Sunday, February 24, 2008

09. இஇ - பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில்

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.

திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே


பன்னிரண்டு - பன்னிருகை வேல் வாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேலினைப் பிடித்துக் கொண்டு
பதினொன்று - பதினொருவர் படை தாங்க - முருகப் பெருமானின் படைக் கலன்கள் மொத்தம் பன்னிரண்டு. ஆனால் பன்னிரண்டு கரங்களிலும் இப்பொழுது வேலைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மற்ற பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.

பத்து - பத்துத் திக்கும் - பத்துத் திசைகளிலும். அதென்ன பத்து? எட்டுத் திக்கு என்றுதானே கேட்டுள்ளோம். மிச்ச இரண்டும் எங்கிருந்து வந்தன? சுற்றியுள்ள எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேருங்கள். எட்டு பத்தாகும்.
ஒன்பது - நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் நவவீரர்களால் புகழப் படுகின்ற. வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார்களாம்.
எட்டு, ஏழு - மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற
ஆறு - பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்
ஐந்து - அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் ஒழித்து
நான்கு, மூன்று - புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்
இரண்டு - தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்
ஒன்று - தருமொருவன் - தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான்
குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே - திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதும் பொருட்டு எனக்குத் தமிழ் தந்தானே.

வெறுமனே முருகன் தமிழைத் தந்தான் என்று சொல்லாமல். எண்களைக் கொண்டு விளையாடியிருக்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழறிவை என்னவென்று வியப்பது!

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, August 14, 2007

08. இஇ - மடப்பாவையார் நம் வசமாக

"கண்டதே காட்சி; கொண்டதே கோலம்" என்று ஒரு வழக்கு உண்டு. அந்த வழக்கிற்கு முழுமுதற் காரணம் தமிழர்களிடம் இருந்த உலகாயதத் தத்துவம். இது சற்று விவகாரமானது என்று இன்று பலர் சொல்வார்கள். காரணம் இது இறைவனை வணங்குதலை மறுத்து எழுந்த தத்துவம். கிட்டத்தட்ட நாத்திகம் என்றே சொல்லலாம்.

வாழும் வரையில் இன்புற்று வாழ வேண்டும். யாருக்கும் தொந்திரவாகவும் இராமல் வாழ்க்கையை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு இன்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதே உலகாயதத் தத்துவம். இந்தத் தத்துவம் முன்பு வெளிப்படையாகவே பிரபலமாக இருந்திருக்கிறது. இது சரியா தவறா என்று தர்க்கிப்பதை விட இதனைத் தெரிந்து கொள்ளும் முகமாக ஆதிநாதன் வளமடல் என்ற நூலைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நூலை எழுதியவர் செயங்கொண்டார். இவரேதான் கலிங்கத்துப் பரணி பாடியவர். முதற் குலோத்துங்கச் சோழனது அவைப்புலவர். இந்த நூலை ஆதிநாதன் விழுப்பரையன் என்பவர் மேல் எழுதியிருக்கிறார். இந்த ஆதிநாதன் என்பவர் சோழனது தளபதியாக இருந்திருக்கிறார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள காராணை என்ற ஊர்க்காரர் இவர். இவரது குடி விழுப்பரையர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயரின் வழியாக அமைந்ததே இன்றைய விழுப்புரம்.

ஆதிநாதன் வளமடல் என்று அழைக்கப்படும் இந்த நூல் காராணை விழுப்பரையன் மடல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிநாதன் என்ற பெயரைப் பாருங்கள். நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக இருக்கிறது. இதனால் கடவுள் வாழ்த்து நீங்கலாக அனைத்துப் பாடல்வரிகளையும் நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக வைத்து எழுதியிருக்கிறார் செயங்கொண்டார். எடுத்துக்காட்டிற்கு கீழே உள்ள மூன்று அடிகளையும் பாருங்கள்.
பாதி உடம்பொருத்திக்கு ஈந்தும் படர்சடையின்
மீதும் ஒருத்திக்கு இடம் கொடுத்து அரனார்
காதல் உழந்திலரோ?
இப்படித்தான் நூல் முழுவதும் அமைந்திருக்கிறது.



கொன்றை முடித்தார்க்கும் கோபாலர் ஆனார்க்கும்
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம் - இன்று
மடப்பாவை யார் நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு


சரி. நாம் கடவுள் வாழ்த்துக்கு வருவோம். கடவுளை மறுக்க வேண்டும். ஆனால் காதலைப் பெரிதாக்கிச் சொல்ல வேண்டும். அதைத்தான் மேலே குறிப்பிட்ட செய்யுளில் நான் காண்கிறோம்.

கொன்றை முடித்தார்க்கும் - கொன்றை மலரைச் சூடிய சிவனுக்கும்
கோபாலன் ஆனார்க்கும் - கோபாலன் என்ற பெயரில் வந்து பிறந்த திருமாலுக்கும்
அன்று படைத்தார்க்கும் - மண்ணுலகத்தை அன்று படைத்த நான்முகனுக்கும்
ஆளல்லேம் - அடியவர்கள் அல்லர் நாங்கள்
இன்று மடப்பாவை யார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு - காதல் நோயைத் தீர்க்கும் பாவையரிடம் நமக்காக தூது செல்வார் யாரோ, அவரே தெய்வம்.

மூன்று மூர்த்திகளையும் தெய்வமல்ல என்று மறுத்து காதல் தூதுவர்களையே தெய்வம் என்கிறார் செயங்கொண்டார். தமயந்திக்கு அன்னம் தூதானது. சகுந்தலைக்கு மேகம் தூதானது. தென்றல் தூதான கதைகளும் உண்டு. ஓடும் நீர் தூதானதும் உண்டே. அகநானூறு படித்தால் இயற்கை பலவிதங்களில் தூதானது விளங்கும். அந்தத் தூதும் காதலுக்குத் தோதாக வேண்டும். அதுதான் உலகாயதத் தத்துவம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, July 11, 2007

07. இஇ - புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் மகாகவி பாரதியார். அவரைப் பற்றிய அறிமுகம் எந்தத் தமிழனுக்கும் தேவையில்லை. தமிழ் தழைக்கப் பிறந்த தவப்பயன். நல்லவர். வல்லவர். நடுநிலையானவர்.

ஒருவர் நடுநிலையானவரா என்று எங்ஙனம் அறிவது? அவரது கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். எண்ணத்தில் மட்டுமில்லாது எழுத்திலும் செயலிலும் இருக்க வேண்டும். பாரதி இருந்தார். இதோ புதிய ஆத்திச்சூடியின் கடவுள் வாழ்த்தைப் படித்தீர்கள் அல்லவா. இதுதான் உண்மையான மதநல்லிணக்கம்.

புதிய ஆத்திச்சூடியை எப்பொழுது எழுதினார்? இந்திய நாடு ஒரு விடுதலைப் போராட்டத்தில் இருந்த காலகட்டம். அப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் நெஞ்சில் நிறைந்து வீரம் சிறந்து போராடும் வகைக்குக் கருத்துச் சொல்ல வேண்டும். மதம், மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடச் செய்ய வேண்டும். அப்படிப் பட்டக் கருத்துகளைச் சொல்லும் ஒரு நூலை எந்த இறைவனைப் புகழ்ந்து துவக்குவது!

பாரதி சுடர்மிகும் அறிவுடையோன். அதை அவனே அறிந்தவன். ஆகையால்தான் இத்தனை சிறப்பான கடவுள் வாழ்த்தைப் பாட முடிந்திருக்கிறது.

ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்
கருநிறங் கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவாம்


முதலில் விரிசடைக் கடவுளில் துவக்குகிறார். "சிவபெருமான் என்றும் கரியமால் என்றும் முகமது நபியவர்களுக்கு மறை தந்தவன் என்றும் ஏசுவைத் தந்தவன் என்றும் பலவிதங்களில் கொண்டாடுகின்ற பரம்பொருளின் இயல்பு என்ன தெரியுமா? அது நல்லறிவாகும். அந்த நல்லறிவின் வழி சென்றார்க்கு அல்லல்கள் தீரும்."

என்ன அருமையான கடவுள் வாழ்த்து. மதநல்லிணக்கமில்லாதவரால் இப்படிப் பாட முடியுமா! ஆகையால்தான் பாரதியை வரகவி என்று நாம் கொண்டாடுகின்றோம்.

ஆத்திச்சூடி அணிந்து இளம்பிறை சூடி மோனத்து இருக்கும் முழுவெண் மேனியன் - ஆத்தி மலரைச் சூடியவர் என்று கொண்டாடப் படுகிறவர் சிவபெருமான். தமிழகத்திற்கே உரிய சைவ சித்தாந்தம் சொல்கிறது. இளம்பிறையைச் சூடிக்கொண்டு மோனத்திருக்கும் முழுவெண் மேனியன். இறைவன் அனைத்தையும் இயக்கியும் ஒன்றும் இயங்காமலும் இருப்பார். அதுதான் மோனத்திருப்பது. முழுவேகத்தில் சுழல்கின்ற மின்விசிறியைப் பார்த்தால் சுழலாமல் இருப்பது போல இருக்கும். அப்படித்தான் இருக்கும் சிவபெருமானின் மோனத் திருக்கோலம்.

கருநிறங் கொண்டு பாற்கடல்மிசை கிடப்போன் - "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" என்பார் இளங்கோவடிகள். மாலின் நிறம் கரியது. அவன் அருளோ அனைவருக்கும் உரியது. அவன் அன்போ அனைத்திலும் பெரியது. அந்த மாலும் கடலில் கிடக்கிறார். அந்தக் கடலும் பாற்கடல். ஓயாத தூக்கம். நெடுஞ்சாண்கிடையாகப் படுத்து ஆழ்ந்த தூக்கம். இதுவும் சிவபெருமானின் மோனத்தைப் போலத்தான்.

முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் - இஸ்லாமியக் கோட்பாட்டில் குரானைச் சொல்லியவர் முகமது நபி. ஆனால் குரானைப் படைத்தவர் இறைவன். ஆம். இறைவனுடைய திருத்தூதனாக இஸ்லாமியர்கள் நபிகளைக் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் நபிகளைப் புனிதராகக் கருதினாலும் கூட, அல்லாவைத்தான் வணங்குவார்கள். இஸ்லாமிய நம்பிக்கையில் இறைவன் உருவமும் பெயரும் அற்றவன். அல்லா என்பது கூட இறைவனின் பெயர் அன்று. இறை என்பதற்கு இணையான அராபியச் சொல்.

ஏசுவின் தந்தை - மரியாளுக்குப் பிறந்தவராயினும் ஏசுபிரான் தேவ மைந்தன் என்றே புகழப்படுகிறார். திருக்குரானும் ஏசுவை ஈசா என்ற பெயரில் குறிப்பிடுகிறது.

இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இறைவழிபாடுகளைக் கொண்டுள்ளனர். இவற்றில் உயர்ந்தது தாழ்ந்தது என்று வேற்றுமை பாராட்டுவது மடமை. அப்படி வேற்றுமை பாராட்டமல் இருக்க என்ன வேண்டும்? நல்லறிவு வேண்டும். நல்லறிவு படைத்தவன் எவன் ஒருவனோ, அவனே எந்த மதத்தையும் இழிவாக எண்ணக்கூட மாட்டான். ஆகையால்தான் பலவிதங்களில் வழங்கினாலும் "பரம்பொருள் ஒன்றே" என்னும் பாரதியார் அந்தப் பரம்பொருளின் இயல்பை "ஒளியுறும் அறிவு" என்கிறார்.

ஒளியுறும் அறிவு என்றால் சுடர் மிகு அறிவு என்று பொருள். அந்த நல்லறிவு கொண்டவர் தமது வாழ்வில் அல்லல் படார். மற்றவர்களுக்கும் அல்லலாக இரார். அந்தச் சுடர் மிகும் நல்லறிவைப் பெற்று நல்வாழ்வு எய்துவோம் என்று புதிய ஆத்திச்சூடியைத் துவக்குகிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அன்புடன்,
கோ.இராகவன்