Thursday, January 05, 2006

பாவை - இருபத்தொன்று

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


கறக்கக் கறக்க ஏமாற்றாது பால் தந்து பெரிய கலங்களும் நிறைந்து வழிந்து தத்தளிக்கும் வகையில் சுரந்து கருணை காட்டுகின்ற வள்ளல் தன்மை மிகுந்த பெரும் பசுக்களின் மந்தையினை எக்கச்சக்கமாக கொண்ட நந்தகோபனுடைய கோபாலா! கொஞ்சம் சிந்திந்துப் பார்த்து தெளிவுறுவாய்!

அளப்பரிய ஆற்றலும் சக்தியும் உடையவனே! அனைத்திற்கும் பெரியவனே! உலகினில் பேரொளியாகக் கண்ணில் தோன்றும் பெருஞ் சுடரே துயில் எழுவாய்!

(இறைவனைக் கண்களால் காண முடியுமா என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கின்றது. நம்பினால்தான் இறைவனே என்றாகும் பொழுது காண முடியும் என்று நம்பினால்தானே காணமுடியும். இப்பொழுது மருந்தையே நம்பியுண்டால்தான் முழுப்பலன் கிடைக்கும் என்று மருத்துவர் சொல்லக் கேட்கின்றோம்.

வாடிய பயிரினைக் கண்ட பொழுதெல்லாம் வாடினார் வள்ளலார். அது கருணை. அந்தக் கருணை கண்களில் இருந்ததால்தான் வாடிய பயிர்கள் மீதும் பாசம் வந்தது. அதுபோல கண்களில் அன்பிருந்தால்தான் ஏழையின் சிரிப்பில் கூட இறைவனைக் காண முடியும். இந்த இடத்தில் ஏழை என்பது பணத்தால் மட்டும் என்று குறிப்பதல்ல. மனத்தாலும் வேறுபல வகைகளாலும் ஏழையானாலும், நீண்ட நாள் தேடியது கிடைத்து மகிழ்ந்து சிரிக்கையில் தெரிக்கும் இன்பத்தில் கடவுள் இருக்கின்றார் அல்லவா.
"கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்" என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

சரி. இந்தப் பாடலுக்கு வருவோம்.
"உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்" என்ற வரிகளுக்கு வருவோம். இறைவன் அனைத்திலும் அடங்கியிருக்கின்றானா? மின்சாரம் விசிறியில் இருந்தால்தான் விசிறி சுற்றுகின்றது. மின்சாரம் இல்லையென்றால் விசிறி ஓடுவதில்லை. அப்படி விசிறியைக் கட்டுப் படுத்தும் மின்சாரம் விசிறியோடு இருப்பது போல உலகினையே கட்டுப் படுத்தும் இறைவன் உலகோடே இருக்கின்றார். அப்படி உலகோடு இருப்பவர் உலகப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருக்கின்றார். அதை உணர்ந்தவர் ஆண்டாள். ஆகையால்தான் காலை விடியும் சூரியனின் பெருஞ்சுடரில் இறைவனைக் காண்கின்றார். ஒரு ஆற்றல் அளியாக இருந்து உலகு காப்பது பகலவனே! ஆகையால்தான் இளங்கோவும் ஞாயிறு போற்றுதும் என்று சிலப்பதிகாரத்தைத் துவக்குகின்றார்.)

உன்னை எதிர்க்கின்றவர்கள் எல்லாம் தங்கள் வலிமையை இழந்ததோடு மட்டுமில்லாமல் உன்னுடைய திருவடியையே சரணடைந்து பணிவது போல உன்னைப் போற்றியே புகழ்ந்தே வரக்காண்பாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

1 comments:

said...

மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசல்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து...

அடியார் ஆகிய ஆண்டாளும் தோழியர்களும் போற்றிக் கொண்டு வந்ததை ஏன் மாற்றார் தங்கள் வலிமையை எல்லாம் இழந்து அவன் அடி பணிவதைப் போல் வருவதாகச் சொல்கிறாரோ?