி வருவான். ஆகையால் யமன் வருகையில் இருளும் வரும். ஆனால் இறைவனுடைய அடியவர்களுக்கு அந்தத் துயரம் இல்லை. வேலோடும் மயிலோடும் சேவலோடும் முருகனே வந்தணைப்பான். ஆகையால் முடிவு கெடாது. இப்பொழுது புரிந்திருக்குமே "அடியைக் குறியாதறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ!"

முதலிரண்டு அடிகளுக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அடியார்க்கு யாம் அடியார் என்பது ஈசன் வாக்கு. பெரியது எது என்ற கேள்விக்கு ஔவையும் "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்கிறார். இறைவனுக்கும் இவ்வுலக மக்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்த (இன்றும் மக்கள் மனதில் வாழும்) அடியார்கள்து பெருமைகளை அறிந்து உணர வேண்டும். அவர்தம் வாழ்வில் பின்பற்றிய பொதுநலனில் நாமும் பாடம் கற்க வேண்டும். பெருஞ் சமயக் குரவர் திருநாவுக்கரசர். தேவாரம் பாடி ஈசன் அருளை உலகுக்குக் காட்டிய மகான். அப்படிப்பட்ட பெரியவர் சமயத் தொண்டோடு சமூகத் தொண்டும் செய்தார். ஆம். உழவாரப் பணி செய்து தொண்டாற்றினார். பலரும் நடக்கும் நிலம். அங்கே முட்செடிகள் இருந்தால் என்ன? அதை பெரும் சமயக் குரவரான அப்பரா செய்ய வேண்டும்? மடத்தில் இருக்கின்றவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாமே! ஆனால் அவரே செய்தார். ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர். காந்தியடிகள் தம்முடைய கழிப்பறையைத் தாமே செய்து வந்தார். அது பெரியவர்கள் செயல். அந்தச் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்று வாழ்ந்தால் அன்றி, நம்முடைய வாழ்க்கையில் எந்த பயனும் இருக்காது. இல்லையென்றால் எல்லாரையும் போல நமது வாழ்வும் முடிந்து போகும். அடியார்கள் புகழ் போல நின்று நிலைக்காது.

வடிவிக்கிர வேல் மகிபா என்றால்? முருகனுடைய வேல் வடிவுடையது. அறிவுடையது. வெற்றி உடையது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது என்ன? கொடியானது கொம்பைச் சுற்றி வளரும். அங்கே கொடிக்கு கொம்பு ஆதாரம். கொம்பிற்கு கொடி ஆதாரம். ஒன்று இல்லையேல் மற்றொன்று இருக்க வேண்டியதில்லை. வேறுவேறாயினும் இரண்டும் ஒன்றே. இல்லறத்தில் கணவன் மனைவி உறவும் அவ்வாறே. பெரியவரும் இல்லை. சிறியவரும் இல்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதாரம். இதை எடுத்துக் காட்டத்தான் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்யும் வழக்கம் வந்தது. இதை வைத்துக் கொண்டு இறைவனுக்கு இல்லற உணர்ச்சிகள் இருப்பதாக தவறாகக் கருதக் கூடாது. எழுத்துக் கூட்டி எழுதச் சொல்லித் தரும் ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். இருந்தும் மாணவனுக்கான அவரும் எழுத்துக் கூட்டுவது போல இறைவன் இறைவியோடு சேர்ந்து காட்சி தருகிறான். சரி. செய்யுளுக்கு வருவோம். முருகன் கொம்பு. வள்ளி கொடி. அதைத்தான் குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே என்கிறார். வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது வள்ளிக் கொடியை.

குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். உருவத்தில் பெரியது பூதம். பூதரன் என்றால் பருத்தவன். குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். அப்படிப் பட்ட முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி நாம் வாழ்வு பெற வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 27, 2006

23. சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொன்னால்

முருகா, உன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று விருப்பம் கொண்டு வள்ளி நாச்சியார் அரும் பெரும் தவம் செய்து, அதன் பலனாக உன்னையே அடைந்தார். அழகான கூந்தல் அலங்காரம் கொண்ட வள்ளியின் திருவடிகளை அடையும், மேருமலையையை ஒத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும், வேளையில் வந்து காப்பவருமான முருகா! எங்களையும் காத்து அருள்வாயாக!

காளைக் குமரேசன் எனக்கருதி
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே


மேலே சொன்னது இந்தப் பாடலுக்கான வெளிப்படையான விளக்கம். அதை அப்படியே பொருள் கொள்வதிலும் தவறில்லை. அதே நேரத்தில் உட்பொருளை அறிந்து கொள்ள முடியுமானால் அது மிகவும் சிறந்தது. அதை இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இந்தப் பாடலில் அருணகிரி உலக இயக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். மிகவும் ஆழமாக அறிந்து தெளிய வேண்டிய பாடலிது.

"காளைக் குமரேசன் எனக் கருதி" என்றால் "தனக்கான ஆண்மகன் என்று கருதி" என்று பொருள். காளை என்றால் ஆண்மகன் என்று வேறு எங்கு சொல்லியிருக்கிறார்கள்? புறநாநூறு உதவிக்கு வருகிறது. "ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே" என்ற பாடலில் "களிறு எறிந்து மீள்தல் காளைக்குக் கடனே" என்று வருகிறது. காளை என்ற ஆகுபெயர் இங்கே வீரத்தைக் குறிக்கிறது. முருகனே மணவாளனாக வரவேண்டும் என்று வள்ளி தவம் இருந்தார். அதைத்தான் "தாளைப் பணியத் தவம் எய்தியவா" என்கிறார் அருணகிரி.

சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? இந்த உலக இயக்கம் மூன்று சக்திகளால் ஆகின்றது. அவை இச்சை, கிரியை மற்றும் ஞானம். இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை. கிரியை என்றால் செயல். ஞானம் என்றால் அறிவு. ஒன்றின் மீது ஆசை வைத்து அதை அடைவதற்குக்கு வேண்டிய செயல் செய்யப்படுகிறது. அந்தச் செயலை அறிவதற்கும், பிறகு செயலாற்றுவதற்கும் அறிவு தேவைப்படுகிறது. உலகத்தில் எந்த இயக்கம் என்று பார்த்தாலும் மேற்சொன்ன மூன்று விளைவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஞானம் குறைவானால், செயலாற்றல் குறையும். ஆசை கை கூடாது. ஆசை தவறானால், அதை அடையும் அறிவும் இருந்தால் தவறான செயல் நடந்தேறும். இப்படி எல்லாமே மூன்று சக்திகளில் முடிந்து விடுகிறது.

இந்த மூன்று சக்திகளையும் ஒருங்கே கொண்டவர் முருகப் பெருமான். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. தெய்வயானை அம்மை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. ஆகையால்தான் வள்ளி தெய்வயானையோடு முருகனை வணங்குதல் மிகவும் சிறப்பு. முன்பே சொன்னது போல வள்ளிக்கு முருகனை அடையும் ஆசை இருந்தது. ஆகையால் தவம் செய்தார். அடைய விருப்பம் கொண்டு தவம் செய்தமையால் வள்ளி இச்சா சக்தியாகிறார்.

"வேளைச் சுரபூபதி மேருவையே" என்கின்ற சொற்றொடரை இப்பொழுது பார்ப்போம். மேரு மலை என்பது இமயமலையின் மற்றொரு பெயர். உலகத்தில் உயர்ந்த சிகரம் இமயத்தில்தானே இருக்கிறது. அதுபோல முருகக் கடவுள் உயர்ந்தவர் என்று பொருள். சுரபூபதி என்றால் தேவர்களின் தலைவன். அது சரி. அதென்ன வேளை? காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்கிறார் வள்ளுவர். அப்படி காக்க வேண்டிய வேளை வந்ததும் வேலைத் தூக்கிக் கொண்டு காக்கும் வேலை பார்க்க வருகின்றவன் கந்தன். அதனால்தான் அந்த வேளை என்ற அடைமொழி.

"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்றும் வருகிறதே. முன்பு ஒருமுறை முருகன் வள்ளியைப் பணிவாரா என்று பார்த்தோமே! "பணியா என வள்ளி பதம் பணியும்" என்ற வரிகளைச் சொல்கிறேன். பிறகு இங்கே மறுபடியும் வருகிறதே. இங்கே முருகன் வள்ளியைப் பணிகிறார் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறாரே அருணகிரி. என்ன நினைத்து சொல்லியிருப்பார்? அது ஒரு உட்பொருள். ஆசை அல்லது இச்சை என்பது அனைத்து செயல்களுக்கும் அறிவிற்கும் ஆதாரமாக இருப்பதைப் பார்த்தோம். உயிர்களுக்கு எல்லாம் ஆதாரமானது ஆன்மா. அந்த ஆன்மா விலகிவிட்டால் வெறும் உடலுக்கு எந்த ஆசையும் இல்லை. ஆகையால் செயலும் இல்லை. அதை அறியும் ஞானமும் இல்லை. அப்படிப்பட்ட ஆன்மாக்களை இறைவன் அணைத்துச் செல்வதுதான் "பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்ற சொற்றொடர். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. இச்சா சக்தி ஆன்மாவின் ஆதாரம். அந்த ஆன்மாக்கள் அடைவது இறைவன் திருவடியை. அதுவும் ஆன்மாக்கள் தேடிச்செல்ல வேண்டாம். பெருங்கருணையோடு இறைவனே ஆன்மாக்களை அணைத்துக் கொள்வான் என்பதைத்தான் அப்படிச் சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 20, 2006

22. முருகன் காட்டும் ஒலியும் ஒளியும்

நுண்ணிய கருத்துகளை தண்மையாகச் சொல்வதில் அருணகிரிக்கு நிகர் அருணகிரியே! இந்தப் பாடலில் நான்கு வரிகள். முதல் வரி மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். மற்ற மூன்று வரிகளும் முருகனைப் புகழ்கின்றன. ஒரு பெரிய விஷயத்தை ஒரு அடியில் அடக்கிவிட்டு, முருகனைப் புகழ மூன்று அடிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். காரணம் முருகனைப் புகழ்வதிலுள்ள ஆர்வம். எவ்வளவு புகழ்ந்தாலும் போதவில்லை. அதே நேரத்தில் அநுபூதி அடைவதற்கான கருத்தையும் சொல்ல வேண்டும். அதற்குக் கை கொடுகிறது தமிழ். சுருங்கச் சொல்ல பொருள் மிகுந்த சொற்களும், விரித்துச் சொல்ல அழகான சொற்களுமாய் தமிழ் விளையாட்டு நடத்தியிருக்கிறார் அருணகிரி.

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரயென் றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூரா விபாடணனே


கருதா மறவா நெறி என்றால் என்ன? எதைக் கருதக் கூடாது? எதை மறக்கக் கூடாது? முதலில் எதை மறக்கக் கூடாது என்று பார்ப்போம். "நன்றி மறப்பது நன்றன்று!" இதுவும் வள்ளுவர் வாக்கு. செய்நன்றி மறந்தவர்க்கு உய்வில்லை. ஆகையால் நன்றி மறக்கக் கூடாது. சரி. எதைக் கருதக் கூடாது? "நன்றல்லது அன்றே மறப்பது நன்று". அதை நினைத்துக் கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஆகையால் அதைப் பெரிதாகக் கருதக் கூடாது. சரி. அதற்கும் கந்தர் அநுபூதிக்கும் என்ன தொடர்பு?

சூரபத்மன் சிறந்த தவசி. ஈசனே நேரில் வந்து வேண்டிய வரங்கள் தந்தார். அதிலிருந்து அவனது தவவலிமை புரியும். அப்படி ஈசனிடமே வரத்தைப் பெற்ற சூரன், வரம் தந்த வள்ளலின் அம்சமாக அவரது மகனே வந்து நின்ற பொழுது, நன்றியை மறந்து எதிர்த்தான். அப்படி எதிர்த்த சூரன் செய்தது நன்றல்லது. அந்த நன்றல்லதையும் அன்றே மறந்த முருகப் பெருமான், அவனைத் திருத்தி சேவலும் மயிலுமாக மாற்றி உலகோர் புகழும் வரம் கொடுத்தார். இப்பொழுது புரிகிறதா கருதா மறவா நெறி! இன்னொரு விதமாகவும் சொல்லலாம். யோகநிலை அல்லது தவநிலை என்பது நினைப்பையும் மறப்பையும் கடந்த நிலை. அந்த நிலையையும் இறைவனொடு நம்மை ஒன்று படுத்தும்.

அப்படிப்பட்ட அரிய நெறியும் வேண்டுமென்று முருகனின் தாள் பணிய வேண்டும். அதுதான் "கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா!" முருகனுடைய திருவடிகள் எப்படிப்பட்டவை? "அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே" என்கிறது கந்தரலங்காரம். நான்முகன் நமது தலையில் எழுதியதை அழித்துவிடும் தன்மை முருகனுடைய திருவடிகளுக்கு உண்டு. அப்படி நான்முகன் எழுதியதை அழித்து நல்ல வாழ்வு தரும் பாதங்கள் கந்தனுடையவை. அப்படிப்பட்ட திருவடிகளைத் தர இசைவாய் வரதா என்கிறார். கொடுப்பதையும் விரும்பிக் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் இசைவாய் வரம் தா என்கிறார்.

முருகா! மயில்வாகனே! மயில் என்பது என்ன? சூரபதுமன். அதே நேரத்தில் ஓங்கார வடிவம். மயில் மேல் ஏறி வருகின்றவன் முருகன். ஆக முருகனைத் தாங்குவது மயில். வேறு விதமாகச் சொன்னால், முருகனின் இருக்கையே ஓங்காரம். ஓங்காரத்தையே அடித்தளமாகக் கொண்டவர் முருகப் பெருமான். அதனால்தான் மயில் வாகவன். மயில் மேல் உட்கார்வதா, பறப்பதா என்று விதண்டாவாதமாக ஆராயாமல், உட்பொருளை உணர்ந்தால் தமிழின் மேன்மை புரியும். தமிழ் உருவகமாகவும் புழங்கக் கூடிய மொழி. ஓங்காரம் என்பதைச் சொல்லி விளங்க வைப்பதற்குள் மயிலைப் பற்றிச் சொல்லி விளங்க வைத்து விடலாம். நமது முன்னோர்களின் அறிவுடைமை அது.

சூர விபாடணன் என்று செய்யுள் முடிகிறது. இது வடமொழிக் கையாளல். தமிழில் சூரனை இரண்டு கூறுகளாகப் பிரித்தவன் என்று பொருள். இங்குதான் நன்றாகக் கவனிக்க வேண்டும். ஏன் இரண்டு கூறுகளாகப் பிரிக்க வேண்டும். மூன்றாக நான்காக அல்லது தூளாக அடித்து நொறுக்கியிருக்கலாமே. அதை விடுத்து இரண்டாகப் பிரித்தது ஏன்? மயில் உருவடிவம். சேவல் ஒலிவடிவம். இந்த உலகப் பொருட்கள் அனைத்தும் ஓங்கார வடிவானவை. சூரனும் அவ்வாறே! வெள்ளை ஒளியை ஏழாகப் பிரிப்பது போல ஓங்காரமான சூரனைப் பிரித்து ஒங்காரத்தின் ஒளி வடிவத்தையும் ஒலி வடிவத்தையும் காட்டியிருக்கிறார் முருகன். சுருங்கச் சொன்னால் ஒலியும் ஒளியும் காட்டியிருக்கிறார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 13, 2006

21. பாத்திரம் அறிந்து பிச்சையிடு

மிகவும் அரிதான பொருள் பொதிந்த பாடல். அதனால்தானோ என்னவோ "அரிது" என்றே துவக்கியிருக்கிறார் அருணகிரி.

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே



பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது தமிழ்ப் பழமொழி. காரணம் அந்தப் பிச்சையைத் தாங்கும் வன்மையும் தன்மையும் பாத்திரத்திற்கு இருக்க வேண்டும் என்பதுதான். தங்கக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட கழுதைப்பால் தானுங்கெட்டு கிண்ணத்தையும் கெடுக்கும் என்ற வழக்கு ஊர்ப்புறங்களில் இன்னும் உண்டு. ஒன்றை ஒருவருக்குக் கொடுக்கும் பொழுது அவர் அதற்குத் தகுதியானவர்தானா என்று அறிந்தே கொடுக்க வேண்டும். கொடுப்பது எதுவாயினும் இந்தக் கருத்து பொருந்தும்.

மீன் பிடிக்கத் தெரியாதவனுக்குத் தூண்டிலைக் கொடுத்து என்ன பயன்? கண்கள் இரண்டும் இழந்தவருக்கு ஓவியத்தால் என்ன நன்மை? விரைந்து செல்லும் ஊர்தியைக் காலிழந்தவருக்குக் கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான். தானும் உண்ணவில்லை. உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்கவில்லை. ஆனால் ஔவைக்குக் கொடுத்தான். காரணம் ஔவையார் அந்த நெல்லிக்கனிக்குப் பொருத்தமானவர். தமிழ் வாழ ஆசைப்பட்டான் அதியமான். ஆகையால் பொருத்தமில்லாதவராக இருந்தால் நம்மைப் போன்றவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்.

சாதாரணப் பொருட்களுக்கே இப்படியென்றால், மிகவும் அரிதான பெரிதான பொருட்களுக்கு எத்துணை சிந்திக்க வேண்டும். கொடுக்குமிடத்தில் முருகன் இருந்தால் என்ன செய்வார்? நம்முடைய மனங்களில் அழுக்கு நிறைய இருக்கிறது. இருந்தும் இறைவன் மீது அன்பு வைக்கும் நல்ல பண்பை நமக்குத் தந்திருக்கிறான். அதற்கு நம்மைப் பாத்திரமாக்கி பிறகு நமக்கு அந்த பிச்சையை இட்டிருக்கிறான். பொருத்தமில்லாதவன் என்று இறைவன் ஒதுக்கி விடுவதில்லை. நம்மை அந்தப் பரிசுக்குப் பொருத்தமானவராக்கி அழகு பார்ப்பான் ஆண்டவன். அப்படி கந்தன் அருணகிரிக்குச் செய்த கருணைதான் இந்தப் பாடல். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக!" மிகவும் அரிதான உண்மைப் பொருளுக்கு என்னை பொருத்தமுள்ளவனாக மாற்றி உபதேசம் செய்தவனே என்று பாடுகிறார்.

அல்லா முகமது நபிகளிடத்திலே காட்டிய கருணையும், பரமபிதா மோசசிடம் காட்டிய கருணையும், முருகன் அருணகிரிக்குக் காட்டிய கருணையும் எவ்வளவு பெரியவை. இறைவன் நபியண்ணல் வழியாகக் குரானைத் தந்தார். மோசஸ் வழியாகப் பத்து கட்டளைகளைத் தந்தார். அருணகிரி வழியாக தமிழ் அமுதம் தந்தார். ஆக இம்மூவரும் இறைவன் கருணைக்குப் பொருத்தமானவர்கள். ஆகையால்தான் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பொருள், அவர்களுக்கும் பயன்பட்டு, இன்றளவும் நமக்கும் பயன்படுகிறது. இப்பொழுது புரிந்திருக்கும் பாத்திரமறிந்து பிச்சையிடும் நுண்மை. பாடலின் முதலிரண்டுனடிகளை இப்பொழுது படியுங்கள். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக உபதேசம் உணர்த்தியவா!" பொருள் விளங்குகிறது அல்லவா! மதங்களையெல்லாம் கடந்த தமிழ்.

"சேவலங் கொடியன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால் உலகே" என்கிறார் பெருந்தேவனார். சேவற்கொடியன் திருக்கரங்களில் உலகம் பத்திரமாக காக்கப் படுகிறது என்பது இதன் பொருள். சங்ககாலத் தமிழ் வரிகள் இவை. அப்படி உலகத்தின் பாரத்தைச் சுமக்கும் கடவுளின் தோள்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும். இது உருவகம்தான். அதனால்தான் "விரிதாரண விக்கிரம வேள்" என்று முருகனைக் கூறுகிறார் அருணகிரி.

இமையோர் என்றால் இமைக்காதவர்கள். யார் அவர்கள்? தேவர்கள் இமைக்காதவர்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தேவர்கள் உச்சரிப்பது தாரக மந்திரம். தாரகம் என்றால் பிரணவம். அந்தப் பிரணவ மந்திரமும் முருகனுக்கு உரியது என்கிறார் அருணகிரி. தந்தைக்கே உபதேசித்தவன் அல்லவா. தேவர்கள் எப்பொழுதும் புகழும் தாரக மந்திரமே என்றும் சொல்கிறார். அதுதான் "இமையோர் புரி தாரக" என்பது.

தேவர்கள் கூறும் பிரணவப் பொருளே! விரிந்து பரந்த தோள்களில் உலகத்தைக் காப்பவரே! கிடைப்பதற்கு மிகவும் அரிதான உண்மைப் பொருளினை எனக்கு உபதேசிக்க, அந்தத் தகுதியை எனக்களித்து உபதேசமும் அருளிய முருகா, நீ போற்றி! இது அருணகிரி வாக்கு.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 06, 2006

20. மானம் கப்பலில் குடி போகாமல் இருக்க

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே

இந்தப் பாடலைப் பொருள் கொள்ளும் பொழுது கீழ்க்கண்ட முறையில் வரிகளை மாற்றி அமைத்துப் படித்தால் எளிதாகப் புரியும்.
அடி அந்தமில்லா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா

அடி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. அறிவு தொடக்கமும் முடிவும் அற்றது. ஞானத்தின் தொடக்கம் என்று எதைச் சொல்ல முடியும்? பிறக்கும் குழந்தை கூட பசிக்கு அழவும், பாலைக் குடிக்கவும் தேவைப்படும் அறிவோடுதான் பிறக்கிறது. அறிவுக்குக் கரை ஏது? அனைத்தும் அறிந்தவர் யார்? கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. இது கலைமகள் வாக்கு. கலைமகளுக்கே அப்படியென்றால் நமக்கெல்லாம்? ஆகையால் அடக்கம் வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும்.

ஆக ஞானம் ஆதியும் அந்தமும் இல்லாது. ஞானத்தின் வடிவான வேலும் முதலும் முடிவும் இல்லாதது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய அரசே! முருகா! அதுதான் "அடி அந்தமிலா அயில்வேல் அரசே!"

அடுத்த வரிக்கு வருவோம். இந்த வரி மிடியைப் பற்றிப் பேசுகிறது. மிடி என்றால் வறுமை. வறுமை என்பது வாழ்வில் வெறுமை. கொடிது கொடிது வறுமை கொடிது என்கிறார் ஔவை. அதனிமும் கொடிது இளமையில் வறுமை. குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் அனுபவிக்கும் பருவங்கள். அந்தச் சமயத்தில் வறுமையென்றால் அதுதான் கொடுமை. பழநி திருப்புகழ் சொல்கிறது. "செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே....எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும்!" வறுமை வருமையில் எல்லாப் பெருமையும் சிறுமையடையும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறார் வள்ளுவர். அதானால்தான் அருணகிரி வறுமையைப் பாவி என்கிறார். மிடி என்று ஒரு பாவி வெளிப்படின் என்னவாகும் என்று முருகனைக் கூப்பிட்டுச் சொல்கிறார்.

வறியவர் உண்பது குறைவு. குறைந்த ஊட்டம் உடலை இளைக்கச் செய்யும். கட்டிளம் காளையும் காய்ந்த கம்பந்தட்டையாவான். ஆக வடிவு குறையும். தனம் என்றால் செல்வம். நிலையில்லாததேயாயினும் செல்வம் பயனுள்ளது. அதுவும் போகும். விரும்பியதைச் செய்ய முடியாது. வேண்டியதை உண்ண முடியாது. நாடியதைக் கொள்ள முடியாது. அதனால் அடுத்த கட்டமாக வேண்டியது கிடைக்காமல் மனம் நோகும். நொந்த மனத்தால் குணம் கெடும். குணமில்லாத ஒருவனுடைய குடும்பம் நல்ல பெயரை எடுக்காது. ஆகையால் குடும்ப மானம் போகும். அது குலப் பெருமையைச் சாய்க்கும். பேரரசர் வழியில் வந்திருந்தாலும் பேரன் திருடினால் குலப்பெருமை நாசமாகாதா! அதைத்தான் "வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா" என்கிறார். சுருங்கச் சொன்னால் மானம் கப்பலில் குடிபோகும்.

முதலும் முடிவும் இல்லாத ஞான வடிவமான வேலினைத் தாங்கிய அரசே! வறுமை என்ற வெறுமை தாக்குமானால் பெருமை போகும். உடன் வடிவு, செல்வம், மனத்தூய்மை, குணம், குடும்ப மானம், குலப்பெருமை எல்லாம் போகும். இந்தத் துன்பத்திலிருந்து வேலவா நீ காக்க வா!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 29, 2006

19. அப்பன் சேர்த்தது வட்டியோடு மகனுக்கு

இந்தப் பாடல் சென்ற பாடலின் தொடர்ச்சி. முருகனைப் பாடி மகிழ வேண்டும் என்று கூறிய அருணகிரி முருகப் பெருமானின் சில பண்புகளை, அதாவது நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றவைகளை நமக்குக் கூறுகிறார்.

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகா வலசூர பயங் கரனே


ஒருவர் இன்னாருடைய மகன் என்று சொல்லும் பொழுதே பெருமையும் சிறுமையும் அதோடு வந்து விடுகிறது. உத்தமனுடைய பிள்ளைக்கு நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்த புண்ணியம் மகனுக்கோ மகளுக்கோ செல்லும் இடமெல்லாம் வாழ்வளிக்கும். தீயவனுடைய பிள்ளை நல்லவனாக இருந்தாலும் போகின்ற இடத்தில்லெல்லாம் பிரச்சனைகள் வந்து நிற்கும். பெற்றவர்கள் நல்ல பெயரைச் சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளுக்குச் சேர்க்கும் மிகப் பெரிய சொத்து அது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்று சொல்கிறார் ஔவையார்.

பாடி மகிழப்பட வேண்டிய முருகப் பெருமானின் தந்தையும் பெருமை மிக்கவர்தான். அந்த பரமசிவனின் பெருமைகள் யாவை? உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் அந்த ஈசன். உதியா - பிறப்பில்லாத. மரியா - இறப்பில்லாத. உணரா - நினைப்பில்லாத. மறவா - மறதியில்லாத. பிறப்பும் இறப்பும் இல்லா ஆதி நாயகன் சிவபெருமான். நினைப்பு இல்லாதவர். இது பெருமையா என்றால் ஆம் என்பதே விடை. விடையேறு நாயகன் மறவாதவன். ஆகையால் மறந்ததை நினைக்க வேண்டிய வகையில்லாதவன். தொலைத்தால்தானே தேட வேண்டும். மறந்தால்தானே நினைக்க வேண்டும்.

விதிமால் அறியாத விமலன் என்றால்? விதியை எழுதுகிறவன் நான்முகன். ஆகையால் அவன் விதி. மால் என்றால் திருமால். அயனும் (பிரம்மன்) அரியும் கூடித் தேடியும் அடி முடி காணக்கிடைக்காத பெருமான் எம்பெருமான். கந்த குரு கவசத்தில் "அடி முடி அறிய ஒண்ணா அண்ணாமலையோனோ" என்று புகழப்படுகிறது. முருகக் கடவுள் யார்? "பாதிமதி நதி போதும் மணிச்சடை நாதர் அருளிய குமரேசா" என்கிறது திருப்புகழ். பாதிமதி என்றால் பிறைச் சந்திரன். என்ன அழகான பெயர்! நதி கங்கை. இப்படி மதியும் நதியும் போதும் சடையரின் நெற்றிக் கண்ணிலே அறுவராகத் தோன்றி அம்மையால் ஒருவரானவன் கந்தன். அவனுக்கு தந்தை தாயின் புகழும் உண்டு. அதற்கு மேல் சேர்த்த சுயப்புகழும் உண்டு. ஆக இந்தப் பாடலின் முதலிரண்டு வரிகளில் சிவபெருமானைப் புகழ்ந்தாலும் அத்தனையும் முருகனுக்கும் உண்டு. அப்பன் வங்கியில் சேர்த்து வைத்த பணம் வட்டியோடு மகனைச் சேர்வதைப் போல.

அந்த விமலனின் புதல்வனை அதிகா அநகா அபயா என்று இறைஞ்சுகிறார் அருணகிரி. அதிகா என்றால் எல்லாருக்கும் தலைவர். தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் தலைவர் எம்பெருமான். அவருக்கும் தேவர் முருகன். தேவாதி தேவன் சிவன். தேவ தேவாதி தேவன் முருகன். ஆகையால் அப்பனுக்கே பாடஞ் சொல்ல முடிந்தது சுப்பனால். அஞ்செழுத்து அப்பனுக்கு. ஆறெழுத்து மகனுக்கு. பழமுதிர்ச்சோலை திருப்புகழ் சொல்கிறது இப்படி. "அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்!" அயன் என்றால் பிரமன். அரி என்றால் திருமால். அரன் என்றால் சிவன். இவர்கள் மூவரும் ஆகி, அவர்களுக்கும் மேலானவனே என்று திருப்புகழ் செப்புகிறது. அதனால்தான் கந்தரலங்காரத்தில் "பின்னை ஒருவரை யான் பின் செல்கேன்" என்கிறார்.

அநகா என்றால் குற்றமற்றவன் என்று பொருள். அபயா என்றால் அச்சமற்றவன் என்று பொருள். அதைத்தான் அடுக்கடுக்காக அதிகா அநகா அபயா என்று கூறுகிறார்.

அமராவதி காவலனே! சூர பயங்கரனே! போர்க்களத்திலே சூரனை அச்சப்படுத்திய முருகன் அவனை அழிக்கவில்லை. ஆகையால்தான் அவனுக்குச் சூர பயங்கரன் என்றும் ஒரு பெயர். அப்படி சூரனிடமிருந்து அமராவதியைக் காத்து இந்திரனிடம் ஒப்படைத்ததால் அமராவதி காவலனாகவும் ஆயினான் முருகன்.

முருகா! உன்னுடைய தந்தையின் சிறப்புப் பண்புகள் யாவும் பெற்று அவைகளுக்கு மேலேயும் பெற்று மும்மூர்த்திகளுக்கும் மேலாய் விளங்கும் வேலவனே! நீ தேவதேவாதி தேவன். குற்றமற்றவன். அச்சமற்றவன். சூரனுக்கு அச்சமூட்டியவன். அதனால் அமராவதியைக் காத்தவன். உன்னுடைய புகழை என்றும் மனதால் நினைத்து நாவால் பாடவேண்டும். அதற்கும் நீயே அருள வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 22, 2006

18. படித்தால் மட்டும் போதுமா

கடல் நிறைய நீர் இருக்கிறது. அந்த நீரை மேகங்களுக்குத் தருகிறது கடல். அப்படிக் கடலிலிருந்து பெற்ற நீரை மழையாகப் பொழிந்து விடுகிறது மேகம். பூமியிலிருந்து வானத்திற்குப் போன நீர் மீண்டும் பூமிக்கே வந்து விடுகிறது. அந்த நீரும் ஆறாகி மீண்டும் கடலிலேயே கலக்கிறது. பிறகு ஏன் கடல் நீரை மேகத்திற்குத் தரவேண்டும்? பிறகு அதையே பெறவேண்டும்? அப்படிக் கொடுத்துப் பெறும் வழியில் மண்ணுயிர்கள் எல்லாம் பயன்பெறுகிறது அல்லவா. அதனால்தான். கடலின் கருணை.

அதுபோலத்தான் அடியவர்களுக்குச் சிறந்த கல்வி ஞானம் வாய்க்கிறது. அவர்கள் இறைவன் மீதும் அவனது நற்பண்புகளைப் பற்றியும் பாடல்கள் புனைகிறார்கள். இப்படி அவர்களுக்கு அறிவும் கல்வியும் தருவது யார்? எல்லாம் முருகன் கொடுத்தது. அப்படிக் கொடுத்து, பிறகு அவர்களிடமிருந்தே திரும்பப் பெற்றுக் கொள்கிறான். "யாம் ஓதிய கல்வியும் என் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"

யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே


ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இரண்டு காரணங்கள் உண்டு. பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் கிள்ளை மொழியைக் கேட்பதில் பிரியம். ஆகையால் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுத்ததை திரும்பக் கேட்பதில் அவ்வளவு ஆனந்தம். "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்" என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களுக்கெல்லாம் தாயல்லவா முருகப் பெருமான்!

இரண்டாவது காரணம் பொதுநலம். ஆம். அப்படி அடியவர்கள் இறைவனைப் பற்றிப் பாடுகையில் மக்களுக்கு நல்ல கருத்துகள் பல கூறுவர். அது படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பயனளிக்கும். அதனால்தான் இந்தக் கொடுத்துப் பெறும் விளையாட்டு. எல்லோருக்கும் கொடுக்கப் படுவதில்லை. நல்லதைச் சொல்வார் என்று உள்ளவருக்கே கொடுக்கப் படுகிறது. மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்களது படைப்பு தீதானால் நாளடைவில் தடுக்கப் படுகிறது. எத்தனை பேர் எழுதினார்கள். இன்னும் எழுதுகிறார்கள். எல்லாம் நிலைக்கிறதா?

ஓதிய கல்வியும் அறிவும் என்கிறார். படித்தால் அறிவு வராது. உணர்ந்து ஓதினால்தான் அறிவு வரும். அப்படி நல்ல அறிவை முருகன் கொடுத்த பின்னும் மண்ணுலக மையல் நீங்காமல் இருந்தால் எப்படி? மையல் என்பது தையல்களுக்கு பையல்கள் மீதும் பையல்களுக்குத் தையல்கள் மீதும் வருவதில்லை. எதன் மீதும் வரலாம். ஒன்றின் மீது மையல் வந்து விட்டால் அது வளர்ந்து வெறியாகும். அது நன்றன்று. அப்படிப்பட்ட மையலை மறந்து அறவழியில் நடக்க வேண்டும். நன்றாகக் கவனியுங்கள் அருணகிரியின் வாக்கை. இல்லறவாசிகள் துறவறம் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. வீணான ஆசைகளை நீக்கி அறவழியில் நடக்கும்படிச் சொல்கிறார்.

அது போதுமா? நல்வழியில் நடப்பது நன்று. அத்தோடு செய்ய வேண்டியது இன்னொன்று. ஆம். வேலவரின் புகழினைப் பாடுதல். "சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை வெல்லுமிடத்து" என்கிறார் வள்ளுவர். நான் ஒன்றைச் சொன்னால் அதைத் தோற்கடிக்கும் விதத்தில் யாரும் எதையும் கூறாதிருக்கும்படி சொல்லவேண்டும். ஆகையால் வேலவரின் புகழினைப் பாடி மகிழ வேண்டும். ஆகவேதான் முருகனை அழைத்து "நாமேல் நடவீர் நடவீர்" என்று வேண்டுகிறார். முருகனைத் தவிர வேறெதைப் பற்றியும் பாடவில்லை அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 15, 2006

17. பேராசை என்னும் நோய்

பேராசையெனும் பிணியில் பிணிபட்
டோரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முது சூர் பட வேலெறியும்
சூரா சுர லோக துரந்தரனே


ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஆசையே துன்பத்திற்குக் காரணம். இயல்பாக வரும் இத்தகைய ஆசைகளிலிருந்து அறிவைப் பயன்படுத்தித் தப்பிக்கலாம். பேராசை மீளாத் துன்பத்திற்குக் காரணம். அறிவு வேலை செய்யாத பொழுதே பேராசை வருகிறது. ஆகையால் அறிவைக் கொண்டு தப்பிக்க முடியாது. அங்கே நாம் யாராலாவது காப்பாற்றப்பட வேண்டும்.

உலகம் முழுதும் எடுத்துச் சொன்னது. ஹிட்லர் கேட்கவில்லை. பேராசை அவன் கண்களை மறைத்தது, அறிவை மழுக்கியது. அவனைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. அவனும் அவனது கொள்கைகளும் அழிந்து போயின. ஆக பேராசையெனும் பிணியானது நல்ல விளைவுகளைத் தருவதைப் போலத் தோன்றினாலும் இறுதியில் தீமையையே தரும். பேராசையோடு பலமுறை பாரதத்தின் மீது படையெடுத்தான் கஜினி முகமது. பெருஞ் செல்வத்தைக் கைப்பற்றினான். அவனை இன்று வரலாறு திருடன் என்கிறது. இப்படியெல்லாம் கொடுமை செய்யும் பேராசை என்னும் நோயில் உழலத் தகுமோ!

அப்படிப்பட்ட பேரழிவிலிருந்து யார் நம்மைக் காக்க வல்லார்? மருத்துவரிடமே நோயைக் கூற வேண்டும். கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கும் விஞ்ஞானியும் அறிவிற் சிறந்தவர்தான். ஆனால் அவரிடம் நோயைப் பற்றிச் சொன்னால் என்ன பயன்? பேராசைப் பிணியைப் போக்க வல்ல வல்லாளன் யார்? சுரலோக துரந்தரனாம். சுரர் என்றால் அமரர். இந்திரனா? இல்லை. அமர உலகத்திற்கு அதிபதி இந்திரன். உண்மைதான். ஆனால் துரப்பது (காப்பது) யார்?

சூரன் என்றால் சூரத்தனம் மிகுந்தவன். அப்படிப் பட்டவனே அமரர் உலகத்தைக் காக்க முடியும். ஒருவனுக்கு அடைமொழி கொடுத்தால் அதற்குச் சிறப்புக் காரணம் இருக்க வேண்டும். அப்படி அமரர் உலகைக் காக்கும் சூரனுக்கு என்ன சூரத்தனம் இருக்கிறது? "முதுசூர் பட வேல் எறியும் சூரா" என்கிறார் அருணகிரி. சூரன் மேல் வேலெறிந்து வென்று அமரர்தம் உலகத்தைக் காப்பது கந்தவேளே. இங்கே முதுசூர் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். முது என்றால் பழைய என்று பொருள். வேலை முருகன் எறிந்ததும் சூரன் இறந்தகாலம். ஆகையால் முதுசூர். என்ன சொல்லாற்றல் அருணகிரிக்கு!

சூரனை வேலெறிந்து அழித்து அவனையும் அவன் புகழையும் இறந்தகாலத்திற்குத் தள்ளி அமரர்களுடைய உலகமாகிய அமராவதியைக் காக்கும் கந்தவேளே! பேரழிவைத் தந்து அழிக்கும் பேராசை என்னும் நோயில் விழாத வகைக்கு எல்லாரையும் காத்தருள வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 08, 2006

16. எட்டும் எட்டு

எட்டு என்றாலே எட்டி ஓடும் அளவிற்கு மூடத்தனமான எண்கணிதப் பைத்தியம் மக்களை ஆட்டிவைக்கிறது இன்று. ஆனால் அனைத்திற்கும் எட்டாப் பரம்பொருள் எட்டில் அடங்குமென்று ஆன்றோர் கூறுகிறார்கள். அதாவது நமக்கு எட்டும் எட்டு. நமக்கு புரியக்கூடிய எட்டு பண்புகளால் இறைவனைப் புகழ்கிறார்கள். அதென்ன! எடுத்துச் சொன்னால் மற்ற பண்புகளும் புரியாதா என்று வாதிடலாம். ஆனால் அதனால் பயனில்லை. பிரசவம் என்பது வேதனை மிக்க மறுபிறப்பு என்று ஆண்கள் அறியத்தான் முடியுமே தவிர உணர முடியாது. இப்படி மனித உணர்வுகளே உணர்ந்து கொள்ள முடியாத பொழுது, அனைத்தையும் கடந்தும் அவற்றின் உள்ளும் இருக்கும் கடவுளின் அத்தனை பண்புகளையும் நாம் உணர முடியுமா? சொல்ல முடியுமா? சொல்லில் முடியுமா? வள்ளுவரும் எண்குணத்தைப் பற்றிச் சொல்கிறார்.
"கோளிற் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
"

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகும் செயல்தந்து உணர்வென்றருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

சரி. அந்த எட்டு பண்புகளையும் பார்ப்போம். 1)தன்னடக்கம் 2)துப்புரவு 3)இயற்கை ஆர்வலன் 4)அனைத்துமறியும் ஆர்வம் 5)உணர்ச்சிவசப்படாமை 6)பேரருள் 7)பேராற்றல் 8)கட்டுப்பாடு. இந்த எட்டு பண்புகளும் மானிடர்களுக்கு எட்டும் பண்புகளாதலால் அவற்றால் இறைவனை விளக்குகிறார்கள் அறிஞர் பெருமக்கள். இந்தப் பாடலில் அருணகிரியும் அதைத்தான் சொல்கிறார். எண்குண பஞ்சரனே என்று முருகனைச் சொல்கிறார். பஞ்சரம் என்றால் கூடு. எட்டு குணங்களும் கூடியவனே என்று பொருள். இன்றைக்கும் தெற்கில் கோழி அடைக்கும் கூடையை பஞ்சாரம் என்று கொச்சையாகச் சொல்லும் வழக்கம் உண்டு. பட்டிக்காட்டிலும் பைந்தமிழ்ப் பழக்கம்.

அப்படி எட்டு பண்புகள் கூடிய முருகன் எப்படிப்பட்டவராம்! பொரு என்றால் போர். புங்கவர் என்றால் தேவர். பொருபுங்கவர் என்றால் போரிடும் தேவர். குருபுங்கவர் என்றால் குருதேவர். அசுரர்களோடு போரிடும் தேவர்களும் புவியிலுள்ள உயிரினங்களும் வணங்கும் குருதேவர் முருகன். அதைத்தான் "பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவர்" என்கிறார் அருணகிரிநாதர்.

அப்படி நமக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் குருதேவரான கந்தனுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். அத்தனை பெயர்கள் இருந்தாலும் அவையனைத்திலும் சிறந்தவை மூன்று பெயர்கள். அவைகள் முருகன், குமரன், குகன். அந்த மூன்று பெயர்களையும் அன்போடு உச்சரித்த உடனேயே உள்ளமுருகும். அப்படியெல்லாம் அந்தப் பெயர்களைச் சொல்லி உள்ளம் உருகும் உணர்வினை அருள்வாய் முருகா என்று உருகுகிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 01, 2006

15. கையில் வாய் இருக்கிறதா.....

அருணகிரியை ஓசைமுனி என்று சொல்லுவார் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளே முத்தமிழ் வித்தகர். அவர் சொன்னால் பொய்யாகுமா. அருணகிரியார் தமிழில் விளையாடியிருக்கிறார் என்றால் பொய்யாகாது. இந்தப் பாடலிலும் அப்படியே. அதை விளக்கத்தோடு பார்ப்போம்.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே

உய்வது என்றால் என்ன? ஒரு குழப்பமான அல்லது துன்பமான நிலையிலிருந்து பிழைக்கும் வழி தேடுவது. அப்படி வாழ்வில் உய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். கழல் பெற வேண்டும். திருவடியைச் சேர வேண்டுமாம். யாருடைய திருவடிகளை? முருகனுடைய திருவடிகளைச் சேராவிட்டால் உய்வில்லை. ஆகையால் கந்தன் காலடியை வணங்கச் சொல்கிறார்.

கந்தரலங்காரத்தில் இன்னமும் விளக்கமாகச் சொல்கிறார் அருணகிரி. குமரேசர் இருதாளும் தோன்றும் பொழுது நாளும் கோளும் வினையும் என்ன செய்ய முடியும் என்கிறார். அதாவது முருகனை நம்பியவர், காப்பாற்றப் பட வேறெதையும் நம்பவில்லை. வேறெதைப் பார்த்தும் அஞ்சவும் இல்லை. காரணம்? சரண் புகுந்த இடம் அப்படி. அப்பனுக்கே பாடம் சொன்னவன் அல்லவா!

எப்படிப்பட்ட முருகனாம்? கதிர்வேல் முருகன். ஒளி பொருந்திய அறிவுமயமான வேலைத் தாங்கிய முருகனாம். அதிலும் கைவாய் கதிர்வேல் என்கிறார். கைவாயா? அப்படியென்றால்? கையில் வாயிருக்கிறது. ஆம். அந்த வாய்தான் கதிர்வேல். கைபேசும் என்கிறார்கள் அல்லவா? அப்படிப் பேசும் முருகனுடைய கதிர்வேல். அடியார்களை நெறுக்கும் துன்பங்களை முருகனுடைய வேல் பேசிக் தீர்க்கும். அதனால்தான் கைவாய் கதிர்வேல். என்ன சொல்நயம். அடடா!

ஒருவர் உலக அனுபவங்களைப் பெறுவது அவரது ஐந்து புலன்கள். பார்ப்பது, கேட்பது, பேசுவது, உணர்வது, நுகர்வது என்ற ஐந்து செயல்களின் மூலமாகவே நமது உடம்பு நமக்கு செய்திகளைக் கொடுக்கிறது. இவற்றில் ஒரு புலன் குறைந்தாலும் பெரும் இழப்புதான். "கூன் குருடு செவிடு பேடு நீக்கிப் பிறத்தல் அரிது" என்கிறார் ஔவையார். அப்படிக் அரிதாகக் கிடைத்த ஐம்புலன்களையும் நெறியோடு பயன்படுத்த வேண்டும். நடக்கும் தீயவைகளைக் பார்க்கக்கூடாது என்று நினைக்கக்கூடாது. மாறாக நமது பார்வை தீய விளைவுகளை உண்டாக்கக் கூடாது. நாம் கேட்பதாலும் நுகர்வதாலும் உணர்வதாலும் சொல்வதாலும் எந்தத் தீயவைகளும் நேரக்கூடாது.

அப்படி ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்பது வள்ளுவர் வாக்கு. இந்த ஒரு பிறவியில் ஐம்புலன்களும் நெறிப்பட வாழ்ந்தால் அது ஏழு பிறப்புகளிலும் பயனளிக்குமாம். தீய ஆசையே துன்பத்திற்குக் காரணம். அந்த ஆசைகள் நம்மைச் சேர்வதும் ஐம்புலன்களின் வழியாகத்தான். அப்படி ஐம்புலன்களின் வழியாகவும் வந்து தீவினைகள் செய்யும் ஆசைகளை ஒழிப்பாய் என்கிறார் அருணகிரி. அதிலும் இரண்டு முறை ஒழிவாய் என்று சொல்லி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

இப்படி ஐம்புலன்களினாலும் நன்மையே சிந்தித்து கதிர்வேல் முருகனின் திருவடிகளைப் பணிந்து நாமனைவரும் கடைத்தேற வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, April 24, 2006

14. முருகன் காட்டும் ஒலியும் ஒளியும்

ஆசானுடைய அருளிருந்தாலன்றி சீடன் கற்க முடியாது. முருகனுடைய அருளின்றி முருகனைப் பற்றித் தெரியவும் புரியவும் முடியாது. புரிந்தும் புரியாதது போல இருக்கிறதல்லவா. இதை இன்னமும் எளிமையாகப் பார்ப்போம். மிகவும் சாதுவான விலங்கு பசு. ஆகையால் அது சிறந்த வீட்டு விலங்காக இருக்கிறது. பசுவின் பால் உடல் நலத்திற்கு மிகவும் நன்று. பசுவின் மடியிலிருந்து பாலைப் பெற வேண்டும். அதற்குப் பசுவின் அருள் வேண்டும். வேண்டாதவர் தீண்ட முடியுமா? பிறகு பற்களைத் தேடத்தான் வேண்டும். ஆக எந்த ஒன்றிலிருந்தும் ஒன்றைப் பெற அந்த ஒன்றின் அருள் வேண்டும்.

முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள் கொண்டறியார் அறியும் தரமோ
உருவன் றருவன் றுளதல் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின்றதுவே
(உருவன்று இருளன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே)


இந்த உலகத்தின் இயக்கத்திற்கு முருகனே (இறைவனே) விளக்கம். அப்படிப்பட்ட உலகிலே எதையும் அறிவதற்கு முருகனின் அருள் வேண்டும். முருகனை ஆசானாகக் கொண்டு அறிந்தாலொழிய எதுவும் அறிந்து கொள்ள முடியாது. முருகனைத் தனிவேல்முனி என்கிறார். வேல் தனியானது. ஆம். போர்க்களத்தில் வேல் நின்றால் யாரும் போரிட வர மாட்டார்கள். வேல் தனியாகத்தான் நிற்க வேண்டும். கதிர்வேலுக்கு எதிர்வேல் ஏது?

உருவமும் அருவமும் இல்லாதவர் முருகன். உருவம் இல்லையென்றால் அருவம்தானே. ஆனால் இங்கே உருவமும் அருவமும் இல்லாதவர் என்று கூறுகிறார். இருப்பது இல்லாதது என அனைத்தையும் கடந்த கடவுள் கந்தன். பகலிலே ஒளி. இரவிலே இருள். இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டவம் இறைவன். இதுதான் கடைசி இரண்டடிகளுக்கான விளக்கம். எவ்வளவு எளிமையான கருத்து. இதை இப்படியே பொருள் கொண்டாலும் சரிதான். வாரியார் சுவாமிகள் இந்தப் பொருளையும் உடைத்து உட்பொருள் கண்டு சொல்லியிருக்கிறார். தமிழ்க்கடலல்லவா அவர்! அவரது விளக்கத்தைப் பார்ப்போம்.

"நாத விந்து கலாதி நமோநம" என்கிறது திருப்புகழ். நாதம் என்பது சேவல். ஓங்காரத்தைக் கொக்கரித்து உரைக்கும். மயில் ஓங்காரத்தை வடிவில் காட்டும். மயிற்பீலி விந்தின் வடிவம். நாதமும் விந்துவும் கூடியது உலக இயக்கம். முன்பே சொன்னது போல உலக இயக்கம் என்பது முருகனின் விளக்கம். அதனால்தான் "நாத விந்து கலாதி நமோநம" என்கிறது பழநி திருப்புகழ்.

விந்துவின் வடிவமான மயிலின் தோகை உருவம். நாதத்தின் வடிவமான சேவலின் ஒலி அருவம். (உருவன்று அருவன்று). விந்து உள்ளது. நாதம் இல்லாதது. (உளதன்று இலதன்று). இருண்ட மேகத்தைக் கண்டு மகிழ்ந்து ஓங்கார வடிவில் ஆடும் மயில். இருள் தீர்ந்து பகலவன் ஒளி பெருக்கும் வேளையில் ஓங்கார நாதமாகக் கூவுகது சேவல். (இருளன்று ஒளியன்று). உருவுக்கும் அருவுக்கும், இருப்பதிற்கும் இல்லாததிற்கும், இருளுக்கும் ஒளிக்கும் இடையில் நின்று வேலால் காப்பவன் முருகன். அவனை ஆசானாகப் பெற்று கற்றாலொழிய வேறு உய்வில்லை.

இந்தக் கருத்தைத்தான் கந்தரலங்காரத்தில் சொல்கிறார். கோழிக்கொடியனுடைய அடி பணியாமல் குவலயத்தில் (உலகத்தில்) வாழக் கருதுகின்ற மதியற்றவர்களே, ஊழ் எனப்படும் விதியின் கொடுமையிலிருந்து தப்பிப்பது வேறு எப்படி!
கோழிக் கொடியனடி பணியாமற் குவலயத்தே
வாழக்கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலியுண்ணவொட்டாது!


பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, April 17, 2006

13. செம்மான் மகளைத் திருடிய பெம்மான்

கற்பு மணம் தெய்வயானை. களவு மணம் வள்ளி. பெற்றோர் பார்த்து, உற்றோர் சூழ, கற்றோர் புகழச் செய்து கொண்ட திருமணம் தெய்வயானையுடன். காட்டிற்குச் சென்று, வம்பு செய்து, கையைப் பிடித்து இழுத்து, கிண்டல் பேசி, மயக்கி, ஓடிச்சென்று பிறகு நம்பிராஜன் சம்மதத்துடன் செய்து கொண்ட திருமணம் வள்ளியுடன். அதனால்தான் திருடும் முருகன் என்கிறார். இரவோடிரவாக வீட்டிலுள்ளதை பிறரறியாமல் கொண்டு செல்வது திருட்டுதானே? ஆகையால் திருடும் திருடன் என்கிறார்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே


செம்மான் மகள் என்றால்......செழுமையான மானின் வயிற்றில் பிறந்த வள்ளி என்று பொருள். திருமால் தவம் செய்கையில் இலக்குமி மான் வடிவில் வந்து நிற்க, மாலின் கருணையால் மானின் வயிற்றில் பிறந்த குழந்தை வள்ளி என்று கந்த புராணம் கூறுகிறது. வள்ளிக் கிழங்கு தோண்டிய மெத்தென்ற குழியில் மான் ஈன்ற குழந்தையை நம்பிராஜன் வளர்த்தான். இதென்னடா! புள்ளிமானும் பக்திமானும் கூடிக் குழந்தை வந்ததா என்று அருவெறுப்புடன் கேட்கலாம். வீம்புக்குக் கேட்டாலும் இதற்கும் விடை சொல்லலாம். பொதுவாகவே எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறைவனின் பிறப்பு அல்லது அவதாரம் என்பது மானிடப் பிறப்பிலிருந்து மாறுபட்டதாகவே கூறப்பட்டுள்ளது. கன்னி மேரி கணவனுடன் கூடாமல் ஏசுநாதர் அவதரித்தார் என்று நம்புகிறது கிருத்துவ மதம். புத்த மதத்திலும் மற்ற மதங்களிலும் இந்த வகையான நிகழ்வுகள் உண்டு. ஆகவே இந்த விஷயங்களை பெரிது படுத்தி விளக்கம் கொள்வதை விட கருத்தை மட்டும் கொள்வது நன்று. "நாடோறும் மேதோறும் நவிமகள் சேர் வேடுவன்" என்று இராமச்சந்திரக் கவிராயர் கூறுகிறார். மான் நாள்தோறும் ஓரிடத்தில் இராமல் ஓடியோடிச் சென்று நுனிப்புல் மேய்ந்து ஆராச்சி செய்து கொண்டிருக்கும். அதுதான் "நாடோறு மேதோறும்". நவி என்றால் மான். நவிமகள் - மானின் மகள்.

சரி. இப்படியெல்லாம் உள்ள இயற்கைக்குப் புறம்பான விஷயங்களை நீக்கிவிட்டும் இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லலாம். பெம்மான் என்றால் பெரும் ஆள். அல்லவா. அதுபோல செம்மான் என்பதை செம்மையான ஆள் என்றும் கொள்ளலாம். வேட்டுவனாகப் பிறந்த நம்பி செம்மையான வாழ்வே வாழ்ந்தான். குலத்தால் வருவதல்ல குணம். ஆனால் குலத்தால் போற்றப்படலாம். நல்ல குணத்தை எல்லாக் குலமும் ஒரு குலமாக நின்று போற்ற வேண்டும். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

செம்மையான நம்பிராஜனுடைய மகளைத் திருடிக்கொண்டு போன முருகனுக்கு என்ன? பெம்மான் முருகன் பிறவான் இறவான். முருகனுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது. நெற்றிக் கண்ணில் தோன்றியது? "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்கிறார் கச்சியப்பர் கந்த புராணத்தில். தோன்றினான் என்றோ பிறந்தான் என்றோ கூறவில்லை. உதித்தனன் என்கிறார். இன்று உதிக்கும் சூரியன் நேற்றும் இருந்தது போல, என்றுமுள்ள முருகன் உதித்தான். பிறந்தால்தான் இறப்பு. இராமரும் கிருஷ்ணரும் பிறந்தார்கள். ஆகையால் முடிவில் இறந்தார்கள். சரயு ஆற்றில் தன்னுயிரை விடுத்து பாற்கடல் புகுந்தார் இராமாவதாரத்தில். வேடுவன் விட்ட அம்பு காலில் பாய மண்ணுலகு நீத்தார் கிருஷ்ணாவதாரத்தில். இது புராணங்களில் சொல்லும் வழக்கு. மீனாட்சியாக மதுரையை ஆண்ட உமையம்மை இறக்கவில்லை. மாறாக தாமாகவே கயிலை சென்றார். காரணம் அவரது பிறப்பு மானிடப் பிறப்பாக இருக்கவில்லை. வேள்வியில் தோன்றிய வேதநாயகியாக வந்தார் தமிழர்களுக்காக. ஒவ்வொரு புராணங்களும் ஒன்றையொன்று பார்த்து எழுதப்பட்டதல்ல. ஏதோ ஒரு பொது விதியின் பால் எழுந்ததாகவே உள்ளன. ஏசுநாதரும் சிலுவையில் இறந்து, பிறகு உயிர்த்தெழுந்தார். கிரேக்கக் கடவுளாகக் கருதப்படும் ஹெர்குலில் இறக்கவில்லை. மாறாக மண்ணுலகிலிருந்து தெய்வமாகவே ஒலிம்பஸ் மலைக்குச் சென்றான். காரணம் அவனது பிறப்பும் தெய்வாதீனமானது.

சரி. கருத்துக்கு வருவோம். பிறப்பு ஒழிய வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது? இறைவனை வேண்டுவது. ஏற்கனவே கடன் வைத்திருப்பவனிடம் நாம் கடன் கேட்டுச் செல்ல முடியாது. ஆக பிறவா இறவாப் பெம்மான் யாரோ அவரிடமே கேட்க முடியும். அந்தத் தன்மையை உடைய முருகப் பெருமானிடம் பிறவித் துயரை நீக்குமாறு வேண்டுகிறார் அருணகிரி.

இதுவரை இரண்டு வரிகளுக்குத்தான் விளக்கம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள். சின்ன அணுவிற்குள் ஒளிந்துள்ள பெரிய ஆற்றலைப் போலத்தான் இதுவும். சரி அடுத்த இரண்டடிகளைப் பார்க்கலாம்.

சும்மா இரு சொல்லற. இது முருகன் அருணகிரிக்கு உபதேசித்தது. தொழுநோயின் கொடுமை வாட்ட, துயர் தாங்காமல் தற்கொலை முடிவெடுத்தார் அருணகிரி. ஆற்றுக்கும் மலைக்கும் ஓடாமல், தாம்புக்கயிறைத் தேடாமல், கொடிய நஞ்சை நாடாமல், திருவண்ணாமலைக் கோபுரத்தை நாடினார். உச்சிக்கு ஏறினார். முருகாவென அழைத்து அங்கிருந்து கீழே குதித்தார். பசித்து குழந்தை அழுகின்ற போதே தாய்க்கு பால் சுரப்பது போல, ஓடி வந்தார் வேலவர். தாங்கி நின்றார் அருணகிரியை. அப்பொழுது செய்த உபதேசம்தான் "சும்மா இரு சொல்லற!" மிகவும் கடினமான உபதேசம். ஒன்றும் செய்யாமல் எப்படி இருப்பது. மனத்தின் கடிவாளம் எங்கெங்கோ போகிறதே. கையைக் காலைக் கூட ஓரிடத்தில் சும்மா வைத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் எப்படியாவது எதையாவது தூண்டுகின்றனவே! அப்புறம் எப்படி சும்மாயிருப்பது? முயற்சித்துப் பாருங்களேன். அருணகிரி முயன்றார். வெற்றியும் பெற்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் சும்மா இருந்தார். முருகனே சொன்ன பிறகு அதற்கு மறுபேச்சேது.

சரி. சும்மா இருந்ததின் விளைவுகள் என்ன? சும்மா இரு சொல்லற என்று சொன்னதுமே அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே என்கிறார். சிற்றின்ப வாழ்வில் நீந்தித் திளைத்தவர் அருணகிரி. பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு இன்பத்தை அனுபவித்தார். நாமும் அனுபவிக்கிறோம். அப்படி அனுபவிக்கும் பொழுது இன்பமாகத் தோன்றினாலும் முடிவு துன்பமாகவே இருக்கிறது. தொலைக்காட்டியைப் பார்க்கிறோம். பார்க்கையில் அந்த நிகழ்ச்சிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. ஆனால் நாளடைவில் கண்பார்வைக் கோளாறு வருகிறது. இது போலத்தான் ஒவ்வொன்றும். அப்படிப் பட்ட பொருட்களே நமக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. அருணகிரிக்கும் அப்படித்தான் இருந்தது முருகனிடம் உபதேசம் கேட்பதற்கு முன்பு. பாடம் கேட்ட பிறகு அம் மாபொருட்கள் ஒன்றுமற்றவைகளாகின. பார்ப்பதெல்லாம் பரமன் மகன். கேட்பதெல்லாம் கந்தன் புகழ். வாசித்ததெல்லாம் வள்ளிமணாளன் பற்றி. நினைத்ததெல்லாம் அந்த நித்தியானந்தனைப் பற்றி. நோக்குமிடமெல்லாம் நீக்கமற நின்ற இறைவன் என்று பாரதி சொன்னது போன்ற நிலையை அடைந்தார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, April 11, 2006

12. திருச்செங்கோட்டின் சிறப்பு

எளிதில் விளக்கம் சொல்லக் கூடிய பாடலிது.

கூகாவென என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே


சிகாமணி என்றால் என்ன? சிகை என்றால் முடி. அந்த முடியில் சூடக்கூடிய மணிதான் சிகாமணி. ஒருவர் எத்தனைதான் அணிமணி புனைந்தாலும் முடியில் சூடக்கூடிய மணிதான் உயர்ந்து தோன்றும். ஆகையால்தான் மணிமுடி என்பது சிறந்தது. மன்னர்களுக்கு பட்டம் கட்டுகையில் கையணி பூட்டுவதில்லை. காலணி பூட்டுவதில்லை. மாறாக மணிமுடி பூட்டுகிறார்கள். அந்த நிகழ்ச்சியையும் முடிசூட்டு விழா என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்தே மணிமுடியின் பெருமையை அறிந்து கொள்ளலாம். சுரலோகம் என்றால் தேவலோகம். அந்த தேவலோகங்களுக்கு எல்லாம் மணிமுடி புணைந்து கொண்டவரே முருகா! தேவசேனாபதியல்லவா!

தமிழ்க்கவிதைகளில் நான்கு விதமுண்டு. அவை ஆசு, மதுரம், சித்திரம் மற்றும் வித்தாரம். இந்த நான்கிலும் சிறப்புடையவரே சங்கப் புலவராகத் தகுதி பெற்றவர். இந்த நான்கு கவிதைகளிலும் ஒருவர் சிறந்து விளங்க வேண்டுமானால் முருகப் பெருமானின் தனிக்கருணை வேண்டும். தமிழ்த் தெய்வமல்லவா!
"சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ
" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகிறார். வேலையும் சேவலையும் போற்றிப் புகழ வேண்டும். அதுவும் தீந்தமிழில். அப்படிப் புகழ்ந்து பாட வேண்டுன்ற ஆவலைத் தருவீர் வேலவரே என்று வேண்டுகிறார். இறைவனைப் பாடுகின்ற ஆர்வம் கூட இறையருளால்தான் தோன்றும். அப்படியிருக்க தமிழறிவு வாய்ப்பது என்பது......இறைவனின் பரிபூரணக் கருணையைக் காட்டுகிறது. அதனால்தான் நாலுகவித் தியாகா என்று புகழ்கிறார்.

நாகாசல வேலவா! நாகாசலம் என்ற மலை மீதமர்ந்து வேலைப் பிடித்த பெருமானே! நாகசலம் என்பது திருச்செங்கோடு என்றும் திருப்பதியென்றும் இரண்டுவிதமாகக் கூறுவார்கள். கந்தபுராணத்தில் "பண்டு தான் தங்கியிருந்த வேங்கடமலை" என்ற வரிகளிலிருந்து திருவேங்கடமலையில் முருகன் இருந்ததாகக் கூறுவார்கள். திருப்பதியில் இருக்கும் ஏழுமலைகளில் நாகாச்சலமும் ஒன்று. திருப்பதி சைவப்பதியா வைணவப்பதியா என்ற சர்ச்சை பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்தது. பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய சர்ச்சைகள் நிகழ்ந்தன. ஆனால் அந்தச் சர்ச்சைகளும் அவற்றின் முடிவுகளும் சரித்திரச் சான்றுகளின் படியில்லாமல் வெறும் வாதத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாகக் கூறுவார்கள். எது எப்படியோ! எல்லாத் தெய்வமும் ஒன்றே! ஆகையால் மதநல்லிணக்கத்திற்காக இங்கே நாம் திருச்செங்கோடு என்றே எடுத்துக் கொள்ளலாம். திருச்செங்கோடும் சிறப்பில் குறைந்ததல்ல. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.
"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே
" என்ற சிலப்பதிகார வரிகளிலிருந்து திருச்செங்கோட்டின் சிறப்பு விளங்கும்.

கூகா எனக் கிளை கூடியழும். எப்பொழுது? உடலென்னும் கூட்டிலிருந்து உயிரென்னும் பறவை தப்பித்துப் பறந்த பிறகு, உற்றாரும் உறவினரும் கடன் கொடுத்தோரும் கேட்டோரும் கூடிக் கதறி அழும். அப்படிப்பட்ட வகையில் இறப்பு நேராமல் காக்க அருணகிரிக்கு மெய்ப்பொருள் பேசினான் முருகன். மெய்ப்பொருள் என்றால் என்ன? உண்மையான பொருள். பொய் அழிந்து போகும். ஆனால் உண்மை அழிவில்லாதது. அப்படிப்பட்ட அழிவில்லாத பொருளைப் பற்றி முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்திருக்கிறார். ஏற்கனவே "பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா" என்று கூறியிருக்கிறார். இங்கே போகா வகைக்கு அதே மெய்ப்பொருள் பயன்படுகிறது. அனைத்திற்கும் ஆகும் அந்த மெய்ப்பொருள். பரமசிவனுக்கும் அகத்தியருக்கும் அடுத்து முருகனிடம் உபதேசம் பெற்றது அருணகிரிதான். திருப்புகழில் சொல்கிறார்.
"சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரமிரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா!
"
இரு செவி மீதிலும் பகர் செய்யும் குருநாதன் என்று முருகனைப் புகழ்கிறார். இரண்டு காதுகளிலும் சொல்ல வேண்டிய காரணம் என்ன? முருகனுடைய உபதேசம் கேட்கத் திகட்டாதது. மருந்தானாலும் விருந்து போனது. ஒரு முறை கேட்டதும் போதவில்லை சிவனுக்கு. மற்றொரு காதையும் காட்டுகிறார். என்ன கொடுப்பினை!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, April 03, 2006

11. எருமையும் மயிலும்

அச்சம் போக்கும் பாடல் இது. உள்ளத்தில் அச்சம் தோன்றுகையில் உச்சரிக்க அச்சமும் போய் அச்சத்திற்கான காரணமும் போகும்.

கார்மாமிசை காலன் வரிற் கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே


தார் மார்பா! தார் என்றால் மாலை. ஆண்கள் அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். வட்டம் முழுமை பெற்றிருக்காது. தோளில் போடப்பட்டு இருபுறமும் தொங்கும். "கார்கடம்பத் தார் எம் கடவுள்" என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனைக் குறிப்பிடுகிறார். குளிர்ந்த கடம்ப மலர்களால் ஆன மாலையை அணிந்த கடவுள் என்று பொருள். தோளின் இருபுறமும் பூக்களால் கட்டித் தொங்கினால் பூந்தார். வாழை மரத்தில் காய்த்துப் பூவோடு தொங்கினால் வாழைத்தார். இன்னமும் தமிழில் பழஞ்சொற்கள் நிறைய பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அருமை பெருமை தெரியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். தார் அணிந்து காட்சி தரும் ஒரே பெண் தெய்வம் ஆண்டாள். கண்ணனுக்கான மாலையை அணிந்து கொண்டதால் ஆண்டாளுக்கும் தாரே சாற்றப்படுகிறது. ஆனால் நாளாவட்டத்தில் எல்லாம் மாலைகள் என்றே அழைக்கப்பட்டன.

வலன் என்ற அசுரனை அழித்தவன் இந்திரன். அதனால் அவன் வலாரி. தலத்தை அழிப்பவன் தலாரி. வலாரி தலாரி என்றால் வலாரியின் தலத்தை அழித்தவன். அதாவது இந்திரனுடைய அமராவதியைப் போரிட்டு அழித்தவன் சூரபதுமன். அந்தச் சூரன் முருகப் பெருமானுடன் போரிட்டான். ஆனால் முருகன் சூரனுடன் போரிட்டான் என்பது தவறு. சூரன் மீது முருகன் கருணை காட்டினார். ஆகையினால் அவனைத் தேடிச் சென்று ஆட்கொண்டார். இதையுணராத சூரன் ஆணவம் கொண்டு முருகனுடன் போரிட்டான். முடிவில் எல்லா போர்க்கருவிகளையும் இழந்து கடலடியில் ஒளிந்தான். கடலை வற்றச் செய்தார் வேலவர். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெரிய மாமரமாய் எழுந்தான் சூரன். வேலானது மரத்தைப் பிளந்தது. சேவலும் மயிலுமாய் சூரன் முருகனடி பணிந்தான். சூர்+மா மடியத் தொடு வேலவனே! புரிகிறதல்லவா! இதைத்தான் இளங்கோவும் "சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே" என்று சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார்.

இப்படியெல்லாம் அருணகிரி எதற்கு அழைக்கிறார் முருகனை? காரணம் நமக்கிருக்கும் அச்சம்தான். இந்த உலகத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு அச்சமிருக்கும். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான அச்சம் இறப்பு. அந்த இறப்பு என்ற பெயரில் உடலையும் உயிரையும் கூறிட்டுப் பிரிப்பவன் கூற்றுவன். அதாவது எமதர்மன். கூற்றுவனுக்கு காலன் என்று பெயரும் உண்டு. கால் என்றால் காற்று என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். காற்று விரைந்து வருவதைப் போல வேளை வரும்போது விரைந்து வருகிறவன் காலன். அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும். அப்படி காலன் வந்து உயிரைக் கொண்டு போக வருகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. உரமேறிய உடலாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி காலன் கொண்டு போவதைக் காட்டிலும் ஆண்டவன் திருவடியில் வீழ்வது நன்றல்லவா!
"அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
" என்கிறார் தேவராய சுவாமிகள்.
"காலன் எனையணுகாமல் உனதிரு
தாளில் வழிபட அருள்வாயே
" என்கிறது திருப்புகழ்.

கலாபம் என்றால் மயிற்றோகை. கலபத் தேர் என்பது உருவகம். மயிலாகிய தேரில் என்று பொருள் கொள்ள வேண்டும். காரெருமை மீதேறி காலன் வரும்பொழுது, கந்தவேளே, மயிலாகிய தேர் மீதேறி வந்து எதிர்கொள்க! மயிலேறி வருக என்று சொல்லியாயிற்று. அந்த மயில் எது? சூரனே மயிலானன் என்பதைத்தான் அடுத்த இரண்டு வரிகளில் "சூர்மா மடியத் தொடு வேலவனே" என்று இணைத்திருக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, March 27, 2006

10. மையல் வலையா தையல் வலை?

தமிழ் மொழி இல்லறத்தைச் சிறப்பித்து வழங்குகிறது. அதே நேரத்தில் "இல்லறமல்லது நல்லறமன்று" என்று சொல்லவும் தவறவில்லை. அதே நேரத்தில் அனைவரும் இல்லறத்தை ஏற்கும்படி வற்புறுத்தவும் இல்லை. "தவமும் அவமுடையார்க்கு ஆகும்" என்று வள்ளுவம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் பரத்தையர் ஒழுக்கத்தை எந்தத் தமிழ் நூலும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பரத்தையிடம் போன கோவலன் கேவலன் ஆனதைச் சிலப்பதிகாரம் சொல்கிறது. பொருந்தாக் காமம் இலக்கியங்களில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட கட்டிய மனைவி இருக்க பரத்தையரை நாடுவதைத் தமிழ் இலக்கியங்கள் ஏற்றுக் கொள்ளவதில்லை.. முருகப் பெருமானால் ஆட்கொளப் படும் முன்னால் அருணகிரி ஆசைகளின் கிரியாக இருந்தார். நாளும் ஒரு நாயகி என்று வாழ்ந்தார். பட்டுத் தெளிந்த பின் முன் செய்த குற்றங்களைப் பாடுகிறார். அவற்றிலிருந்தெல்லாம் காக்க முருகனை வேண்டுகிறார்.

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென்று ஒழிவேன்
தட்டூற வேல் சயிலத் தெரியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே


மட்டு என்றால் தேன். மட்டூர் குழல் என்றால் தேனூறும் கூந்தல். கூந்தலிலே தேன் ஊறுமா? மலரில் தேனூறும். "மட்டவிழ் மலர் கொடு பணிவேனே" என்று திருப்புகழ் பிள்ளையாரைப் பணிகின்றது. அத்தகைய தேனூறும் மலர்களை அணிந்த மங்கையர் யார்? எல்லா மங்கையருமா? தெற்கில் மலர்களைச் சூடிக் கொள்வது பெண்களிடையில் பரவலான வழக்கமாயிற்றே! இங்கே யாரைச் சொல்கிறார்? அதைச் சொல்லத்தான் "மையல் வலை" என்று கூறுகிறார். குடும்பப் பெண்கள் மையல் வலை விரிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் கடை விரிக்காமலே வேண்டியது கிடைக்கும். மையல் வலை விரிக்கும் கண்களோடு தேனூறும் மலர்களைச் சூடிய மங்கையர் யாரென்று இப்பொழுது தெரிகிறதா?

விலைமாதர்களைக் குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. விரும்பிக் கொள்ளப்படுவது கடையில் இருக்கிறது. ஆகையால் பரத்தையரை குற்றம் கூறவில்லை அருணகிரி. அந்த பரத்தையரின் மீது தனக்கு உண்டாகும் மயக்கத்தைத் தீர்க்கும் படி இறைவனடி பணிகிறார். பரத்தையர் இருப்பதால் போகிறோம் என்று சொல்லும் கருத்தில் அருணகிரிக்கு உடன்பாடு இல்லை. தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு. அதை மற்றவர் மேல் ஏற்றல் தகாது என்பது அப்பெருமகனார் கருத்து. இந்தக் கருத்து எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது.

ஊசல் ஓரிடத்தில் நிலையாக இராது. அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கும். பரத்தையர் மையல் வலையில் வீழ்ந்தாலும் அதே நிலைதான். ஊசலில் ஆற்றல் இருக்கும் வரை ஆடும். பிறகு நின்று விடும். அதுபோல செல்வம் இருக்கும் வரை பரத்தையர் வாசல் வரவேற்கும். பிறகு மூடிவிடும். பொய்யாமொழிப் புலவருக்கும் அந்த நிலை ஏற்பட்டது. பரத்தையர் ஆசையில் உண்டாகும் நிலையற்ற வாழ்க்கையெனும் மயக்கத்திலிருந்து காப்பாற்று கந்தா!

தட்டு என்றால் தடை அல்லது தடங்கல். தட்டுத் தடுமாறி என்ற பதத்தை நினைவிற் கொள்க. சூரனுடைய வீரமகேந்திரபுரியை நோக்கி வீரநடை போட்ட தேவர் படைகளைத் தடுக்கும் வகையில் தடையாக நின்றது கிரவுஞ்ச மலை. அது சூரனின் தம்பி தாரகாசுரனின் மாய மலை. தடங்கலாக நின்ற மலை (சைலம்) ஊடுருவ வேலை எறிந்தார் முருகப் பெருமான். கிரவுஞ்ச மலையும் தாரகாசுரனும் வீழ்ந்தனர். மாயை விலக வேலெறிந்தார் முருகன். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை போகும். அதுதான் உண்மை. கந்தபுராணம் கதையல்ல. வாழ்க்கைத் தத்துவம். ஆகையால் அதைப் படித்துப் புகழ தத்துவ அறிவு தேவைப்படுகிறது.

நிட்டூரம் என்றால் வடமொழியில் துயர் செய்கிறவர். ஆகுலம் என்றால் துன்பம். நிர் என்பது எதிர்ப்பதச் சொல். இல்லாதது என்ற பொருளைக் கொடுக்கும். நிராகுலம் என்றால் துன்பமில்லாதது. பயம் என்றால் அச்சம். அச்சமில்லாதது நிர்ப்பயம். நிட்டூர நிராகுல நிர்ப்பயமே என்றால் "துன்பம் தருகிறவைகளைப் பற்றியும் துன்பமில்லாதவைகளைப் பற்றியும் எந்த அச்சமும் இல்லை". முருகனை வழிபடுகிறவர்களுக்கு எந்த பயமும் தேவையில்லை. முருகனுடைய திருவடி எல்லா அச்சங்களையும் நீக்கும். அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். அஞ்சேல் என வேல் தோன்றும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, March 20, 2006

9. குமரி பெற்ற குமரன்

அமரும் பதிகேள் அகமாம் எனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே


குமரன் யார்? கிரி ராஜகுமாரியின் மகன். எந்த கிரி? மேரு கிரி. இமயமலையரசன் இமவான் பெற்ற மகள் பார்வதி. பர்வத ராஜகுமாரி பார்வதி என்றும் கூறுவார்கள். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகி அவள். "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னியென மறை பேசும்!" உலகமனைத்தையும் பெற்றவளைக் கன்னியென மறைகள் கொண்டாடுகின்றன. அப்படிப்பட்ட கன்னியின் மகன் குமரனே! என்ன வியப்பு! கன்னி பெற்ற மகனா? கிருத்துவ வேதாகமங்களும் அப்படித்தான் சொல்கின்றன. மரியன்னையின் மைந்தன் ஏசுவைத்தானே உலக கிருத்துவர் தொழுகின்றனர். ஆயினும் கன்னி மேரி என்ற வழக்கும் உண்டே. அதுபோலத்தான் அருணகிரி இங்கே "குமாரி பெற்ற குமரன்" என்று குறிப்பிடுகிறார்.

சமர் என்றால் போர். போர்க்களத்தில் தன்னோடு பொருதும் தானவர்களை நாசம் செய்கின்றவனே! தானவர்கள் என்றால் அரக்கர்கள். கஸ்யபரின் மனைவிகளில் ஒருவளான தானை என்பவள் பெற்ற பிள்ளைகள் தானவர்கள் என்றும் கூறுவார்கள். போரிடுவதற்கு இறைவனுக்கு எதிரிகள் உண்டா? இல்லை. இறைவனுக்கு எதிரிகள் இருக்க முடியுமா? முடியாது. ஆனால் இறைவன் அடியார்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். தேவர்களைச் சிறையிட்ட சூரனால் முருகனைச் சிறையிட முடியுமா? இல்லை அப்படி நினைத்துப் பார்க்க முடியுமா? இறைவன் போர்க்கோலம் பூண்டிருப்பது அடியார்களின் பகையைத் தீர்க்க. திருஞான சம்பந்தர் தங்கியிருந்த சத்திரத்திற்கு நெருப்பு வைத்தார்கள். இறைவன் கருணை மழை பொழிந்தான். திருநாவுக்கரசை சுண்ணாம்புக் காளவாயிலில் இட்டார்கள். நீறு நீர்த்துப் போனது. அவரையே கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அலை தாலாட்டியது.
பட்டினத்தடிகளுக்கு அப்பத்தில் நஞ்சு வைத்தார்கள். அது வைத்தவர் வீட்டைப் பற்றியது. ஆக அடியவர்களுக்குத் துன்பம் வருகையில் போரிட்டு அழிப்பவன் இறைவன். இது எந்த மதத்திற்கும் பொருந்தும்.

இதே வரிக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். நம்மோடு போருக்கு வரும் காமம், வஞ்சகம், தீய எண்ணங்கள், மதம், மாச்சர்யங்கள் ஆகியவைகளை எதிர்த்துப் போரிட்டு அழித்து நம்மைக் காக்கும் வேலன் என்றும் கொள்ளலாம். நமக்குள் எழும் தீய எண்ணங்களை அழிப்பது எப்படி? மருந்து சாப்பிட வேண்டும். எந்த மருந்து? அருள் தரும் தமிழ்க் கந்த மருந்து. உள்ளேயிருக்கும் அழுக்குகளைப் போக்க வெளியே இருக்கும் மருந்து உள்ளே போக வேண்டும் அல்லவா. அதுபோல உள்ளத்தில் இருக்கும் தீயவை போக இறைவனை அந்த உள்ளத்தில் குடியேற்ற வேண்டும். தீயவை அகலும். தூயவை பெருகும்.

இப்பொழுது பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பார்க்கலாம். சற்று முதிர்ந்த வரிகள். "அமரும் பதிகேள் அகமாம்" என்பதை "அமரும் பதி, கேள், அகம்" என்று பிரிக்க வேண்டும். பதி என்றால் வாழும் ஊர். திருவிளையாடற் புராணம் மதுரையை மதுரையம்பதி என்று சிறப்பிக்கிறது. சிலப்பதிகாரத்திலும் இந்த சொல் கையாளப்பட்டுள்ளது. "நீ யார்?" என்று வினவிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விடையளிக்கையில் சொல்கிறார் கண்ணகி, "பெரும் பெயர்ப் புகார் என் பதியே." அமர்தல் என்றால் உட்கார்தல் அல்லது உறைதல். அமரும் பதி என்றால்? உட்காரும் கணவன் அல்ல. உறையும் ஊர். கேள் என்றால் வினவுவது எனலாம். ஆனால் இங்கே உறவுமுறைகளைக் குறிக்கும். "யாதும் ஊரே யாவும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனார் வாக்கை நினைவில் கொள்க.

அகம் என்றால் வீடு. எனது ஊர், எனது உறவுகள், எனது வீடு என்று கிறங்கும் மயக்கம். அதைத்தான் பிமரம் என்கிறார். பிரமை என்ற சொல் மருவிச் சிதைந்து இங்கே பிமரமானது. மனப் பிரமை என்றால் மன மயக்கம். அத்தகைய மயக்கம் கெட பேசியவா என்கிறார் முருகனை. முருகன் என்ன பேசினார்? மெய்ப் பொருள் பேசினார். உலகப் பற்றுகளோடு வாழ்ந்த அருணகிரி நாதருக்கு உபதேசம் பேசினார் முருகன். அந்த உபதேசத்தால் உலகப் பற்று போய் இறைப் பற்று வந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, March 13, 2006

8. வருகையிலும் போகையிலும்

முருகனிடத்தில் நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் மூவர். வேத நாயகனான ஈசன். பிறகு அருந்தமிழ் முனி அகத்தியர். கலியுகத்தில் அருணகிரிநாதர். இந்த மூவரில் முதலிருவரும் முருகனிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக நமக்கு எதுவும் உபதேசிக்கவில்லை. ஆனால் அருணகிரி இந்தப் பாடலில் வழியாக நமக்கு உபதேசிக்கிறார். உள்ளம் சஞ்சலப்படும் பொழுதெல்லாம் நினைக்கப்பட வேண்டிய பாடலிது.

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே


மனமே முதலில் கெடுவது. எண்ணம் கெட்டபின் வண்ணம் கெடுகிறது. பிறகு தீய செயல்களைச் செய்யக் கூடாதென்ற திண்ணம் கெடுகிறது. வள்ளுவர் என்ன சொல்கிறார்?
ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

பெற்ற தாயே பட்டினி கிடந்தாலும், அறிவில் சிறந்தவர்களால் தடுக்கப்பட்ட விலக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டுவது மனம். அதுதான் முதலில் திருந்த வேண்டும். நோயுண்டவர்களுக்கு பல உபாதைகள் இருக்கும். ஒவ்வொரு உபாதைக்கும் மருந்து கொடுப்பது முழுமையான பலனளிக்காது. நோயின் மூலகாரணத்திற்கு மருந்தளிப்பதே சாலச் சிறந்தது. ஆகையால்தான் தானும் கெட்டு தன்னையும் கெடுக்கும் மனத்தை அழைத்து உபதேசிக்கிறார் அருணகிரி. முருகனிடம் உபதேசம் கேட்டபிறகு அருணகிரியின் மனத்தில் அழுக்கிருந்திருக்குமா? இருந்திருக்காது. அவர் நமக்காகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தாய் உணவு உண்பது போல. அருணகிரிக்குத் தாயுள்ளம்.

மனத்திற்குச் சொல்கிறார். கெடும் மனமே, கதி கேள். உய்வுற்று வாழ்வதற்கான கதியைச் சொல்கிறேன் கேள். முதலில் கரவாது இடுவாய். இதைதான் ஔவை "அறம் செய விரும்பு" என்கிறார். வறியர்கள் வந்து கேட்டால் ஆனதைச் செய் என்கிறார். உலகிற்கு வருகையிலும் வெறுங்கை. போகையிலும் வெறுங்கை. ஆகையால் உயிரோடு இருக்கையில் கொடுங்கையாக இராமல் கொடுக்கும் கையாக இருக்க வேண்டும். பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும். ஆகையால்தான் வள்ளுவரும் "வரியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" என்கிறார்.

அப்படி ஏழைகளுக்கு ஈகையில் தோன்றும் செருக்கை அழிக்க வேண்டும். எப்படி? கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய். கொடுக்கும் பொழுது கந்தனைத் தொழுது கொடுக்க வேண்டும். நாமா கொடுக்கிறோம்? எல்லாம் அவனருள். ஆகையால் நமது கையால் கொடுத்தாலும் முருகன் திருவடியால் கொடுத்ததாக நினைக்க வேண்டும். இங்கே வடிவேல் இறைதாள் நினைவால் என்கிறார். அந்த கந்தனுடைய திருவடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதற்கே காலமும் நேரமும் பத்தாது.

நெடுவேதனை தூள்படவே சுடுவாய். உலகில் உயிர்களுக்கான உண்மையாதென்றால் பிறப்பும் இறப்பும். இரண்டும் உயிர்களால் தீர்மானிக்கப் படுகிறவை அல்ல. இந்த இரண்டும் இறைவனின் தீர்மானங்கள். இப்படிப்பட்ட பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாமாக தீர்மானிப்பதாக நினைத்துக்கொண்டு எடுக்கும் சில பல முடிவுகளால் உண்டாகும் வேதனைகளைச் சுடுவேண்டும். சுட்டால்தான் திருநீறு. வேதனையைச் சுட்டால் நிம்மதி என்ற நீறு கிடைக்கும். விடுவாய் வினையாவையுமே. வினைகள் இரண்டு. நல்வினை மற்றும் தீவினை. நன்மை பயப்பது நல்வினை. தீமை பயப்பது தீவினை. நல்வினைகள் இறைவனின் கருணை. அதில் விட ஒன்றுமில்லை.

ஆனால் தீவினைகள்? இன்னா செய்யாமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். இன்னா செய்வதால் அடுத்தவர்க்கு மட்டுமே தீமை என்றில்லை. அது செய்கிறவர் மேலேயே திரும்பும். எப்படி தெரியுமா? "கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்" என்று பழமொழி நானூறு சொல்வதைப் போல. அடைத்து வைத்து அடித்தால், சொந்த நாயும் கூட ஒரு கட்டத்தில் கடித்துக் குதறிவிடுமாம். ஆக வினை விதைத்தவன் வினையறுப்பான். அந்த வினைகளை விட்டொழிக்க வேண்டும். அதன் தீவிரத்தை உணர்ந்தே "விடுவாய் விடுவாய்" என்று இரண்டு முறை கூறுகிறார் அருணகிரி.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, March 06, 2006

7. கல்லில் பதியுமா பாதம்

மிகவும் எளிமையான பாடல். ஆனால் மறைவான பொருள் கொண்டது. கல் போன்ற எனது மனதில் உனது தாமரைப் பாதங்கள் அரும்ப வேண்டுமே முருகா! பணி என்னவென்று வள்ளியின் பதம் பணியும் முருகனே! மோகம் குறையாத தயாபரனே!

திணியான மனோசிலை மீதுனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தனியா அதி மோக தயாபரனே


திணியான மனோசிலை என்றால் கடினமான கல் போன்ற மனம். சிலை என்பது கல்லைக் குறிக்கிறது இங்கே. மனோசிலை என்றால் மனமாகிய கல். எப்பேற்பட்ட சொல் நயம். அப்படிப்பட்ட கடினமான மனமாகிய கல்லின் மீது உனது தாமரைப் பாதங்கள் பதிவது என்று என்று கேட்கிறார் அருணகிரி. இந்த இடத்தில்தான் நன்றாகக் கவனிக்க வேண்டும். கல்லில் பூச்செடி முளைக்குமா? மண்ணில் முளைக்கும். சேற்றில் முளைக்கும். கல்லில் முளைக்குமா? கல்லில் செடி முளைத்தால் என்ன ஆகும்? கல் உடைந்து போகும். மனம் உடைந்து போகலாமா? அப்புறம் ஏன் அருணகிரி இப்படிக் கேட்கிறார்?

இளகிய கல்லில் செடி முளைக்கலாம்தானே! தங்கமும் வெள்ளியும் இருக்கிறது. அது அவ்வாறே இருந்தால் மணிகளைப் பொருத்துவது எங்ஙனம்? உலோகம் இளகினால் மணிகளையும் கற்களையும் பதிக்கலாம். அது போல தாமரை மலர் போன்ற சிவந்த பாதங்கள் பதிய வேண்டுமென்றால் மனம் இளக வேண்டும். இளகிய மனமே பாசத்தின் பாசறை. அந்தப் பாசறையே இறைவனின் கோயில். விளங்கியதா! தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று குறுந்தொகையும் கூறுகிறது. செந்திலாண்டர் செம்மையானவர். ஆகையால் அவரைச் சார்ந்ததெல்லாமே செம்மையானவை. பாரதம் பாடிய பெருந்தேவனார் குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதும் பொழுது குறிப்பிடுகிறார் "தாமரை புரையும் காமர் சேவடி" என்று.

இந்தப் பாடலில் மற்றொரு அழகும் உள்ளது. கல் மனம் இளக வேண்டும் என்று கேட்கவில்லை. நேராகவே பாதம் பதிய வேண்டும் என்று கேட்கிறார். கல் இளகவும் இறைவன் மனம் வைக்க வேண்டுமே! அதை எப்போது கேட்பது? அருணகிரி அறிவுகிரி அல்லவா! ஆகையால்தால் கந்தர் அநுபூதி தொடங்கும் பொழுதே நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்று பாடுகிறார். அங்கேயே கல்லாகிய நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. ஆகையால் இங்கே பதிந்தால் போதும். என்ன அற்புதமான வரிகள் இவை. நினைத்தாலே கண்ணீர் பெருகும் அருள் வரிகள்.

பாதம் பதிய வேண்டுமென்று யாரைக் கேட்கிறார் அருணகிரி? தயாபரனிடம். தயாபரன் என்றால் உதவும் உள்ளமுடையன் என்று பொருள். அதுவும் தணியா அதி மோக தயாபரனிடம் கேட்கிறார். தணியாத அதி மோகம். அடேங்கப்பா! எவ்வளவு உயர்வு நவிற்சி. மோகம் என்பது அளப்பறிய நாட்டம். அது எதன் மீதிலும் இருக்கலாம். மோகன், மோகினி என்றெல்லாம் பெயரிடுகிறார்களே குழந்தைகளுக்கு. அது காமம் மட்டும் என்ற பொருளைத் தருமானால் வைப்பார்களா? இந்த இடத்தில் அது கருணை அல்லது நாட்டம் என்று பொருள் படுகிறது.

பணியா என வள்ளி பதம் பணியும் தணியாத அதி மோக தயாபரனிடம் வேண்டுகிறார் அருணகிரி. வள்ளியம்மையிடம் பணி என்ன என்று தணியாத நாட்டத்தோடு முருகன் பணிந்தாரா? அனைவரும் பணியும் இறைவன் பணிவாரா? பணியா என்று வள்ளியம்மையானவள் பதம் பணியும் முருகனே என்று பொருள். கொல்லி மலை வாழும் முருகா என்றால் கொல்லி மலை முருகனோடு வாழ்கிறது என்றா பொருள்? முருகன் வாழும் கொல்லி மலை என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். தணியாத நாட்டத்தோடு உதவும் உள்ளத்தோடு இருக்கும் இறைவனை அனைவரும் பணிவார்கள். அவ்விதத்தில் வள்ளியம்மையும் பணியும் அந்தப் பதமானது இளகிய கல் மனதில் பதிய வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

பக்தியுடன்,
கோ.இராகவன்