Wednesday, July 11, 2007

07. இஇ - புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் மகாகவி பாரதியார். அவரைப் பற்றிய அறிமுகம் எந்தத் தமிழனுக்கும் தேவையில்லை. தமிழ் தழைக்கப் பிறந்த தவப்பயன். நல்லவர். வல்லவர். நடுநிலையானவர்.

ஒருவர் நடுநிலையானவரா என்று எங்ஙனம் அறிவது? அவரது கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். எண்ணத்தில் மட்டுமில்லாது எழுத்திலும் செயலிலும் இருக்க வேண்டும். பாரதி இருந்தார். இதோ புதிய ஆத்திச்சூடியின் கடவுள் வாழ்த்தைப் படித்தீர்கள் அல்லவா. இதுதான் உண்மையான மதநல்லிணக்கம்.

புதிய ஆத்திச்சூடியை எப்பொழுது எழுதினார்? இந்திய நாடு ஒரு விடுதலைப் போராட்டத்தில் இருந்த காலகட்டம். அப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் நெஞ்சில் நிறைந்து வீரம் சிறந்து போராடும் வகைக்குக் கருத்துச் சொல்ல வேண்டும். மதம், மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடச் செய்ய வேண்டும். அப்படிப் பட்டக் கருத்துகளைச் சொல்லும் ஒரு நூலை எந்த இறைவனைப் புகழ்ந்து துவக்குவது!

பாரதி சுடர்மிகும் அறிவுடையோன். அதை அவனே அறிந்தவன். ஆகையால்தான் இத்தனை சிறப்பான கடவுள் வாழ்த்தைப் பாட முடிந்திருக்கிறது.

ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்
கருநிறங் கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவாம்


முதலில் விரிசடைக் கடவுளில் துவக்குகிறார். "சிவபெருமான் என்றும் கரியமால் என்றும் முகமது நபியவர்களுக்கு மறை தந்தவன் என்றும் ஏசுவைத் தந்தவன் என்றும் பலவிதங்களில் கொண்டாடுகின்ற பரம்பொருளின் இயல்பு என்ன தெரியுமா? அது நல்லறிவாகும். அந்த நல்லறிவின் வழி சென்றார்க்கு அல்லல்கள் தீரும்."

என்ன அருமையான கடவுள் வாழ்த்து. மதநல்லிணக்கமில்லாதவரால் இப்படிப் பாட முடியுமா! ஆகையால்தான் பாரதியை வரகவி என்று நாம் கொண்டாடுகின்றோம்.

ஆத்திச்சூடி அணிந்து இளம்பிறை சூடி மோனத்து இருக்கும் முழுவெண் மேனியன் - ஆத்தி மலரைச் சூடியவர் என்று கொண்டாடப் படுகிறவர் சிவபெருமான். தமிழகத்திற்கே உரிய சைவ சித்தாந்தம் சொல்கிறது. இளம்பிறையைச் சூடிக்கொண்டு மோனத்திருக்கும் முழுவெண் மேனியன். இறைவன் அனைத்தையும் இயக்கியும் ஒன்றும் இயங்காமலும் இருப்பார். அதுதான் மோனத்திருப்பது. முழுவேகத்தில் சுழல்கின்ற மின்விசிறியைப் பார்த்தால் சுழலாமல் இருப்பது போல இருக்கும். அப்படித்தான் இருக்கும் சிவபெருமானின் மோனத் திருக்கோலம்.

கருநிறங் கொண்டு பாற்கடல்மிசை கிடப்போன் - "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" என்பார் இளங்கோவடிகள். மாலின் நிறம் கரியது. அவன் அருளோ அனைவருக்கும் உரியது. அவன் அன்போ அனைத்திலும் பெரியது. அந்த மாலும் கடலில் கிடக்கிறார். அந்தக் கடலும் பாற்கடல். ஓயாத தூக்கம். நெடுஞ்சாண்கிடையாகப் படுத்து ஆழ்ந்த தூக்கம். இதுவும் சிவபெருமானின் மோனத்தைப் போலத்தான்.

முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் - இஸ்லாமியக் கோட்பாட்டில் குரானைச் சொல்லியவர் முகமது நபி. ஆனால் குரானைப் படைத்தவர் இறைவன். ஆம். இறைவனுடைய திருத்தூதனாக இஸ்லாமியர்கள் நபிகளைக் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் நபிகளைப் புனிதராகக் கருதினாலும் கூட, அல்லாவைத்தான் வணங்குவார்கள். இஸ்லாமிய நம்பிக்கையில் இறைவன் உருவமும் பெயரும் அற்றவன். அல்லா என்பது கூட இறைவனின் பெயர் அன்று. இறை என்பதற்கு இணையான அராபியச் சொல்.

ஏசுவின் தந்தை - மரியாளுக்குப் பிறந்தவராயினும் ஏசுபிரான் தேவ மைந்தன் என்றே புகழப்படுகிறார். திருக்குரானும் ஏசுவை ஈசா என்ற பெயரில் குறிப்பிடுகிறது.

இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இறைவழிபாடுகளைக் கொண்டுள்ளனர். இவற்றில் உயர்ந்தது தாழ்ந்தது என்று வேற்றுமை பாராட்டுவது மடமை. அப்படி வேற்றுமை பாராட்டமல் இருக்க என்ன வேண்டும்? நல்லறிவு வேண்டும். நல்லறிவு படைத்தவன் எவன் ஒருவனோ, அவனே எந்த மதத்தையும் இழிவாக எண்ணக்கூட மாட்டான். ஆகையால்தான் பலவிதங்களில் வழங்கினாலும் "பரம்பொருள் ஒன்றே" என்னும் பாரதியார் அந்தப் பரம்பொருளின் இயல்பை "ஒளியுறும் அறிவு" என்கிறார்.

ஒளியுறும் அறிவு என்றால் சுடர் மிகு அறிவு என்று பொருள். அந்த நல்லறிவு கொண்டவர் தமது வாழ்வில் அல்லல் படார். மற்றவர்களுக்கும் அல்லலாக இரார். அந்தச் சுடர் மிகும் நல்லறிவைப் பெற்று நல்வாழ்வு எய்துவோம் என்று புதிய ஆத்திச்சூடியைத் துவக்குகிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

நான் அடிக்கடி மனத்தில் முணுமுணுக்கும் குளியல் அறையில் பாடும் பாடல் இது இராகவன். அறிவொன்றே தெய்வம் என்று இன்னொரு இடத்தில் சொல்லியிருப்பார். சுத்த அறிவே சிவம் என்று மற்றொரு இடத்தில் சொல்லியிருப்பார். மத நல்லிணக்கத்திற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு நல்ல பாடல்.

said...

தெரிந்ததுதான் என்றாலும், இன்றைய சூழ்நிலையில் உண்மையை திருப்பித் திருப்பிச் சொல்வது அவசியமாகிறது.
புரட்டுகள் அதிகமாகி மெய்கள் மறைந்து போகாமல் வெளிச்சம் தருவதற்கு நன்றிகள்!

said...

வாங்க குமரன், வாங்க ஜீவா. உங்கள் கருத்துக்கு நன்றி.

said...

அருமை...
நன்றி தலைவா...