Wednesday, December 21, 2005

பாவை - ஆறு

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


காலைப் பொழுதை வரவேற்க புள்ளினங்கள் குரல் கொடுக்கின்றதைக் கேட்டாயோ! பறவை மேல் அமர்ந்த அரயன் கோயிலில் வெண்ணிறச் சங்கமானது அனைவரையும் வாவென்று அழைக்கும் பேரொலியைக் கேட்டாயோ! எழுந்திராய் பிள்ளாய்!

(விடியலில் முதலில் எழும் ஒலியே பறவைகளின் ஒலிதான். என்றைக்காவது பறவைகள் காலந்தாழ்ந்து எழுந்ததுண்டா? விடியலைக்கூட சேவல் கூவித்தானே அறிகிறோம். ஆகையால்தான் தமிழன் சேவலை தனது கடவுளின் கொடியில் கண்டான்.

இன்னொரு செய்தி. வெறும் சங்கம் என்று சொல்லாமல் விளி சங்கின் பேரரவம் என்று கூறியிருக்கிறார். ஏன்? எல்லா ஒலிகளும் நம்மை அழைப்பதில்லை. சில ஒலிகளைக் கேட்டாலே நாம் அந்த இடத்தை விட்டு நகர விரும்புவோம். ஆனால் புள்ளரையன் கோயில் சங்கொலி நம்மை வரவேற்கும் விதமாக இருந்ததாம். இறையொலி எப்பொழுதும் நம்மை அழைக்கத்தானே செய்யும்.
)

பறவையொலி கேட்டாய். கண்ணன் கோயில் சங்கம் ஊதி அழைக்கக் கேட்டாய். எழுந்திருப்பாய் தோழி. பூதனையில் நஞ்சு தடவிய முலையில் பாலுண்டு பூதனைக்கே நஞ்சான பிஞ்சே கண்ணன். கள்ளச் சக்கரமாக உருண்டு வந்த அரக்கனை தோள்கள் திரண்டு அழித்த சிறுவனே மாதவன்.

(விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். கண்ணனும் அப்படித்தான் குழந்தையாக இருந்த பொழுதே கண்ணனின் தெய்வத் தன்மைகள் வெளிப்பட்டன. குழந்தையாக இருந்த பொழுதே ஏசுபிரானும் தீர்க்கதரிசி என அழைக்கப்பட்டதாகச் சொல்வார்கள். குழந்தையாக இருந்த பொழுதே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டும் என்று இதனால்தான் சொன்னார்கள்.)

பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்ட உயிர்களுக்கெல்லாம் உயிரான அந்த உயர்ந்தவனை உள்ளத்தில் நினைத்துக் கொண்டு பெரும் முனிவர்களும் தவயோகிகளும் விடியலையிலேயே மெள்ள எழுந்து அரி என்ற பெயரை பாசத்தோடு உச்சரிக்கும் பேரானந்த ஒலியால் உனது உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சியில் குளிர்வாய் எம்பாவாய்.

(இறைவனை எப்படியெல்லாம் உணர்வது? சுவையை நாவில் உணரலாம். ஒலியைக் காதில் உணரலாம். ஒளியைக் கண்ணில் உணரலாம். நாற்றத்தை நாசியில் உணரலாம். தென்றலை மேனியில் உணரலாம். அதுபோல இறைவனையும் உணர முடிந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா. புலன்களுக்கெல்லாம் எட்டாத இறைவன் புலன்களுக்கு எட்டுவானா என்றால் நிச்சயமாக எட்டுவான். எட்ட மாட்டான் என்றால் எட்டான். அப்படிச் செவி வழி இறைவனை உணர்வது எங்ஙனம்?

கண்ணா என்ற பெயரும் கந்தா என்ற பெயரும் அனைவருக்கும் பக்தியை ஊட்டுமா என்றால் இல்லை என்பதே விடை. அப்பொழுது எல்லாரும் உணர முடிகின்ற ஒலிகளில் இறைவனை உணர வேண்டும். காலை எழுந்ததும் காதில் விழுகிறவை பறவைகளின் ஒலிகளே. காலை எழுந்ததிற்கே இறைவனிடம் நன்றி சொல்லி விட்டு பறவையொலிகளில் இறைவனைக் காண வேண்டும். பிறகு கோயில் சங்கின் ஒலி. பிறகுதான் கண்ணனின் திருநாமங்கள். இதுதான் வரிசைக்கிரமம். அதனால்தான் சைவர்களும் ஓங்கார ஒலியை சேவலின் குரலில் கண்டார்கள். இந்த அளவிற்கு இயற்கையோடு இணைந்த தமிழ் வழிபாட்டு முறைகளே சிறப்பு.
)

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

நன்றாய் வந்திருக்கிறது இராகவன். இங்கு மினசோட்டாவில் உள்ள குளிரில் எல்லாப்புள்களும் வெப்பப்பிரதேசத்திற்குச் சென்று விடுவதால் காலை எழுந்தவுடன் புள் சிலம்பின ஓசை கேட்பதில்லை. அதற்கு தமிழ்நாட்டிற்குத் தான் வரவேண்டும்.

said...

நன்றி குமரன்.

தமிழ்நாட்டுல மட்டும் என்ன தெனமும் சேவல் கூவியா பொழுது விடியுது? அதெல்லாம் எங்கையாவது பட்டிக்காட்டுக்குப் போனாத்தான் கேக்கலாம்.

காலை எழுந்ததும் புள்ளோசை கேட்டது அந்தக் காலம்
காலை எழுந்ததும் காப்பியைக் கேட்பது இந்தக் காலம்
காலை எழுந்ததும் தமிழில் படித்தது அந்தக் காலம்
காலை எழுந்ததும் நியூஸ் பேப்பர் படிப்பது இந்தக் காலம்

இப்படிப் பாட்டு மாதிரி பாடிக்கிட்டே போகலாம். ஒங்க பங்குக்கு நீங்களும் ரெண்டு சொல்லுங்க.

said...

இராகவன்,
//காலை எழுந்ததும் நியூஸ் பேப்பர் படிப்பது இந்தக் காலம்
//
என்னைப் போன்ற ஆட்களுக்கு ப்ளாக் படிப்பது இந்தக் காலம் என்று இருக்கவேண்டும்.

அதுக்கு முன்னாடி இன்னிக்கு காலம்பர எழுந்துக்கணுமான்னும் ஒரு குட்டி பட்டிமன்றம் நடக்கும். :))

said...

þó¾ À¡ð Ê ø «Ã¢ ±ýÈ §ÀÃÃÅõ ¯ûÇõ ÒÌóÐ ±ýÈ Åâ ¸ñ½ý ´Ä¢ ÅÊÅ¡¸ ¯ûÇò¾¢ø
ÒÌóРŢð¼¡ý ±ýÀ¨¾ ÌȢ츢ÈÐ ¾¢ á ºþó¾ À¡ð Ê ø «Ã¢ ±ýÈ §ÀÃÃÅõ ¯ûÇõ ÒÌóÐ ±ýÈ Åâ ¸ñ½ý ´Ä¢ ÅÊÅ¡¸ ¯ûÇò¾¢ø
ÒÌóРŢð¼¡ý ±ýÀ¨¾ ÌȢ츢ÈÐ ¾¢ á º

said...

// அதுக்கு முன்னாடி இன்னிக்கு காலம்பர எழுந்துக்கணுமான்னும் ஒரு குட்டி பட்டிமன்றம் நடக்கும். :)) //

ஓ நம்ம கூட்டணி நீங்க........கையக் குடுங்க.... :-)

said...

// þó¾ À¡ð Ê ø «Ã¢ ±ýÈ §ÀÃÃÅõ ¯ûÇõ ÒÌóÐ ±ýÈ Åâ ¸ñ½ý ´Ä¢ ÅÊÅ¡¸ ¯ûÇò¾¢ø
ÒÌóРŢð¼¡ý ±ýÀ¨¾ ÌȢ츢ÈÐ ¾¢ á ºþó¾ À¡ð Ê ø «Ã¢ ±ýÈ §ÀÃÃÅõ ¯ûÇõ ÒÌóÐ ±ýÈ Åâ ¸ñ½ý ´Ä¢ ÅÊÅ¡¸ ¯ûÇò¾¢ø
ÒÌóРŢð¼¡ý ±ýÀ¨¾ ÌȢ츢ÈÐ ¾¢ á º //

நல்ல விளக்கம் தி.ரா.ச. அருமையாகச் சொன்னீர்கள். இது போலவே உங்கள் கருத்துகளை நீங்கள் ஒவ்வொரு பாவிலும் இட வேண்டும்.